நாடாளுமன்றத் தேர்தலை நீதியான முறையில் நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேஷப்ரிய எச்சரித்துள்ளார். இன்று சனிக்கிழமை கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த தேர்தல் ஆணையர், இலங்கை அரசியல் யாப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைய தனக்கு இந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். நீதியான தேர்தலை நடத்த ஒத்துழைப்பு வழங்கத் தவறும் அரச பணியாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கினார்.
இப்படியான வழக்குகளில் குற்றவாளியாக காணப்படும் அரச பணியாளர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் ஒரு லட்சம் வரை அபராதம் விதிப்பதற்கும் நீதி மன்றத்திற்கு அதிகாரம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு அரசவளங்கள் பயன்படுத்துவதை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்று கூறிய தேர்தல்கள் ஆணையாளர், இதனை மேற்கொள்ளும்போது அரசியல் யாப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் பயன்படுத்தப்படுமென்றும் அறிவித்தார்.
இதேவேளை, ஜூலை ஆறாம் திகதி முதல் அரசாங்க மற்றும் காவல்துறையில் மேற்கொள்ளப்படும் சகல இடமாற்றங்களும் நிறுத்தப்படுமென்று கூறிய தேர்தல்கள் ஆணையாளர், உயர்தரப்பரீட்சை நடைபெறுகின்ற காரணத்தினால் வாக்களிப்பு நிலையங்களாக பாடசாலைகளை பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்வதற்கு கவனம் செலுத்தியுள்ளதாகவும் அறிவித்தார்.