இராணுவத்தினர் தனது கணவனை அரச பேருந்தில் அழைத்துச்சென்றதை பலர் கண்டு தனக்கு கூறியதாகவும், அவ்வாறு கணவருடன் அழைத்து செல்லப்பட்டவர்களின் தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை எனவும் இராணுவத்தினரிடம் சரணடைந்த சாந்தகுமார் என்பவரது மனைவி வாசுகி சாட்சியமளித்துள்ளார்.
கிளிநொச்சி பிரதேச செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வில், அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தனது கணவர் ஆசிரியர் தொழில் செய்ததாகவும், விடுதலை புலிகளுக்கு பகுதி நேரமாக உதவி செய்ததாகவும் குறிப்பிட்ட அவர், தனது கணவர் காணாமல் போனதன் பின்னர் அவரது ஊதியத்தினை கடந்த 2010ஆம் ஆண்டுவரை தான் பெற்றுவந்ததாகவும், அதன் பின்னர் கணவரின் மரண சான்றிதழை ஒப்படைத்தாலே கொடுப்பனவை வழங்க முடியுமெனவும் கூறி, அது நிறுத்தப்பட்டதாக ஆணைக்குழுவிடம் வாசுகி முறையிட்டார்.
இந்நிலையில், தனது மூன்று பிள்ளைகளின் கல்வி மற்றும் தனது வாழ்வாதாரத்தினை முன்னெடுக்க கணவரின் ஊதியத்தையாவது பெற்றுத்தருமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த ஆணைக்குழுவின் தலைவர், கணவரின் மரண சான்றிதழை தற்காலிகமாக பெற்றுக்கொண்டு சலுகைகளை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்தபோதும், மரண சான்றிதழை பெற்றுக்கொள்ள முடியாதென்றும் தமது கணவனை தேடித் தருமாறும் வாசுகி கேட்டுக்கொண்டார்.