![]() நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவினை சமைக்கபயன்படுத்தும் மசாலா பொருட்களில் கூட நோய் எதிர்ப்பு சக்தியை தரும் சத்துக்கள் அடங்கியுள்ளன. மஞ்சள் இதில் உள்ள ‘குர்குமின்’ (Curcumin) என்ற வேதிப் பொருள் புற்று செல்லை தடுக்கும் தன்மைகொண்டது. செல்களில் வீக்கம் அல்லது அழற்சி ஏற்படாமல் தடுக்கும் (Anti inflammatory effect) ஆற்றலும் மஞ்சளுக்கு உண்டு. காயங்களை ஆற்றவும், அனைத்து விதமான தோல் நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படும். பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளிடம் இருந்து நம்மைப் பாதுகாக்கும். குங்குமப்பூ குங்குமப்பூ தொண்டை நோய்களுக்குச் சிறந்த மருந்து. முக்கியமாக இதுவும் புற்றுநோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது. ‘கீமோதெரப்பி’ (Chemo Therapy), ரேடியேஷன் தெரப்பி (Radiation therapy) எடுத்தவர்களுக்கு அதன் பக்க விளைவுகளைத் தடுப்பதற்குக் குங்குமப்பூ பக்கபலமாக இருக்கிறது. இஞ்சி இஞ்சி ஓர் இயற்கையான பதப்படுத்தும் (preservative) பொருள். பசியைத் தூண்டும். கபத்தைத் தணிக்கக்கூடியது என்பதால்தான் சளி, இருமல் போன்றவற்றுக்கு இஞ்சிக் கஷாயம் தரப்படுகிறது. குடல், ஆசனவாய், சினைப்பை புற்றுநோய்க்கு இது மருந்தாகப் பயன்படும். குறிப்பாகச் சினைப்பை புற்றுநோய்க்கு மிகவும் சிறந்தது. சீரகம் உடலைச் சீராக வைக்கக்கூடிய ஆற்றல் உள்ளதால்தான், இதை சீரகம் என்கிறார்கள். செரிமான சக்தியை அதிகரிப்பது, வாத நோய்களைக் கட்டுப்படுத்துவது, குன்மம் என்ற கட்டிகளைக் குணப்படுத்துவது போன்ற மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது. இதில் உள்ள ‘தைமோக்யூனைன்’ (Thymoquinone) என்ற வேதிப் பொருள், புற்று நோய்க்கு எதிராகச் செயல்படக்கூடியது. புற்றுநோய் உருவாகக் காரணமாய் இருக்கும் திசுக்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது. கணையத்தில் உள்ள ‘பீட்டா’ (Beta) செல்களைப் பாதுகாக்கிறது. வெறும் சீரகத் தண்ணீரை தினமும் குடித்தால்கூடப் போதும். உடலுக்கும் தொண்டைக்கும் நல்லது. பூண்டு உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் தன்மை இதற்கு உண்டு. இதய நோய்க்குச் சிறந்தது. குறிப்பாக, இது மார்பகப் புற்றுநோயைத் தடுக்கிறது. கட்டிகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது. வயிற்றில் புற்றுநோய் வரக் காரணமாக இருக்கும் ‘ஹெலிகோபேக்டர் பைலோரி’(Helicobacter pylori) என்ற பாக்டீரியாவை அழிக்கும் ஆற்றல் பூண்டில் உள்ளது. மேலும், லுகேமியா என்னும் ரத்தப் புற்றுச் செல்களை அழிக்கிறது. பூண்டை, தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். |