40 வருடங்களின் பின் உலகக் கிண்ணப் போட்டியில் டியூனிசியாவுக்கு வெற்றி

135

உலகக் கிண்ணப் போட்டியில் கன்னிப் பிரவேசம் செய்த மத்திய அமெரிக்க நாடான  பனாமாவை 2 க்கு 1 கோல்கள் அடிப்படையில் டியூனிசியா வெற்றிகொண்டது.

சரன்ஸ்க் மோர்டோவியா எரினா விளையாட்டரங்கில் நேற்று இரவு நடைபெற்ற ஜீ குழு போட்டியில் பதிவான டியூனிசியாவின் இந்த வெற்றியானது, உலகக் கிண்ண வரலாற்றில் 40 வருடங்களின் பின்னர் ஈட்டப்பட்ட வெற்றியாகும்.

இப் போட்டியில் டியூனிசியா சார்பாக பக்ரெதின் பென் யூசெவ் போட்ட கோல் உலகக் கிண்ண வரலாற்றில் 2500 ஆவது கோலாகப் பதிவானது.

போட்டியின் ஆரம்பம் முதல் திறமையை வெளிப்படுத்திய வண்ணம் விளையாடிய டியூனிசியா கோல் போடுவதற்கான சில வாய்ப்புகளைப் பெற்றது. ஆனால் போட்டியின் 33 ஆவது நிமிடத்தில் டியூனிசியா போட்டுக்கொடுத்த சொந்த கோல் பனாமாவை முன்னிலையில் இட்டது.

சற்று தூரத்திலிருந்து பனாமா வீரர் ஜொசெலூயிஸ் ரொட்றிகஸ் கோலை நோக்கி உதைத்த பந்தை டியூனிசியா பின்கள வீரர் யாசின் மெரையா திசை திருப்ப முற்பட்டார். அதேவேளை கோல்காப்பாளர் அய்மென் மத்லூத்தி பிழையான திசைக்குத் தாவ சொந்த கோல் ஒன்று பனாமாவுக்கு கிடைத்தது.

இடைவேளையின் பின்னர் ஆக்ரோஷத்துடன் விளையாடிய டியூனிசியா 51 ஆவது நிமிடத்தில் பக்ரெதின் பென் யூசெவ் மூலம் கோல் நிலையை சமப்படுத்தியது. இந்த கோலே 88 வருட உலகக் கிண்ண வரலாற்றில் போடப்பட்ட 2500 ஆவது கோலானது.

இந்த கோல் போடப்பட்டு 11 நிமிட்களில் வாஹ்பி காஸ்ரி போட்ட கொல் வட ஆபிரிக்க நாடான டியூனிசியாவை முன்னிலையில் இட்டதுடன் அதன் வெற்றி கோலாகவும் அமைந்தது.

ஆர்ஜன்டீனாவில் நடைபெற்ற 1978 உலகக் கிண்ணப் போட்டிகளில் ஈட்டிய வெற்றியின் பின்னர் டியூனிசியாவுக்கு கிடைத்த முதல் வெற்றி இதுவாகும். 1978இல் மெக்சிகோவை 3 க்கு 1 என்ற கோல்கள் அடிப்படையில் டியூனிசியா வெற்றிகொண்டிருந்தது.

SHARE