3 நாட்களுக்கு முன் வித்தியா! 3 மாதத்துக்கு முன் சரண்யா!

369
வன்னியை சேர்ந்த 16 வயதுடைய சரண்யா எனும் பாடசாலை மாணவி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் கிளிநொச்சி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

ஆங்கில ஊடகமொன்று வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையிலேயே இது தொடர்பிலான விபரம் உள்ளடக்கப்பட்டுள்ளது.

சரண்யா பெற்றோரை இழந்த பாடசாலை மாணவி. 2006ம் ஆண்டு இடம் பெற்ற யுத்தத்தில் சரண்யாவின் தந்தை உயிரிழந்ததுடன், அவரது தாயார் விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

அவரது பாட்டியின் அரவணைப்பிலேயே சரண்யா மற்றும் அவரது இரண்டு இளைய சகோதரர்களும் வாழ்ந்து வந்துள்ளனர்.

மிகவும் நெருக்கடிக்குள்ளான சூழ்நிலையிலும் சிறப்பாகவே பாட்டி அவரது பேரப்பிள்ளைகளை பாதுகாத்து வந்தார்.

எனினும் சரண்யாவின் மரணத்தில் மறைந்திருக்கும் மர்மங்களை வெளிக்கொணரும்படி அவரது பாட்டி வைத்தியரிடம் கேட்டுள்ளார்.

குறைந்தது மூன்று பேராவது இணைந்து சரண்யாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளதாக பாட்டியின் கேள்விகளுக்கு குறித்த வைத்தியர் பதிலளித்துள்ளார்.

உள்ளூர் ஊடகங்களுக்கு இது தொடர்பான தகவல் கிடைக்கப்பட்டதன் பின்னர் பொலிஸார் சரண்யாவின் பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளனர்.

சரண்யா பாலியல் பலாத்காரத்தினால் கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான விபரங்களை மறைத்து மனநோய் காரணமாகவே உயிரிழந்தார் என கூறுமாரு பாட்டிக்கு பொலிஸார் அழுத்தம் பிரயோகித்துள்ளனர்.

பொலிஸாரின் கோரிக்கைக்கு பாட்டி இணங்காவிட்டால் சரண்யா தவறான நடத்தை கொண்ட பெண்ணாக சித்தரிக்கப்படுவார் என பொலிஸார் பாட்டியை அச்சுறுத்தியுள்ளனர்.

ஆனால் பாட்டி பொலிஸாரின் அச்சுறுத்தல்களை பொருட்படுத்தாது அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுத்து விட்டார்.

இக்கட்டுரையினை எழுதிக்கொண்டிருக்கும் போதே இன்னுமொரு யாழ்ப்பாண பாடசாலை மாணவி வித்யாவின் கொலை வெளியாகியுள்ளது என கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மை நிலை

சரண்யா மற்றும் தற்போது வித்யாவின் கதை இலங்கை பதிவுகளில் ஒன்றும் புதியதொன்றில்லை. இராணுவத்தினரால் தமிழ் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான பல்வேறு கதைகள் உள்ளன.

இவ்வாறான கதைகள் உதறித்தள்ளப்படுகின்றமையினால் இன்னும் குழப்பமடைய செய்கின்றது.

இவ்வாறான கதைகளினால் அரசாங்கத்தின் புகழை சேதப்படுத்துவதை தவிர வேறு ஒன்றும் இல்லை என குற்றம் சுமத்துகின்றார்கள்.

இதேவேளை, தமிழ் பெண்களுக்கு, குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்முறை விகிதங்கள் இன்னும் அளவிடப்படவில்லை.

வடக்கில் இடம் பெறுகின்ற இவ்வாறான அசம்பாவிதங்கள் குறித்து ஆதாரங்கள் காணப்படுகின்ற போதிலும் குற்றம் இழைத்தவர்கள் தொடர்பில் நம்பத்தகுந்த சாட்சிகளும் ஆதாரங்களும் இல்லை.

இவ்வாறான வன்முறை அனுபவங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை எந்த வகையிலும் மாற்றி அமைக்க முடியாது.

