94 இல் இருந்து 2007 வரைக்கும் அனைத்து தமிழ் மக்களின் அழிவுக்கும் பொறுப்பானவர் சந்திரிக்கா- யுத்தம் நடக்கும் போது மைத்திரியும் இதைத்தான் செய்தார் உண்மைகளை வெளியிடும் கருணா

446

0-1

முரளீதரன் என்னும் இயற்பெயர் கொண்ட கருணா மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று கிராமத்தில் 1966ஆம் ஆண்டு பிறந்தார். அங்கேயே ஆரம்பக் கல்வி கற்றுப் பின், செயிண்ட் மைக்கல் கல்லூரியில் பயின்ற காலகட்டத்தில், 1983ஆம் ஆண்டு கிழக்கிலங்கையின் அம்பாறை மட்டக்களப்பு மாவட்டப் பொறுப்பாளராகக் கீர்த்தி அம்மன் செயல்பட்டுவந்தார். அவரிடம் போய்ச் சேர்ந்தார் கருணா. ஒரே ஆண்டில் தன் தனித்திறமை, துணிச்சல் காரணமாக இந்தியாவில் போர்ப் பயிற்சி பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் கருணாவின் பெயரும் இடம்பெற்றது.

இந்தியாவிலிருந்து பயிற்சிபெற்றுத் திரும்பியவர்களில் கருணா தனித் திறமைகளோடு செயல்பட்டார். திறமை, விவேகம், போர்த்திறன், விசுவாசம் போன்றவற்றால் விடுதலைப் புலிகளின் கமாண்டோ பிரிவில் சிறப்புத் தேர்ச்சி பெற்று மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்குத் தளபதியாகப் பொறுப்பேற்றார். இக்காலத்தில் மேற்கண்ட இரண்டு மாவட்டங்களின் லெப்டினன்ட் கர்னல் கண்ணனுக்கு உதவியாளராக இருந்து முக்கியத் தாக்குதல்களில் ஈடுபட்டார்.

1985 – 1987ஆம் ஆண்டுகளில் இலங்கை அதிரடிப் படையும் ராணுவமும் பல தாக்குதல்களில் தோல்வியைத் தழுவியமைக்குக் கண்ணனும் கருணாவுமே மூல காரணம். கண்ணன் எக்காலத்திலும் கீழே படுத்துப் பதுங்கிப் போர் செய்பவரல்ல. சிங்களப் படைகளை எதிர்கொண்டு முன்னேறிச் செல்லும் வீரம் படைத்தவர் – தன் படைகளுக்குப் பின்னே நின்று போர் புரியாமல் முன்னே சென்று எதிரிகளை அழிக்கும் இவர் சிங்கள ராணுவத்துக்குச் சிம்மசொப்பனமாக இருந்தார். அதில் கருணாவின் பங்கும் அதிகமாக இருந்தது.

karuna-1-e1441074326586இந்த நேரத்தில் கிழக்கிலங்கையில் அதிகமான இளைஞர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் வந்துசேர்ந்தார்கள். பிரபாகரன் அங்கே தானாகவே இயங்கிப் போர்புரிய ஒருவரைத் தேர்ந்தெடுத்துத் தளபதியாகவும் தலைவராகவும் நியமிக்க எண்ணியபொழுது கண்ணனின் பெயரே முன் இருந்தது. அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்குத் தலைவராகக் கண்ணனின் பெயரை நினைத்திருந்த சமயம் 1990இல் ராணுவத்துக்கெதிரான கடும்போர் மூண்டது. அதில் சிங்கள ராணுவம் மோசமான தோல்வியைத் தழுவியமைக்குக் கருணாவின் செயல்பாடுதான் முக்கியக் காரணம். லெப்டினன்ட் கர்னல் கண்ணன் மட்டக்களப்பு, அம்பாறைத் தளபதியாகவே போர்க்களத்திலிருந்து திரும்புகிறார். இந்நேரத்தில் தானே தளபதியாகவும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்குத் தலைவனாகவும் ஆக வேண்டுமென்ற எண்ணம் கருணாவின் மனத்தில் எழுந்தது. தனக்கென்று விசுவாசமானவர்களைத் தேர்ந்தெடுத்தார். உள்சதியும் துரோகமும் உருவான இதற்கு உடன்பட்ட லெப்டினன்ட் ரூபன் என்பவர் கருணாவின் உறவினர் மட்டுமல்ல அவருக்கு மிக நெருக்கமானவரும்கூட.

சிங்களப் படையினரை வெற்றிகொண்டு தலைவராக இருப்பிடம் திரும்பிய லெப்டினன்ட் கர்னல் கண்ணன் ஒரு சிங்கள ராணுவத் தளபதியின் உடலில் அபூர்வமான நவீனத் துப்பாக்கியைப் பார்த்து அதை எடுப்பதற்குக் கீழே குனிந்தபொழுது தலையில் சுடப்பட்டு அங்கேயே இறந்தார். சிங்கள ராணுவம் பல கிலோ மீட்டர் தூரம் பின்தங்கி ஓடிவிட்ட பிறகு கண்ணனை யார் சுட்டிருப்பார்கள்? இந்தக் கேள்வி தலைவர் பிரபாகரனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ராணுவத் தாக்குதலில் தளபதி கண்ணன் கொல்லப்பட்டுவிட்டதாகப் பிரபாகரனுக்குக் கருணா அறிவித்தார்.

