3 பாகிஸ்தான் பிரஜைகள் கைது

205

கொழும்பு – 12 இல் உள்ள  வீடொன்றை சுற்றிவளைத்த நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த பாகிஸ்தான் பிரஜைகள் மூவரை நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தகவல் ஒன்றின் அடிப்படையில், அந்த வீட்டை முற்றுகையிட்ட அதிகாரிகள் முறைகேடான வகையில்  தயாரிக்கப்பட்டிருந்த 7500 வெள்ளை, நீல சவர்க்காரக்கட்டிகளையும், 250 பார்சோப் கட்டிகளையும், 15 லீற்றர் கொள்ளளவான 3500 போத்தல்களில் அடைக்கப்பட்ட உடலுக்கு பூசுவதற்கான வாசனைத் திரவங்களையும் (Body lotion) ,  நகத்துக்கு பூசுவதற்கான 3000 கியூடெக்ஸ்  போத்தல்களையும் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட  இந்தப்பொருட்களில் அவை தொடர்பான எந்த விபரங்களோ, உற்பத்தி திகதி, காலாவதியாகும் திகதிகள் பற்றியோ எதுவுமே குறிப்பிடப்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட பாகிஸ்தான் பிரஜைகள் எதிர்வரும் 4 ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும்  தெரிவித்தனர்.

சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இந்தப்பொருட்கள் சந்தைக்கு கொண்டுவரப்பட இருந்தாக தெரிவித்த அதிகாரிகள், சட்டவிரோதச் செயலில் ஈடுபடும் வர்த்தகர்கள் விடயத்தில் இறுக்கமான நிலைப்பாட்டை  கடைப்பிடிக்குமாறும் தயவு தாட்சண்யமின்றி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் றிஷாட் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் நுகர்வோர் பாதுகாப்பு  அதிகாரசபையின் தலைவர் கலாநிதி லலித் செனவீரவின் அறிவுறுத்தலுக்கு இணங்க சுற்றிவளைப்புக்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிததுள்ளார்.

 

SHARE