381 ரன்கள் குவித்தும் இலங்கை அணிக்கு பயத்தை காட்டிய இருவர்!

61

 

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பதும் நிசங்க ருத்ர தாண்டவம்
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பல்லேகலவில் நடந்தது.

முதலில் ஆடிய இலங்கை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 381 ஓட்டங்கள் குவித்தது. ருத்ர தாண்டவம் ஆடிய பதும் நிசங்க, ஆட்டமிழக்காமல் 139 பந்துகளில் 210 ஓட்டங்கள் குவித்தார்.

அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த அவிஷ்கா பெர்னாண்டோ 88 (88) ஓட்டங்களும், சமரவிக்ரமா 45 (36) ஓட்டங்களும் விளாசினர். பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

ஓமர்சாய் – நபி கூட்டணி
அந்த அணி 55 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்ததால், இலங்கை அணி எளிதில் வெற்றி பெற்றுவிடும் என்று தோன்றியது. ஆனால், அஸ்மதுல்லா ஓமர்சாய் மற்றும் முகமது நபி ஆகிய இருவரும் இலங்கை அணிக்கு பயத்தை காட்டினர்.

இவர்களின் மிரட்டலான ஆட்டத்தினால் ஜெட் வேகத்தில் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. இந்த கூட்டணி 242 ஓட்டங்கள் குவித்தது. இரண்டாவது சதம் விளாசிய முகமது நபி, 130 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் 15 பவுண்டரிகளுடன் 136 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் முதல் சர்வதேச சதம் விளாசிய ஓமர்சாய் இறுதிவரை களத்தில் நின்று வெற்றிக்காக போராடினார்.

இலங்கை வெற்றி
எனினும், ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 339 ஓட்டங்கள் மட்டுமே எடுத்ததால், இலங்கை அணி 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஓமர்சாய் ஆட்டமிழக்காமல் 115 பந்துகளில் 149 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 6 சிக்ஸர், 13 பவுண்டரிகள் அடங்கும்.

இலங்கை அணியின் தரப்பில் பிரமோத் மதுஷன் 4 விக்கெட்டுகளும், சமீரா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

SHARE