லெப்டினன்ட் கர்னல் கண்ணனின் இறப்பில் ஏதோ ‘சதி’ நடந்திருக்கிறது என்பதை அறிந்த பிரபாகரன் ரூபனைத் தன்னை வந்து உடனே பார்க்கும்படி உத்தரவிட்டார். ரூபன் யாரையும் காட்டிக்கொடுக்கவில்லை. ரூபனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போராளிகளாலும் மக்களாலும் ‘அம்மான்’ என்னும் சிறப்பு அடைமொழியால் அழைக்கப்பட்ட கருணா இலங்கை ராணுவத்திற்கெதிரான போர்முனைகளில் முதன்மையான போராளியாகப் போற்றப்பட்டார். வீட்டுக்கு ஒருவர் என விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேரக் கருணாவை நம்பியே மக்கள் மனமுவந்து தங்கள் பிள்ளைகளை அனுப்பிவைத்தனர்.

1994 – 95இல் முல்லைத் தீவு, ஆனையிறவு ஆகிய இடங்களில் கடும்போர் மூண்டது. ஒவ்வொரு நாளும் வெற்றிச் செய்திகள் வந்தவண்ணமிருந்தன. சிங்கள ராணுவம் முழுபலத்துடன் போரிட்டும் பல டாங்கிகளையும் கவச வாகனங்களையும் பறிகொடுத்தது. ஆனையிறவின் கி9 பிரதான சாலையில் 2002இல் யாழ்ப்பாணம் செல்லும்பொழுது இப்படியான சில கவச வாகனங்கள் சிதிலமடைந்து கிடந்ததை நேரில் பார்த்திருக்கிறேன். இந்தக் கடும்போரில் கருணாவின் படையும் ஜெயந்தன் என்னும் மற்றொரு தளபதியின் 5000 புலிப் படையும் மிகப் பெரிய வெற்றியை ஈட்டின. இவ்வெற்றிக்குப் பிறகு, பிரபாகரனின் மிக நம்பிக்கைக்குரியவராகக் கருணா உருவானார். தன் உடன் பிறந்த தம்பிபோலவே இவரை நடத்தினார் பிரபாகரன். பிரபாகரன் தங்கியிருக்கும் எந்த இடத்திற்கும் எந்த நேரத்திலும் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கருணாவுக்குக் கிட்டியது.

2002இல் ரனில் விக்கிரமசிங்கே – பிரபாகரன் சமாதானப் பேச்சுவார்த்தை தாய்லாந்தில் நடைபெற இருந்தது. மறுநாள் காலை விமானத்தில் புறப்படுவதற்கு முன் புலிகள் தரப்பில் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்பவர்களின் ஆலோசனைக் கூட்டம் கிளிநொச்சியில் பிரபாகரன் தலைமையில் இரவு முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அக்கூட்டத்தில் கருணாவும் இருந்தார்.
A9 சாலையைச் சீர்செய்ய ரூபாய் 600 கோடியை உலக வங்கி மூலம் ஒதுக்கியிருந்தது ஸ்ரீலங்கா. இந்தச் சாலையைச் சீர்ப்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கவும் நான் கிளிநொச்சிக்குப் போக வேண்டிய சூழல் ஏற்பட்டது. சமாதான காலமான அந்நேரத்தில் யாரும் என்னோடு வர முடியாது என்று சொல்லிவிட்ட பிறகு, நான் தனியாகவே அங்கே சென்றடைந்தேன். போக்குவரத்துப் பிரச்சினைகளைச் சமாளித்துக் கிளிநொச்சியை அடைந்து அன்றே யாழ்ப்பாணம்வரை செல்லத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் அன்றுதான் கிளிநொச்சியில் ரகசிய இடமொன்றில் தாய்லாந்து செல்ல வேண்டிய குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்ததால் என்னை அங்கே தங்கச்சொல்லிவிட்டார்கள். என் ஆஸ்திரேலிய நண்பர் ஜோய் மகேஸ்வரனும் அந்தத் தாய்லாந்துப் பேச்சுவார்த்தைக் குழுவில் இருக்கிறார் என்பதைத் தெரிவித்தனர். அவர் பின்னிரவு முடிந்தால் என்னைச் சந்திக்க வருவதாகச் செய்தியனுப்பினார். அதிகாலை 2:30 மணிக்கு என்னோடு அந்த கி9 சாலை பற்றிப் பேசுவதற்கு உயர் மட்டக்குழு வந்தது. அவர்கள் உலகச் சாலை அமைப்பின் புதிய முறைகளுக்கு 18 ஆண்டுகள் பின்தங்கியிருந்தார்கள். அது அவர்களின் குற்றமல்ல. 18 ஆண்டுகள் போர்ச்சூழலில் அவர்கள் இந்தச் சாலையமைப்பின் புதிய தொழில்நுட்ப அறிவைப் பெற்றிருந்தால்தான் ஆச்சரியம். அப்பொழுதுதான் கருணாவை எதேச்சையாகச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.

