தமிழ் சினிமாவில் பத்தாண்டுகளைக் கடந்து நடைபோடும் தற்காலக் கதாநாயகியரில் ஒருவர் த்ரிஷா. அவர் திரையுலகுக்கு வந்து 12 ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஜெயம்ரவியுடன் மூன்றாவது முறையாக த்ரிஷா ஜோடி சேர்ந்திருக்கும் ‘சகலகலா வல்லவன்’ த்ரிஷாவுக்கு 48 ஆவது படம். இப்போதும் இளமைத் துடிப்புடன் நடித்துக்கொண்டிருக்கும் த்ரிஷா வழங்கிய நேர்காணல்.
உங்களுடைய 50 ஆவது படம் எப்படி அமைய வேண்டும் என நினைக்கிறீர்கள்?
என்னுடைய 50 ஆவது படம் ‘தூங்காவனம்’ அல்லது ‘அரண்மனை 2’ ஆகிய படங்களில் ஒன்றாக இருக்கும். எது என்பது எனக்கு உண்மையில் தெரியாது. இரண்டு படப்பிடிப்புகளுமே மிகவும் வேகமாக நடந்து வருகின்றன. ‘தூங்காவனம்’ படத்தில் உள்ள பாத்திரம் போல இதுவரை நான் பண்ணியதே இல்லை. வேறு ஒரு வித்தியாசமான கெட்டப்பில் த்ரிஷாவைப் பார்க்கலாம்.
‘அரண்மனை-2’ என்னுடைய முதல் பேய் கொமெடி படம். ஒரு இடத்தில் கூட போர் அடிக்காத மாதிரி படம் நன்றாக வந்திருக்கிறது. சுந்தர்.சி ஒவ்வொரு படம் ஆரம்பிக்கும்போதும், இந்தப் படம் நாம் இணைந்து பண்ணலாமா என்று கேட்கும்போதெல்லாம் பல்வேறு காரணங்களால் நடிக்க முடியாமல் போய் இருக்கிறது. இறுதியாக இந்தப் படம் மூலமாக இணைந்திருக்கிறோம்.
தொடர்ந்து படங்கள் ஒப்பந்தமாவதன் ரகசியம் என்ன?
திரையுலகிலும் நிறைய பேர் ‘என்ன திடீர்னு நிறைய படங்கள் பண்ணுறீங்க?’ என்று கேட்கிறார்கள். எந்த நடிகையை எடுத்துக்கொண்டாலும் 6 மாதம் இடைவெளி விழும். அப்புறமாக தொடர் படங்கள் வரும். எனக்குத் தொடர்ந்து பெரிய நடிகர்கள், இயக்குநர்கள் படங்கள் கிடைப்பது அதிர்ஷ்டம்தான் என்று சொல்ல வேண்டும்.
நீங்கள் இதுவரை நடித்த படங்களுள் உங்களால் மறக்க முடியாத படம் எது? ஏன்?
என்னைப் பொறுத்தவரை நான் பண்ணிய 48 படங்களுமே சிறந்த படங்கள்தான். ஒரு படத்தை மட்டும் தனியாக நான் சொல்ல முடியாது. என்னுடைய ஒவ்வொரு படத்தையும் நான் தேர்வு செய்ய ஒரு காரணம் இருக்கிறது. பெரிய நடிகர் மற்றும் இயக்குநர், சின்ன நடிகர் மற்றும் இயக்குநர் என்று எல்லாம் நான் பார்ப்பதே இல்லை. கதை நன்றாக இருந்தால் போதும் யாருடனும் நடிக்கத் தயாராகிவிடுவேன்.