வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சால் ரூபா 9 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட முழங்காவில் பேரூந்து நிலையம் வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட பூநகரி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட முழங்காவில் பகுதியில் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சால், வினைத்திறனானதும், பாதுகாப்பானதுமான போக்குவரத்து சேவையை வடக்கு மாகாண மக்களுக்கு வழங்கும் நோக்கோடு போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களின் திட்டத்திற்க்கமைவாக இந்த பேரூந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்திற்காக மாகாண அபிவிருத்தி நன்கொடையின் (PSDG) கீழ் 9 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்விற்கு சகல மத குருக்கள், வடக்கு மாகாண சபையின் கௌரவ உறுப்பினர்களான அரியரத்தினம் பசுபதி, அனந்தி சசிதரன் மற்றும் கணபதிப்பிள்ளை வல்லிபுரம் கமலேஸ்வரன் ஆகியோரும் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.ஏ.பத்திநாதன், அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.சத்தியசீலன், மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர் திரு.டி.சிவராஜலிங்கம், அமைச்சின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ.சுரேந்திரனாதன், அமைச்சின் பிரதம கணக்காளர் திருமதி.அனந்த கிருஷ்ணன், பூநகரி பிரதேச செயலாளர் திரு.சி.கிரிஷ்நேந்திரன், வீதி அபிவிருத்தித் திணைக்கள கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் பிரதம பொறியியலாளர் திரு.எஸ்.ஜெகானந்தன் மற்றும் பூநகரி பிரதேச சபையின் செயலாளர் திரு.சிவப்பிரகாசம் ஸ்ரீ பாஸ்கரன் மற்றும் திணைக்கள தலைவர்கள் கிராம மட்ட அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.