அந்த மின்னல் வெட்டு நேரத்தில் என் மனத்திற்கு இவர் ‘சரியான ஆளல்ல’ என்று ஏனோ தோன்றியது. இப்படிப்பட்ட கணிப்புகள் பலமுறை சரியாக இருந்திருக்கின்றன. இம்முறையும் என் அனுமானம் தப்பவில்லை. மறுநாள் நான் யாழ்ப்பாணம் புறப்படும் பொழுது கருணா தாய்லாந்துப் பேச்சுவார்த்தைக் குழுவில் புலிகள் தரப்பில் ராணுவப் பேச்சாளராகப் பிரபாகரனால் நியமிக்கப்பட்டுள்ளதை அறிந்தேன். அதன் பிறகு ஜெனிவா, நார்வே மற்றும் பல இடங்களுக்குக் கருணா, பிரபாகரனின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். இக்காலகட்டத்தில் பிரபாகரனின் மற்றொரு முகம்போலவே கருணா இயங்கினார்.

வெளிநாட்டுப் பேச்சுவார்த்தைகளின்பொழுதே இவருக்கும் சிங்களத் தரப்பு அரசாங்கத்துக்கும் நெருக்கம் ஏற்பட்டது. கொஞ்சங்கொஞ்சமாகக் கருணா அவர்களின் பக்கம் திரும்ப ஆரம்பித்தார். கொழும்பில் ரகசியமாகத் தங்கிய இடங்களில் இவருக்கும் சிங்கள அரசுக்கும் பேரங்கள் நடைபெற்றன. விடுதலை இயக்கத்தை இரண்டாகப் பிரிப்பதே முதல் வேலையாக இவரிடம் தரப்பட்டது. இதற்கு மில்லியன் கணக்கில் பணம் கைமாறியது. இவர் பிற்காலத்தில் லண்டனுக்குச் சென்றதற்கும் இந்தப் பணம் கைமாறியதற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ரனில் விக்கிரமசிங்கே ஆட்சியில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான செய்யத் அலி ஷாகிர் மௌலானாதான் இந்த இருதரப்புப் பேச்சுவார்த்தையின் நடுநிலை நாயகர்.

இந்நேரத்தில் மற்றொரு தரப்பும் இந்தப் ‘பிரிக்கும்’ பேச்சுவார்த்தையில் முக்கியப் பங்குவகித்தது. இந்திய உளவுப் படைப்பிரிவின் ‘ரா’தான் அது. கருணா அவர்களின் பக்கம் மிக ரகசியமாக நெருங்கியதைப் பிரபாகரன் அறியாமல் போனதுதான் ஆச்சரியம்.

ஆனையிறவு வெற்றி, கருணாவின் அர்ப்பணிப்பு, வேகம் மற்றும் பிரபாகரனிடம் அவர் காட்டிய மரியாதை இவையெல்லாம் இந்தத் திரைக்குப் பின்னே நடந்துகொண்டிருந்த துரோகத்தை அவர் கண்களுக்குப் புலப்படவிடாமல் செய்துவிட்டன. இத்தனைக்கும் கருணா பற்றிப் புலிகளின் உயர்தரப்புத் தலைவர்கள் சிலர் பிரபாகரனிடம் சொன்னபொழுது அதை நம்ப மறுத்து, பொறாமையால், கருணாவின் செல்வாக்குப் பெருகுவதால் அப்படிச் சொல்கிறார்கள் என்றே அவர் நினைத்தார். ஆனால் அடுத்தடுத்து கருணாவின் நடவடிக்கைகள் வேறுவிதமாக மாறிவருவதை விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் பிரபாகரனுக்குத் தெரியப்படுத்தினார். தன்னை விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவு கண்காணிக்கிறது என்பதை உணர்ந்த கருணா மிகவும் உஷாராகி மட்டக்களப்பு உளவுப் பிரிவைக் கைதுசெய்து தனக்கெதிரானவர்களைச் சுட்டுத்தள்ளினார்.

இந்த நேரத்தில் பள்ளிக்கூடங்களில் உயர் வகுப்புப் பரிட்சைகள் நடந்துகொண்டிருந்தன. பிரபாகரன் இதைக் கருத்தில்கொண்டு எந்தக் குழப்பமும் பள்ளி மாணவர்களின் படிப்பைப் பாதித்துவிடக் கூடாது என்பதற்காகக் கருணாவின் மீதும் அவருடைய சக தோழர்களின் மீதும் நடவடிக்கை எடுக்காமல் பொறுமைகாத்தார். 41 நாட்களுக்குப் பிறகு பரிட்சை முடிந்ததும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார் பிரபாகரன்.

கருணாவின் தம்பி ‘றெஜி’யைப் படைப் பிரிவுக்கும் நிதிப் பொறுப்பாளராகக் குகனேஷ்வரனையும் தொழிற் பொறுப்பாளராக இப்போதைய கிழக்கிலங்கை முதலமைச்சர் பிள்ளையானையும் கருணா நியமித்தார். மாவட்டப் பொறுப்பாளராகத் தனது நம்பிக்கைக்குரிய தீபன் என்பவரை நியமித்தார்.

இதன் பிறகு ‘மக்கள் விடுதலைப் புலிகள்’ என்னும் கட்சியைத் தொடங்கி அதற்குத் தலைவரானதோடு அதை ஒரு அரசியல் கட்சியாகவும் பதிவுசெய்தார். கருணா தொடர்ந்து இலங்கையில் இருக்க முடியாத சூழலில் லண்டன் புறப்படும்பொழுது, கிழக்கிலங்கையில் தேர்தல் வந்தது. ராஜபக்சேயால் பிள்ளையான் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். லண்டனிலிருந்து திரும்பியதும் பிள்ளையானுக்கும் கருணாவுக்கும் நிர்வாகப் பிரச்சினைகள் தலைதூக்கின. நிதி மோசடி செய்தார் கருணா என்று அறிக்கைவிட்டு ரகு என்பவரைப் பிள்ளையான் கட்சியின் தலைவராக்கினார். கருணா எப்படி இதை ஏற்றுக்கொள்வார்? கருணாவால் ரகு சுட்டுக்கொல்லப்பட்டார்.

