வவுனியாவில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் மரணமானார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. நேற்றிரவு 10.30 மணியளவில் மகாரம்பைக்குளத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வடிவேலு (வயது 45) என்பவரே மரணமானவராவார். உணவகம் ஒன்றை நடத்தி வரும் இவர் நேற்றிரவு ஓட்டோவில் பயணித்துக் கொண்டிருந்த போது பின் தொடர்ந்து வந்தவர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டு தப்பிச் சென்றனர்.
இதில் ஓட்டோவில் பயணித்தவர் ஸ்தலத்திலேயே பலியானார். சடலம் முழுவதும் சூட்டுக் காயங்கள் காணப்பட்டன. மரணமானவர் முன்னர் வவுனியா நகரில் சன் ரீ.வி மீள் ஒளிபரப்பு நிலையத்தை நடத்தி வந்தவர் எனறும் ரெலோ அமைப்பின் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் முன்னர் போட்டியிட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மரணமடைந்தவரின் சடலத்தின் அருகில் வெற்றுத் தோட்டாக்கள், மற்றும் கைப் பை ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பில் அயலவர்கள் தெரிவிக்கையில், இரவு எங்கள் வீட்டுக்கு அண்மையில் வாகனச் சத்தம்கேட்டது. அதன் பின் துப்பாக்கி சூட்டுச் சத்தங்களும் கேட்டன. காலையில் பார்த்தபோதே வீதியில் ஒருவர் இறந்து கிடந்தார்- எனத் தெரிவித்தனர்.
சடலத்தை நேரில் பார்வையிடுவதற்காக வவுனியா நீதவான்கள் இருவர் சம்பவ இடத்தில் தகவல்களை திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதனையும், புலனாய்வுத்துறையினர், பொலிஸார் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொள்வதனை படங்களில் காணலாம்.
படங்களும் தகவல்களும் இ.தர்சன்