5 கோடி கடனுக்காக முதியவரை மணக்கும் பெண்… கடைசியில் நிகழ்ந்த எதிர்பாராத மாற்றம்!…

196

தமிழ் திரைப்படங்களுக்கு கதை தேடி அலையும் தயாரிப்பாளர்களுக்கு தீனி அளிக்கக் கூடிய வகையில் சவுதி அரேபியா நாட்டில் சுவாரஸ்யமான சுயம்வர நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. சவுதியில் வாழும் ஒருவர் தனது குடும்ப செலவினங்களுக்காக ஒரு பணக்காரரிடம் இருந்து சிறுகச் சிறுக சுமார் 30 லட்சம் ரியால்களை கடனாக வாங்கியிருந்தார்.

நீண்ட காலம் ஆகியும் வாங்கியவர் பணத்தை திருப்பி செலுத்தாததால் வெறுத்துப் போன பணக்காரர், போலீசில் புகார் அளித்தார். அந்நாட்டின் சட்டத்தின்படி, இது தொடர்பாக நடைபெற்று வரும் வழக்கில் கடனை அடைக்கும் வரை பிரதிவாதியை சிறையில் அடைக்க நேரிடும்.

குடும்பக் கடனை அடைக்க முடியாமல் பெற்ற தந்தை சிறையில் வாடப் போவதை அன்றாடம் நினைத்து, நினைத்து அழுது தவித்த ஒரே மகள், அவரை தண்டனையில் இருந்து மீட்பதற்காக தனது இளமையை தியாகம் செய்ய தீர்மானித்தார்.

கடன் கொடுத்த 60 வயது முதியவரை இருபதே வயதான அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். என் தந்தை மீதான கடனை தள்ளுபடி செய்தால் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன். அந்த பணத்தை எனக்கு தந்த வரதட்சணையாக (அரபு நாட்டு வழக்கப்படி) கணக்கில் வைத்துக் கொள்ளுங்கள் என்று அவர் தெரிவித்தார்.

தனது வீட்டுக்கு வந்து, திருமணம் செய்து அழைத்து செல்லும்படி கூறிய அந்த பெண், அதற்கான ஏற்பாடுகளையும் துரிதமாக செய்தார். திருமணப் பதிவாளரை (இமாம்) வீட்டுக்கு வரவழைத்த அவர் மணமகனின் வரவுக்காக வழி மீது விழி வைத்து காத்திருந்தார்.

சொன்ன நேரத்திற்கு சரியாக வந்த ‘மாப்பிள்ளை’ அந்த இளம் பெண்ணுடன் சுமார் ஒரு மணி நேரம் தனியாக பேசினார். தனக்கு ஏற்கனவே 3 மனைவியர் இருப்பதாக அவர் கூறியபோது, ‘நான்காவதாக ஒரு ஓரத்தில் இருந்து கொள்கிறேன். கடனில் இருந்து என் தந்தையை விடுவித்தால் போதும்’ என்று கெஞ்சினார்.

ஒரு முடிவுடன் வழக்கறிஞருடன் வந்திருந்த முதியவர், தான் வழங்கிய கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். அத்துடன் மேலும் 3 லட்சம் திர்ஹம் ‘செக்’கை எழுதி கையொப்பமிட்டு அவர் அந்த பெண்ணிடன் அளித்தார். ‘இதை என்னுடைய திருமண சீதனமாக ஏற்றுக்கொள். உன் வயதுக்கு ஏற்ற ஒரு வாலிபரை திருமணம் செய்து கொண்டு நீ மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்’ என ஆசீர்வதித்து விட்டு சென்றார்.

தந்தையை பிரிய விரும்பாமல் முதியவரான தன்னை திருமணம் செய்துக் கொள்ள முன்வந்த அந்த இளம்பெண்ணின் குடும்பப் பாசத்தையும், தியாகத்தையும் மெச்சிப் பாராட்டிய அவர், மீண்டும் இதைப் போன்ற முடிவுக்கு நீ சென்று விடக் கூடாது என்று எச்சரித்து விட்டும் சென்றார்.

இந்திய மதிப்புக்கு சுமார் 5 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்ததுடன், கடன்காரரின் மகளுக்கு மேலும் 5 கோடி ரூபாயை திருமண அன்பளிப்பாக வழங்கிய அந்த முதியவரின் தயாள குணம், விரைவில் எந்த தமிழ் படத்திலாவது, திரைக்கதையின் மையக்கருவாக இடம் பெற்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 

SHARE