காட்டிக்கொடுத்தமைக்குக் கூலியாகப் பணம் மட்டும் கிடைத்தது. பதவி இல்லாமல் கருணாவால் இருக்க முடியவில்லை. கருணாவைத் தனிமைப்படுத்தினால் ஆபத்து என்றுணர்ந்த ராஜபக்சே அவரைப் பாராளுமன்ற உறுப்பினராக நியமித்து இப்பொழுது அமைச்சர் பதவியும் வழங்கியுள்ளார்.

கருணாவுக்கு ஒரு சகோதரர், மூன்று சகோதரிகள். இதில் சகோதரர் ‘றெஜி’ சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டார். சகோதரிகள் மூவரும் கணவர்மார்களுடன் தாய்லாந்தில் அகதிகளாக உள்ளனர். கருணாவின் மனைவி விடுதலைப் புலிகளின் தளபதிகளுள் ஒருவரான சூசை என்பவரின் சகோதரி. அண்மையில் கடற்புலிகளின் தாக்குதலில் ஒரு சூப்பர் பீரங்கிப் படகை இலங்கைக் கடற்படை இழந்ததும் மற்றொன்று கடும் சேதமுற்றதும் சூசையின் தலைமையில்தான்.

கடந்த கால வரலாற்றில் கருணாவுக்குப் பல விஷயங்கள் சாதகமாகவே அமைந்துவிட்டன. உண்மையில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்குத் தளபதியாக வந்திருக்க வேண்டியவர் குமரப்பா. கொக்கட்டிச்சோலை என்னும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வந்தவர் குமரப்பா. இவர்தான் அந்த மாவட்டத் தளபதியாக இருந்தார். இவர் மனைவி மருத்துவர். கிட்டு, புலேந்திரன் மற்றும் குமரப்பாவோடு 11 தளபதிகள் இந்தியக் கடற்படையால் தடுத்து நிறுத்தப்பட்ட கப்பலில் இருந்தார்கள். இந்தியக் கடற்படை புலிகளின் கப்பலைச் சோதனையிட வந்தபொழுது அதனை வெடிவைத்துத் தகர்க்க அனைவரும் மூழ்கி இறந்தனர். குமரப்பாவும் அதில் இருந்தார். இதன் பிறகே கருணாவிற்கு மட்டக்களப்புக்குத் தளபதியாகும் வாய்ப்பு கிடைத்தது.

பிள்ளையான் முதலமைச்சர் பதவி வகிப்பது கருணாவிற்கு ஏகப்பட்ட எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. பிள்ளையான் முதலமைச்சர் பதவிக்கு லாயக்கற்றவர் என்றுகூடப் பகிரங்க அறிக்கைவிட்டார். இருவருக்குமான இந்தப் பதவிப் போராட்டத்தைத் தணிக்கவே ராஜபக்சே கருணாவுக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளார். பிள்ளையான் தனது துணை ராணுவக் குழுவைக் கலைத்துவிட்டு ஆயுதங்களை அரசிடம் ஒப்படைத்துள்ளார். அதுபோலவே தனது 2000 பேர் கொண்ட படையையும் சிங்கள ராணுவத்தோடு இணைத்துவிட்டார் கருணா.
பிரபாகரனின் விடுதலைப் புலிகள் படைக்கும் கருணாவின் விசுவாசப் படைக்கும் நடந்த சண்டைகள் ‘தாயாதி’ச் சண்டைகள். ஆனால் சிங்களப் படையில் இணைந்து கருணாவின் படையில் உள்ளவர்கள் புலிகளுக்கு எதிராக எப்படித் துப்பாக்கி தூக்குவார்கள் என்பதுதான் இப்பொழுதுள்ள மிகப் பெரிய கேள்வி.

blogger-image-241173455

கருணாவின் துரோகத் தாவலுக்கு இந்திய ‘ரா’ உளவுப் பிரிவுடன் கூட்டாக வழியமைத்த செய்யது அலி ஷாகிர் மௌலானா இப்பொழுது அமெரிக்கக் குடியுரிமை பெற்று அங்கேயே ஒளிந்து வாழ்கிறார். கருணாவும் பிள்ளையானும் எதிர் எதிர் நிலையில் செயல்படுகிறார்கள். இவர்கள் எங்கே போய் ஒளியப் போகிறார்கள்? கருணாவும் பிள்ளையானும் துரோகத்தால் பெற்ற பணம், பதவி இவர்களைக் காப்பாற்ற உதவுமா? தமிழர்களுக்குச் சிங்கள அரசால் ஏற்பட்ட இன்னல்களைவிடக் கருணா, பிள்ளையான் மூலம் ஏற்பட்டவையே அதிகம். காட்டிக்கொடுப்பதும், கைக்கூலி வாங்குவதும் அதற்குத் தமிழனே காரணமாக இருப்பதும்தான் மிகப் பெரிய துயரம்.

