காங்கோ நாட்டில் 40 காவற்துறை அதிகாரிகளை தீவிரவாதிகள் தலை துண்டித்து படுகொலை செய்த கொடூர சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
ஆப்பிரிக்க நாடான காங்கோ நாட்டில் பல தீவிரவாத குழுக்களுக்கும், அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் இருந்து வருகிறது.
இதனால் அங்கு உள்நாட்டு போர் இடம்பெற்று வருகின்றது. காங்கோவின் மத்திய பகுதியில் உள்ள கசாய் மாகாணத்தில் காம்வினா சாபு என்ற தீவிரவாத அமைப்பு ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் அந்த அமைப்பின் தலைவர் ஜீன்-பியரே பன்டி என்பவர் காவற்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதை தொடர்ந்து இங்கு காம்வினா சாபு தீவிரவாத அமைப்பினர் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் கசாய் மாகாணத்தில் இதுவரை 400 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.
எனவே அங்கிருந்து 2 இலட்சம் பேர் வெளியேறி வேறு இடங்களில் குடியேறியுள்ளனர்.
அங்கு நிலைமையை சீரமைக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே அங்கு சிகாபா-கனங்கா இடையே காவற்துறையினர் வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஒரு காவற்துறை வாகனத்தை காம்வினா சாபு தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். பின்னர் அதில் இருந்த 40 காவற்துறை அதிகாரிகளை தலை துண்டித்து படுகொலை செய்தனர்.
ஆனால் சகாய் பகுதியினரின் ஷிலுபா மொழி பேசிய 6 காவற்துறையினரை மட்டும் உயிர் பிழைத்து போ என கூறி விடுதலை செய்தனர்.
இச்சம்பவத்துக்கு காங்கோ அதிபர் ஜோசப் கபிலா கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் கசாய் பகுதியில் 10 பெரிய புதை குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அதில் உள்நாட்டு போரில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் மொத்தமாக போட்டு புதைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா மற்றும் சுவீடனை சேர்ந்த 2 ஐ.நா. நிபுணர்கள் 2 வாரத்துக்கு முன்பு கடத்தப்பட்டனர். 4 காங்கோ நாட்டினரும் மாயமாகி உள்ளனர்.