102 நீர் தேங்கும் பகுதிகளில் 3ல் இரண்டு பிரதேசங்கள் மக்களால் அத்துமீறி சட்டவிரோதமான கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன – மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எம்.உதயகுமார்

243
மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் இருந்த 102 நீர் தேங்கும் பகுதிகளில் 3ல் இரண்டு பிரதேசங்கள் மக்களால் அத்துமீறி சட்டவிரோதமான கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன என்று மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.
 இன்றையதினம் (16) மட்டக்களப்பு பார் வீதி தோணாவை துப்பரவு செய்யும் கொத்தணி முறையிலான சுத்திகரிப்பு வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் தலைமையுரையாற்றும் பொதே அவர் இதனைத் தெரிவித்தார்.
 உள்ளுராட்சி மன்றங்களின் கொத்தணி முறையிலான சுத்திகரிப்பு வேலைத்திட்டத்தின் மூன்றாவது கட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (16) மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்திற்குட்பட்ட பார்வீதி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டது.
 மட்டக்களப்பு மாநகர சபை, ஏறாவூர்ப் பற்று பிரதேச சபை, ஏறாவூர் நகர சபை ஆகியவை இணைந்து இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
 இந்த துப்பரவு செய்யும் வேலைத்திட்டத்தில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்கள் கொத்தணியாக இணைந்து அவர்களுடைய பிரதேசங்களிலிருக்கின்ற வேலைகளை நடைமுறைப்படுத்துகின்ற வகையில் கிழக்கு மாகாண முதலமைச்சரினால் ஏற்படுத்தப்பட்டதாகும்.
இந்த சிரமதான நிகழ்வு முக்கிய நோக்கம் என்னவென்றால் உள்ளுராட்சி மன்றங்கள் வளம் நிறைந்த உள்ளுராட்சி மன்றங்களைப் பகிர்ந்துகொண்டு அந்த வளங்கள் உச்ச மட்டத்தில் பகிர்ந்துகொண்டு பயன்படுத்தி மக்களுடைய தேவைகளை நிறைவு செய்யவேண்டும் என்பதாகும்.
அந்த வகையில் எங்களுடைய கொத்தணி உள்ளுராட்சி மன்றங்கள் வளங்களைப் பயன்படுத்தி இந்த செயற்பாட்டினை நடைமுறைப்படுத்தியிருக்கிறோம். இதற்கு முன்னர் ஏறாவூர்ப் பற்று பிரதேச சபை, ஏறாவூர் நகர சபை பிரதேசங்களில் இவ் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
எதிர்வரும் மழைக்காலத்தினைக் கருத்தில் கொண்டு மட்டக்களப்பு பார் வீதி தோணாவைத் துப்பரவு செய்கின்றோம். ஆனால் அதிகமான தோணாக்கள் மக்களினால் முறையற்ற விதத்திலே அபகரிக்கப்பட்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. இவ்வாறான சமூகச் சிந்தனையில்லாத செயற்பாடுகளினால் மட்டக்களப்பில் இருக்கின்ற அனைத்து மக்களும் பாதிக்கப்படுகின்ற நிலை இருக்கின்றது. மழை காலத்தில் வெள்ள நீர் வடிந்தோடுவதற்கு இயற்கையான வடிகான்களாக தோணாக்கள் காணப்பட்டன.
ஆரம்ப காலங்களில் மட்டக்களப்பு நகரத்தினை ப்பொறுத்தவரை 102 நீர் தேங்கியிருக்கக் கூடிய இடங்கள் இருந்திருக்கின்றன. அவை தற்போது அவற்றில் 3ல் இரண்டு பகுதியான நீர்த்தேக்கங்கள் நிரப்பி மக்கள் சட்டவிரோதமான கட்டங்களைக் கட்டியிருக்கின்றதனால் மழைக்காலத்தில் நீர் வழிந்தோடும் நிலை பாதிக்கப்பட்டு வெள்ளப் பெருக்குகள் ஏற்படுகின்றன. அந்த நேரத்தில் கூட பொது மக்கள் மாநகர சபையைத்தான் நொந்து கொள்கின்ற நிலை காணப்படுகின்றது.
இந்தச் சட்டரீதியற்ற முறையில் கட்டங்களைக்கட்டுவதனை தவிர்ப்பதற்கு அதற்குரிய நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் தவிர்த்துக்கொள்ள முடியும் என்றார்.
இந்த நிகழ்வில், கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, இரா.துரைரெட்ணம், உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.சித்திரவேல், மாநகர சபை, ஏறாவூர்ப் பற்று பிரதேச சபை, ஏறாவூர் நகர சபைகளின் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
unnamed (3)
unnamed
unnamed (2)
SHARE