இயக்கத்தின் முன்னை நாள் இராணுவத் தளபதி கருணா, தனக்கும் பிரபகரனுக்கும் இடையிலான முரண்பாடு என்ன என்று தெரிவித்துள்ளார். கருணாவின் திடீர் இந்தியப் பிரசன்னம் இந்திய உளவுத்துறை மீண்டும் ஈழப் பிரச்சனையில் மீண்டும் தீவிர அக்கறைகொள்வதை சுட்டிக்காட்டுகிறது. இலங்கையை தயவு தாட்சணியமின்றிக் கூறுபோடும் ஏகாதிபத்தியங்களுக்கு மத்தியில் இந்தியா தனது பங்கை எதிர்பார்ப்பது கருணாவின் ஊடாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபாகரனுக்கும் தனக்கும் இடையிலான முரண்பாடு நோர்வேயில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார். நோர்வே அமைச்சர் விதார் கல்சிசனின் தலைமையிலேயே பேச்சுக்கள் இடம்பெற்றதாகவும், அதன் ஐந்தாவது கட்டத்தில் நோர்வே அரசு திட்டம் ஒன்றை முன்வைத்தாகக் குறிப்பிடுகிறர்.

அந்த அடிப்படையில் தமக்கு சமஷ்டியைக் கருத்தில் கொண்டு பேசுங்கள் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அதற்கு இணங்கி பாலசிங்கம் கையெழுத்திட்டதாகவும், அதன் பின்னர் அச் செய்தியை இலங்கைக்குக் கொண்டு சென்ற வேளை பிரபாகரன் தனது அனுமதியில்லாமல் முடிவெடுத்தமையை கண்டித்து மாத்தையாவிற்கு இணையான துரோகியாக கருணாவைச் குறித்துக்காட்டியமையால் தான் தனது பிரதேசத்திற்குத் திரும்பிச் சென்று பிரிந்து சென்றதாகக் கருணா கூறுகிறார்.

அது மட்டுமல்ல இன்று புலம்பெயர் நாடுகளில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் உருத்திரகுமாரை நடந்தவற்றிற்குச் சாட்சியாக முன்வைத்துள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் உருத்திரகுமார் நாடுகடந்த அரசாங்கத்தின் ஆயுள் காலப் பிரதமர்.

பாலசிங்கம் கையெழுத்திட்டமையால் கருணா துரோகியாக்கப்பட்டதாகக் கருணா கூறுகிறார்.

புலிகளின் சார்பில் அன்டன் பாலசிங்கமே பேச்சுவாத்தைக்குத் தலைமை தாங்கினார். அப்படியிருந்தும் கருணா-பிரபாகரன் பிளவு ஏற்பட்டதன் காரணம் என்ன. பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு கருணா இலங்கைக்குப் பயணமானதும் கருணா – பிரபாகரன் பிளவை ஏற்படுத்துவதற்கான சதி நடந்திருக்கிறதா? கருணா பிளவைத் தூண்டிய தமிழ் நெட்டின் முன்னை நாள் ஆசிரியர் சிவராமின் பங்கு என்ன?

புலம்பெயர் நாடுகளில் புலிகளின் ஆதரவாளர்கள் போல நாடகமடிப் புலிகளை அழித்த கூட்டம் கருணா இலங்கைக்குப் பயணமாகும் இடைவெளிக்குள் பிரபாகரனுக்குப் போட்டுக்கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு புலிகளைப் பிளவுபடுத்தி அழித்தவர்கள் யார்?

கருணா இதற்கான சாட்சியாக உருத்திரகுமாரனை அழைத்துள்ளார். போராட்டத்தை ஏகபோக அரசுகளுக்குக் காட்டிக்கொடுத்து அழிப்பு நடத்திவிட்டு இன்றும் தமிழ்த் தேசியம் பேசும் பலரை அடையாளம் காட்ட உருத்திரகுமாருக்கு இது ஒரு சந்தர்ப்பம்.

கருணா அம்மான் ஒரு சிறந்த போர் வீரன் என்பதை புலம்பெயர்ந்த தமிழ் மக்களும் தமிழ்நாட்டு மக்களும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று அம்மான் பேட்டியில் சொல்கின்றார்.

அம்மான் சண்டையிலும் மட்டுமல்ல, பேச்சிலும் திறமை மிக்கவர் என்பதை பேட்டியை முழுவதுமாகப் பார்த்தால் புரிந்துகொள்ளலாம்.

புலிகளின் தோல்விக்கு இவரும் ஒரு முக்கிய காரணகர்த்தா…

ஆனாலும் அவர் சொல்கின்ற சில விடயங்கள் 100 வீதம் கேள்விகுட்படுத்த வேண்டியவை.

