இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 8 மீனவர்கள், ஊர்காவற்றுறை நீதிமன்றால் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
அவர்களில் ஒருவர் சட்டமா அதிபரின் பணிப்புக்கு அமைவாக மீண்டும் கைதுசெய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இந்திய மீனவர்கள் 8 பேரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி ஊர்காவற்றுறை நீதிமன்றால் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டனர்.
அவர்கள் மீரிகம தடுப்பு முகாமுக்கு இந்தியாவுக்கு கொண்டு செல்வதற்காகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
விடுவிக்கப்பட்ட மீனவர்களில் ஒருவர், இதே குற்றச்சாட்டுக்காக ஏற்கனவே கைது செய்யப்பட்டு எச்சரிக்கையுடன் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் ஆராய்ந்த சட்டமா அதிபர் திணைக்களம், நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்து வழக்கை மீளாய்வு செய்யுமாறு நீரியல்வளத் திணைக்களத்தினரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.
இதனையடுத்து மீனவர் தொடர்பில் கடந்த 22 ஆம் திகதி, சட்டமா அதிபர் திணைக்களம் நீரியல்வளத் திணைக்களத்தின் ஊடாக ஊர்காவற்றுறை நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு சென்றது.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட மீனவருக்கு 2 ஆண்டு காலச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மீரிகம தடுப்பு முகாமிலிருந்த இந்திய மீனவர் தற்போது வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.