356 மீற்றர் உயரத்தை கொண்ட தாமரை கோபுரத்தில் நீர் கசிவு

104

தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமாக கருதப்படுகின்ற, கொழும்பில் நிர்மாணிக்கப்படுகின்ற தாமரை கோபுரத்தின் பல இடங்களில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாமரை வடிவத்தில் நிறைவடைந்துள்ள பகுதிகளில் உள்ள கண்ணாடிகளில் இவ்வாறு நீர் கசிவதாக ஆராய்ந்த போது தெரியவந்துள்ளது.

அதற்கமைய இது தொடர்பில் மீண்டும் ஆராய்வதாக நிர்மாணிப்பு நடவடிக்கை மேற்கொள்கின்ற சீன நிறுவனம் தெரிவித்துள்ளது.

2012ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் இந்த நிர்மாணிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 100 க்கு 70 வீதமான சீன நாட்டவர்களே இந்த நிர்மாணிப்பு நடவடிக்கை பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிர்மாணிப்பு நடவடிக்கைக்காக 1404 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது.

தற்போது நூற்றுக்கு 85 வீதமான நிர்மாணிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளது. எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் 8ஆம் திகதி இந்த தாமரை கோபுரம் திறந்து வைக்கப்படவுள்ளது.

தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமாக கருதப்படுகின்ற இந்த கோபுரம் 356 மீற்றர் உயரத்தை கொண்டுள்ளது.

மிகவும் உயரமான இந்தக் கோபுரம் உலகளாவிய ரீதியில் உயரமான கட்டடமாக ஒன்பதாவது பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்வாறான நீர்க்கசிவு ஆபத்தான அறிகுறியாக இருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

SHARE