இராணுவம் மற்றும் சட்ட அமுலாக்க முறைகளை தெரிந்துகொண்டால் மாத்திரமே நம்மால் அங்கு வாழமுடியும் அல்லது இருக்க முடியும்.

சரண்யா வழக்கு பற்றிய செய்தி தொடர்ந்து, சரண்யாவின் அகால மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பல துணிச்சலான பெண்கள், தங்கள் கற்பழிப்பு அனுபவங்கள் மற்றும் அவர்கள் எதிர்கொண்ட அபாயத்தை தங்கள் பிள்ளைகளுக்கு நேர்ந்து விடக்கூடாதெனும் நல்லெண்ணத்தில் நடவடிக்கை மேற்கொள்ள முன்வர வேண்டும் என கட்டுரை ஆசிரியர் கோரியுள்ளார்.

புங்குடுதீவு மாணவி “வித்யா” கொலையில் வெளிவரும் பணப் பரிமாற்றல்.

புங்குடுதீவு உயர்தர மாணவி வித்தியா சிவலோகநாதன் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கொலைச் சந்தேகநபர்களென மக்கள் இனங்கண்ட மேலும் ஐவரை பொலிஸார் இன்று கைது செய்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

ஏற்கனவே இச்சம்பவத்தின் கொலை சந்தேகநபர்களான புங்குடுதீவு வல்லனை சேர்ந்த “பத்தாயிரம் ரூபாவுக்கு கொலை செய்யும்” கூட்டத்தை சேர்ந்த ரவி, மற்றும் அவரது சகோதரரான கொழும்பில் தொழில் புரியும் செந்தில், மற்றும் இவர்களது இன்னொரு சகோதரரான சின்னாம்பி என்பவரும், மற்றும் ரவியின் கூட்டாளியான “பத்தாயிரம் ரூபாவுக்கு கொலை செய்யும்” கூட்டத்தை சேர்ந்த கிருபா என்பவரும் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலும், பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையிலும் மேற்படி ஐவர் இன்று கைது செய்யப்பட்டு உள்ளனர்.

அதாவது சந்திஹாசன், சசி, ஊத்தைக்கண்ணன், மற்றும் சிவத்தின் மகன் உட்பட ஐவரும் இன்று கொழும்புக்கு தப்பிச் செல்ல (டால்பின் வாகனமொன்றில்) இருந்த நிலையில் ஒரே வீட்டில் இருந்தே இவர்கள் கைது செய்யப்பட்டவர்கள் எனவும், இவர்களே இக்கொலையின் பின்னணியில் இருந்த அதாவது “நேரடியாக சம்பந்தப்பட்டவர்களே இவர்கள்” எனவும் சந்தேகிக்கப் படுகிறது. இதன் எதிரொலியாகவே இவர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மேற்படி அனைத்து விபரங்களையும் துல்லியமாக புலனாய்வு செய்து உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய முழுமையாக பாடுபட்டவர் தமிழ் பொலிசார் ஒருவர் எனவும், இவர் ஏற்கனவே பல கொலைக் குற்றவாளிகளை துல்லியமாக கண்டு பிடித்தவர் எனவும் தெரிய வருகிறது. (இருப்பினும் வழக்கு விசாரணை தொடர்வதால் சம்பந்தப்பட்ட பொலிசாரின் பெயரை வெளியிட விரும்பவில்லை.)

இதேவேளை பொதுமக்கள், மேற்படி சந்தேகநபர்களை தம்மிடம் ஒப்படைக்கக் கோரி பொலிஸாரை பின்தொடர்ந்தனர். வீதிகளை முற்றுகையிட்டு ரயர்களைப் போட்டுக் கொழுத்தி ஆர்ப்பரித்தனர். பொதுமக்கள் குறிகட்டுவான் பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டு, வீதிகளையும் மறித்து “சந்தேகநபர்களை தம்மிடம் ஒப்படைக்கக் கோரி” ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது பொலிஸார் ஒருவர் காயமடைந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது. நிலைமையை கட்டுப்படுத்த முடியாத பொலிஸார் சந்தேகநபர்களை யாழ்ப்பாணம் கொண்டு சென்றனர்

SHARE