இவற்றை கேட்பது கருணா அம்மான் என்பதை பார்க்காமல்  அதில் உள்ள நியாயத்தன்மையும் கேள்விகளும்  முக்கியமானவை

1. கிழக்கு மாகாண போராளிகளை புலிகளின் தலைமைப் பீடத்துடன் முரண்பட்டவுடன் வீட்டுக்கு அனுப்பியதால் பல்லாயிரக்கணக்கான போராளிகளின் உயிர்களை காப்பாற்றியது
2. புலிகள் இறுதிப் போரில் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தினார்கல்
3. இறுதி யுத்தத்தில் தம் பலத்தினை நம்பியதை விட வெளிநாடுகளை நம்பினர்
4. தனிநாட்டுக்கு மாற்றான எந்தவொரு யதார்த்தபூர்வமான தீர்வுகளுக்கும் அவர்கள் தயாரில்லை
5. இந்திய படைகளிற்கு எதிரான போரில் ஓடி ஒளிந்த தளபதிகள் பற்றிய விவரங்கள்\
6. தான் பெண்களுடன் கள்ள உறவு கொண்ட ஒருவர் என்றால் ஏன் முன்னமே தன் மீது நடவடிக்கை எடுக்காமல் பிரிந்து போன பிறகு மாத்திரம் அது பற்றி குற்றம் சாட்டியது?
7. 94 இல் இருந்து7 2000 வரைக்கும் அனைத்து தமிழ் மக்களின் அழிவுக்கும் பொறுப்பானவர் இன்று மீண்டும் சமாதான வேடம் போடும் சந்திரிக்கா.
8. யுத்தம் நடக்கும் போது மைத்திரியும் இதைத்தான் செய்தார்
9. இறுதி யுத்தத்தில் வவுனியாவில் இருந்த இந்தியப் படைகள்
10.வரலாற்றில் எந்தவொரு தமிழ் நாட்டு முதலமைச்சர்களும் இலங்கைக்கு வந்து தமிழ் மக்களை சந்திக்கவில்லை
11. தலைவர் பிரபாகரன் அவர்கள் தற்கொலை செய்து இருக்க கூடிய சந்தர்ப்ப மற்றும் அவர் குணாதிசயங்கள்

இவற்றை நேர்மையுடன் அணுகக் கூடிய சூழல் தமிழ் தேசிய அரங்கில் இல்லை. ஆகக்குறைந்தது இவரது பேட்டியை முழுமையாக கேட்டு பின் அதற்குரிய பதில்களை கொடுக்கக் முடியாத அளவுக்கு கூட நேர்மையுடன் இங்கு தமிழ் சூழலில் பலர் இல்லை

1.பேச்சு வார்த்தையில் மறைந்த அன்ரன் பாலசிங்கம் அவர்களைக்
கையெழுத்திடும்படி கோரியதால் தன்னைத் துரோகி என்ற நிலைக்குப் புலிகளின் தலைமை தள்ளியவுடன் இயக்கத்தை விட்டு வெளியேறிய கருணா அவர்கள் ஆயிரக்கணக்கான போராளிகளை வீட்டுக்கு அனுப்பாமல் தான் மட்டுமே பிரிந்து சென்றிருந்தால் போராட்டத்தில் சடுதியான வீழ்ச்சி ஏற்படாமல் போயிருக்கலாம்.
கருணா அவர்கள் தான் மட்டும் வெளியேறாமல் கிழக்கு மாகாணத்தில் நிலை கொண்டிருந்த போராளிகளையும் அழைத்துச் சென்றமை கேள்விக்குரியதாகின்றது.

2.இறுதிப்போரில் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தினார்கள் என்றால்
புலிகள் யாழை விட்டு வெளியேறிய போது குடாவிற்குள் வாழ்ந்த எத்தனையோ  ஆயிரம் மக்கள் அவர்களைப் பின் தொடர்ந்தார்களே அது எப்படிச் சாத்தியமானது.
ஆக மக்கள் புலிகள் மீதுள்ள நம்பிக்கையை இறுதி வரை இழக்காமல் அவர்களைப் பின்தொடர்ந்தார்கள் என்று கொள்ளலாம்.
இறுதிச் சமரிற்கு முன்னர் நடந்த சமர்களைப் போல புலிகள் ஏதாவது ஒரு வழியில் ராணுவத்தை மீண்டும் பழைய நிலைக்குத் தள்ளுவார்கள் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்திருக்கலாம்.

3.வெளி நாடுகளை நம்பினர் என்பதனை விட இந்தியத் தேர்தலின் மூலம் முக்கியமாக சோனியாவின் வீழ்ச்சி மூலம் இந்தியக் கொள்கையில் மாற்றம் வரும் என நம்பியிருக்கலாம்.
அடுத்து மேற்குலக நாடுகள் பல  புலிகளின் முகவர்களுக்கு அளிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட  வாக்குறுதிகளை நமி ஏமாந்தனர் என்றும் நினைக்கலாம்.

4.தனி நாட்டிற்கு மாற்று வழிகள் பல புலிகளின் காலத்திற்கு முன்னரே தமிழ் அரசியல் தலைவர்களால் முன்வைக்கப்பட்டு இருந்தன.
சகல வழிமுறைகளும் சிங்கள அரசுகளால் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் தனி நாட்டிற்காக போராடச் சென்ற விடுதலைப் புலிகள் தங்கள் கொள்கையில் உறுதியாக இருந்தது பெருமைக்குரியது.
சரி 2009 இற்குப் பின்னர் சிங்கள அரசால்  புலிகள் இல்லையென அறிவிக்கப்பட்ட நிலையில்  அந்தச் சிங்கள அரசு தமிழர்களுக்கான தீர்வை எட்ட ஏதாவது வழியில் முயற்சிக்கின்றதா?
என்னைப்பொறுத்தளவில் இனப்பிரச்சனைக்கு நாங்கள் அதி உயர்வான தீர்வை முன்வைத்துப் போராடினால் மட்டுமே எதிரி மிகக்குறைந்தளவிலான தீர்வை முன்வைப்பார்கள்.

