தீபாவளி தினத்தன்று கிளிநொச்சி நாவல்நகரைச் சேர்ந்த கந்தசாமி பாலசுப்பிரமணியம் என்பவரை மோட்டார் சைக்கிள் சைலன்சரினால் தாக்கிக் கொலை

323

kele

 

 

கடந்த 2010 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தன்று கிளிநொச்சி நாவல்நகரைச் சேர்ந்த கந்தசாமி பாலசுப்பிரமணியம் என்பவரை மோட்டார் சைக்கிள் சைலன்சரினால் தாக்கிக் கொலை செய்தமைக்காக முதலாவது எதிரியாகிய ஆவேல் அன்ரனி என்பவருக்கு நீதிபதி இளஞ்செழியன் 12 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்துள்ளார்.

இதே வழக்கில் இரண்டாவது எதிரியாகிய பெனடிற் மனோகரனை நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.

கிளிநொச்சி நாவல் நகரில் கந்தசாமி பாலசுப்பிரமணியம் என்பவருடைய வீட்டிற்கு, கடந்த 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7 திகதியான தீபாவளி தினத்தன்று நிறைந்த மதுபோதையில் சென்று, பாலசுப்பிரமணியத்தின் மனைவியிடம் கோபம் ஏற்படுத்தும் வகையிலான வார்த்தைப் பிரயோகம் செய்தது, அவரைத் தாக்கிக் கொலை செய்தது, அத்துடன், ஐயம்பிள்ளை ஐயாத்துரை மற்றும் பிரசாந்தன் ஆகிய இருவருக்கும் சிறுகாயம் ஏற்பத்தியது ஆகிய மூன்று குற்றச்சாட்டுக்களை சுமத்தி, ஆவேல் அன்ரனி மற்றும் பெனடிட் மனோகரன் ஆகிய இருவருக்கும் எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக விசாரணை செய்யப்பட்டு வந்த இந்த வழக்கில் 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நீதிபதி இளஞ்செழியன் முதலாம் எதிரியாகிய ஆவேல் அன்ரனிக்கு 12 வருட கடூழியச் சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபா தண்டமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார். தண்டப்பணம் செலுத்தத் தவறினால், 6 மாதக் கடூழியச் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஐயம்பிள்ளை ஐயாத்துரை, பிரசாந்தன் ஆகியோருக்கு காயம் ஏற்படுத்தியமைக்காக தலா 10 ஆயிரம் ரூபா தண்டம் செலுத்த வேண்டும் என்றும் தண்டம் செலுத்தத் தவறினால், தலா 6 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அந்தத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆவேல் அன்ரனி, பெனடிற் மனோகரன் ஆகிய இரண்டு எதிரிகளும், தீபாவளி தினத்தன்று, கிளிநொச்சி நாவல் நகரில் உள்ள இறந்தவரின் வீட்டுக்குச் சென்று அவருடைய மனைவியிடம் கோபம் ஏற்படுத்தும் வகையில் வார்த்தைப் பிரயோகம் செய்துள்ளனர்.

அத்துடன், அங்கு திடீர் சண்டை ஏற்படுத்தி, கந்தசாமி பாலசுப்பிரமணியத்தை முதலாவது எதிரியாகிய ஆவேல் அன்ரனி மோட்டார் சைக்கிள் சைலன்சரினால் தலையில் தாக்கியுள்ளார்.

அங்கு இடம்பெற்ற சண்டையின்போது, இரண்டாவது எதிரியாகிய பெனடிற் மனோகரன் கையில் கருக்கு மட்டை ஒன்றை வைத்திருந்தார். ஆயினும் அவர் எவரைதயும் தாக்கவில்லை என வழக்குத் தொடுனர் தரப்பு சாட்சியங்கள் தெரிவித்ததையடுத்து 2 ஆவது எதிரி பெனடிற் மனோகரனை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

முதலாவது எதிரியினால் தாக்கப்பட்ட கந்தசாமி பாலசுப்பிரமணியம் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்துடன் கிளிநொச்சி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு, அங்கு 10.11.2010 ஆம் திகதி அவர் மரணமானார் என இறந்தவருடைய மனைவி நீதிமன்றத்தில் அளித்த சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில், வழக்கு தொடுனர் தரப்பில் சாட்சிகளாக அழைக்கப்பட்ட அனைத்து சாட்சிகளும் முதலாம் எதிரி ஆவேல் அன்ரனி, மதுபோதையில் சண்டை பிடித்து, மோட்டார் சைக்கிள் சைலன்சரினால் இறந்தவைரத் தலையில் தாக்கினார் என ஒப்புறுதி சாட்சியமளித்துள்னர்.

