திரைக்கு வந்து 5 நாள்களிலேயே ரூ. 215 கோடியை ‘பாகுபலி’ திரைப்படம் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மிகக் குறுகிய நாள்களில் வசூலில் 200 கோடி ரூபாயைத் தொட்ட இந்திய சினிமா என்ற பெருமையையும் ‘பாகுபலி’ பெற்றுள்ளது.
இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் மிகப் பிரமாண்டமான திரைப்படமாக கடந்த 3 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட ‘பாகுபலி’ திரைப்படம், கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்தது. சரித்திரகால திரைப்படம் என்றாலும், தொழில்நுட்ப ரீதியில் மிக நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை ‘பாகுபலி’ பெற்றுள்ளது.
தெலுங்கு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளிவந்துள்ள பாகுபலி அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய வெளிநாடுகளிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திரைக்கு வந்த 5 நாள்களில் ரூ.215 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மூலம் குறுகிய நாள்களில் 200 கோடி ரூபாயைத் தொட்ட திரைப்படம் என்கிற பெருமை பாகுபலிக்குக் கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் 4 ஆயிரம் தியேட்டர்களில் பாகுபலி திரையிடப்பட்டது.
தமிழகம் முழுவதும் 500 தியேட்டர்களில் வெளியானது. படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.76 கோடி வசூலித்து, திரையுலகில் பரபரப்பை உண்டாக்கியது. பாகுபலி ரூ.250 கோடி செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம். இதில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹிந்தியில் வெளியான பாகுபலி, நம்பமுடியாத வசூலைப் பெற்று வருகிறது. இதுவரை 5 நாள் கணக்காக ரூ. 35 கோடியை வசூலித்துள்ளது. இதற்கு முன்னதாக எந்திரன் 290 கோடி ரூபாய் வசூலித்தது ஒரு சாதனையாக இருந்தது. அதை உடைக்க முயன்று வருகிறது பாகுபலி திரைப்படம்.