மருத்துவ பரிசோதனை நடத்திய வைத்தியர் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில், மொட்டையான ஆயுதம் ஒன்றினால் இறந்தவரின் தலையுச்சியில் பலமான விசையுடன் தாக்கியதனால் மரணம் ஏற்பட்டது என தெரிவித்துள்ளார். அத்துடன் நீதிமன்றில் காட்டப்பட்ட சான்றுப் பொருளாகிய மோட்டார் சைக்கிள் சைலன்சரினால் தாக்கியிருந்தால் இத்தகைய காயம் ஏற்படும் என தனது அபிப்பிராயத்தையும் தெரிவித்தார்.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் இரத்தக்கறை காணப்பட்டதை, தனது புலனாய்வு பரிசோதனையின் போது கண்டதாக பொலிஸ் தரப்பில் அளிக்கப்பட்ட சாட்சியத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளின் முடிவில், இந்த வழக்கில் முதலாவது எதிரி ஆவேல் அன்ரனி தானாகவே விரும்பி தன்னிச்சையாக மதுபோதையில் இருந்துள்ளார். இறந்தவரின் மனைவியுடன் அநாகரிகமான முறையில் வார்த்தைப் பிரயோகம் செய்து, பகிடி சேட்டை விட்டு கோபம் ஏற்படுத்தியுள்ளார். இங்கு நின்று தேவையில்லாமல் சண்டையிட வேண்டாம் என அவரை இறந்தவர் கலைத்தபோது, இறந்தவராகிய கந்தசாமி சுப்பிரமணியத்தை ஆவேலி அன்ரனி சைலன்சரினால் தாக்கியமை நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் சாட்சியங்களின் மூலம் வழக்குத் தொடுனரினால் எண்பிக்கப்பட்டுள்ளது. எனவே குற்றவாளியாகக் காணப்பட்டுள்ள முதலாவது எதிரி அன்ரனி ஆவேலுக்குத் தண்டனை வழங்கப்படுகின்றது என நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

அந்தத் தீர்ப்பில் நீதிபதி இளஞ்செழியன் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தீபாவளி இந்துக்களின் மிகவும் முக்கியமான பண்டிகைத் தினமாகும். அது, அநீதி ஒழிக்கப்பட்டு பிரகாசமான வாழ்வுக்கு வழிவிடும் தினம். அத்தகையதொரு நன்னாளில் இந்தக் கொலைச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தினால், ஒரு பெண் அபலையாக, விதவையாக்கப்பட்டுள்ளார். அவருடைய குழந்தைகள் தந்தையற்றவைகளாக அனாதைகளாக்கப்பட்டுள்ளன. கணவனின் மரணத்தினால், குடும்பத்தின் வருமானம் இழக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தக் குடும்பத்தின் வாழ்க்கை சீரழிக்கப்பட்டுள்ளது.

இங்கு நடைபெற்ற சம்பவத்தில் முதலாவது எதிரியே குடும்பப் பெண்ணிடம் சேட்டைவிட்டு, கோபத்தை உண்டாக்கி, திடீர் சண்டையை ஏற்படுத்தியதுடன், இறந்தவரைத் தாக்கியுள்ளார். இதனால் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக கந்தசாமி பாலசுப்பிரமணியம் இறந்துள்ளார். எனவே, குற்றவாளியாகக் காணப்பட்டுள்ள முதலாவது எதிரிக்கு 12 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபா தண்டமும் விதிக்கப்படுகின்றது.

இரண்டாவது எதிரிக்கு எதிராகக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டபோதிலும், நிதிமன்றத்தில் அளிக்கப்பட்ட சாட்சியங்கள் அங்கு நடைபெற்ற சண்டையில் அவர் எவரையும் தாக்கவில்லை என தெரிவித்துள்ளன. எனவே அவரை இந்த நீதிமன்றம் விடுதலை செய்கின்றது

என நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

SHARE