5.இந்தியப் படைகளின் காலம் வேறு மாதிரியானது.
தளபதிகள் மற்றும் போராளிகள் அந்தக் களத்தில் பாதுகாக்கப்பட்டார்களே தவிர அவர்கள் ஒளிந்து ஓடவில்லை.
பாதுகாக்கப்பட்ட தளபதிகளும் போராளிகளும் அந்தக் களத்தில் இந்தியாவுடம் மோதியிருந்தால் புலிகளால் 2009 வரை போராட்டத்தைக் கொண்டு சென்றிருக்க முடியாது.

6.புலிகள் எப்போதுமே போராளிகள் தளபதிகள் சம்பந்தமான பிரச்சனைகள் அல்லது  தங்கள் உள் விடையங்களை வெளியே செல்ல விடுவதில்லை.
கருணா அவர்கள் புலிகளை விட்டு வெளியேறியதன் பின்னர் அவர் புலிகளின் தளபதிக்கான தகமையை இழந்து விடுகின்றார்.

7.சந்திரிக்கா மட்டுமல்ல காலம் காலமாக சிங்கள  அரச தலைவர்களாக வந்த எல்லோரும் தமிழின அழிப்பில் பங்கு கொண்டிருக்கின்றனர்.
ஈழ விடுதலைப் போர் ஆரம்பமானதிலிருந்து தமிழின அழிப்பில் பங்குபற்றிய தலைவர்களில் ரணிலும் அடங்குவார்.
ஆனால் மகிந்தவின் எதிரி கருணா அவர்களுக்கும் எதிரியே என்ற கோட்பாட்டில் அவர் மகிந்தவைக் காப்பாற்றும் நிலையில் இருக்கின்றார்.

8.நிச்சயமாக மைத்திரியின் புதிய  முகம் அன்று சந்திரிகா அவர்கள் போட்ட வேசமே தவிர இவராலும் தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு எந்தத் தீர்வையும் முன்வைக்க முடியாது.

9.இந்தியப்படைகள் மட்டுமல்ல பல சர்வ தேச நாடுகள் பயங்கரவாத ஒழிப்பு  என்ற போர்வையில் இலங்கைக்குள் பல இடங்களிலும் கண்காணிப்பில் இருந்தனர்.

10.இந்திய தமிழ் நாட்டு  வம்சாவழித் தமிழர்கள் மலையகத்தில் லட்சக்கணக்கில் வாழ்கின்றனர். அல்லது பல இன்னல்களுக்கும் மத்தியில் வாழ வைக்கப்பட்டிருக்கின்றனர்.
அவர்களின் இன்னல்களுக்குக் கூட ஒரு உதவியை அவர்களால் செய்ய முடியவில்லையே. வட கிழக்கில் வாழும் தமிழர்களுக்குப் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டிருந்த நிலையில் எப்படி அவர்களால் ஒரு விஜயத்தை மேற்கொள்ள முடியும்.
அப்படி ஒரு முதலமைச்சர் இருந்திருந்தால் மத்திய அரசு உடனே தனது கையை நீட்டி அவரின் பதவியைப் பறித்துவிடுமே

11.தலைவரின் குணாதிசயங்களைக் கருணா அவர்கள் இன்றைய நிலையில் புகழ்ந்து தள்ளுவது ஆச்சரியப்படத் தக்கதல்ல.
இது சுய நலம் சார்ந்தது மட்டுமல்ல ஈழத் தமிழர்களின் குழப்பமான அரசியல் சூழ் நிலையை அவர் தனக்குச் சாதகமாக்க முயல்கின்றார் எனவும் நினைக்கலாம்.
இந்திய ஊடகம் கருணா அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பல பதிய விடையங்களை மீழாய்வு செய்வதிலும் பல பின்னணிகள் இருக்கலாம்.

கருணா ஏன் கேபியை பற்றி ஒரு வார்தையையும் உதிர்க்கவில்லை.tw_astonished:
நிருபர் கேட்கவில்லையா? அல்லது கேட்கக்கூடாது என்று சொல்லி விட்டார்களா?

விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண அரசியல் துறை பொறுப்பாளர் தயா மோகனின் மனம் திறந்த பேட்டி
விடுதலை புலிகளின் கிழக்கு மாகாண  கட்டளை தளபதியாகவும், புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்திக்க செல்லும் போது துப்பாக்கியை உடன் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்ட புலிகள் தளபதிகளில் ஒருவருமான கருணா, புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்ற போது கிழக்கு மாகாண அரசியல் பொறுப்பாளராக பணியாற்றியவர் தயாமோகன். புலிகள் இயக்கத்தில் 20 ஆண்டு காலம் பணியாற்றியவர்.
2009 மே மாதம் முள்ளிவாய்க்கால் போர் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னர் காட்டுக்குள் இருந்து ஜூன் மாதம் இஸ்லாமிய நண்பர் ஒருவர் மூலமாக கடவுச்சீட்டு எடுத்து வெளிநாட்டுக்கு சென்று தற்போது சுவிட்சர்லாந்து நாட்டில் அந்த நாட்டு அரசின் அரவணைப்பில் வாழ்த்து வருபவர். அவரை தப்பிக்க வைத்ததற்காக அந்த இஸ்லாமிய நண்பருக்கு சிறைவாசம் கிடைத்தது. துரோகியாக மாறிப்போன கருணாவுக்கும், புலிகள் தலைவர் பிரபாகரனுக்கும் இடையே நின்று இருவரிடமும் பேசிய வாழும் சாட்சிகளில் தயா மோகனும் ஒருவர். மாவீரர் தினத்தை ஒட்டி மனம் திறக்கிறார் தயா மோகன்.
கேள்வி : கருணாவின் அருகிலும், பிரபாகரனின் நேரடி தொடர்பிலும் இருந்தவர்  நீங்கள்…நேரடியாக கேள்விக்குள் செல்வோம். சமஷ்டி என்று சொல்ல கூடிய கூட்டாட்சி முறைமைக்கு பிரபாகரன் ஒப்பு கொள்ளாத காரணத்தால் தான் கருணா புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறியதாக சொல்லி இருந்தது பற்றி…?
தயா மோகன் : அது முற்றிலும் பொய். இதுபற்றி சற்று விவரமாக சொல்ல வேண்டி உள்ளது. கருணா பிரிந்து செல்வதாக அறிவித்ததற்கு முன்பே கருணா மீது பலவித குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அவற்றில் சிலது  பற்றி வெளிப்படையாக நான் சொன்னால் எமது விடுதலை போராட்டத்தை கொச்சைப் படுத்தியதாக ஆகிவிடும். அது மட்டுமல்ல அது போன்ற கருணாவின் விடயங்களை வெளிப்படுத்த வேண்டாம் என்று எம் அண்ணையே (பிரபாகரன்) எம்மிடம் சொல்லி இருப்பதால் அது பற்றி வேண்டாம்.
ஆனால் மிக முக்கியமான தவறு கருணா இயக்க பணத்தை விரயம் செய்தார் என்பதுதான். அதாவது தனது மனைவி, குழந்தைகளை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்து அதன் மூலமாக இயக்க காசை விரயமாக்கினார் என்பது தான் அவர் செய்த மிக முக்கியமான தவறு. இது பற்றி அவரின் சொந்த சாரதி (கார் ஓட்டுனர்) ஒருவர் கிழக்கு மாகாண இயக்கத்தின் நிதியை கையாளும் இன்னொரு போராளியிடம் இது பற்றி கதைக்க அந்த நபர்  கம்சன் என்ற இன்னொரு போராளியிடம்  கதைக்க அந்த போராளி அதை அண்ணையிடம் (பிரபாகரனிடம்) நேரில் வந்து புகாராக தெரிவிக்கிறார். உடனே அண்ணை கருணாவுக்கு சங்கேத பாசையில் தகவல் அனுப்புகிறார். அவர் “கருணா இப்படி ஒரு புகார் வந்து இருக்கிறது. நேரில் வந்து பிரச்னையை பேசி முடிக்கவும் ” என்று. அதற்கு கருணா…”கம்சனை எம்மிடம் ஒப்படையுங்கள்” என்று அண்ணைக்கு பதில் அனுப்புகிறார்.
அப்போதும் கூட அண்ணை மறுபடியும் பதில் அனுப்புகிறார் “கருணா வீண் பேச்சுக்கள் வேண்டாம் நேரில் வந்து பிரச்சனையை முடி” என்று. அதற்கு பதில் அளித்த கருணா “வர மாட்டேன்” என்று சொல்கிறார். இப்படிப்பட்ட நிலையில் கம்சனுக்கு தகவல் சொன்ன கருணாவின் சாரதி கொல்லப்படுகிறார்.  அதற்கு பிறகு கருணா தனது சொந்த ஊரை சேர்ந்த உறவுக்காரர் ஒருவர் உட்பட மூன்று பேரை அடுத்து அடுத்து கொல்கிறார்.
இதற்கு முன்னதாக நான் உட்பட 600 படை அணி வீரர்களை கருணா ஏற்கனவே அண்ணையின் பாதுகாப்புக்காக வடக்கிற்கு அனுப்பி இருந்தார்.
கருணாவுக்கும் அண்ணைக்கும் நடக்கும் இந்த வார்த்தை பரிமாற்றங்களின் போது நான் உட்பட கிழக்கு மாகாண  600 படை அணியினரும் அண்ணை உடன் தான் நிற்கிறோம். கருணாவுக்கு அளித்த தகவலையும், கருணா தனக்கு அளித்த பதிலையும் அண்ணை எங்களிடம் காண்பித்தார்.
இப்படிப்பட்ட நிலையில்தான் கருணா நேரில் வராமல், எங்கே தன்னை காட்டி கொடுத்து விடுவார்களோ என்று அச்சத்தின் பேரில் தன் சொந்த பந்தங்களை போராளிகளை கொல்ல தொடங்குகிறார். இதற்குப் பிறகுதான் அண்ணை சொன்னார்…இனி விட்டால் கருணா சொந்த படை அணியினரை கொன்று சிதைத்து விடுவார். எனவே கிழக்கில் சென்று புலிகள் இயக்கத்தை மீட்டு எடுங்கள் என்று கட்டளை இட்டார்.
இப்படி நடந்து கொண்டு இருக்க கூடிய நிலையில்தான் கருணா எம்மை தொடர்பு கொண்டு…600 படை வீரர்களோடு வடக்கில் அங்குள்ளவர்களை அடித்துவிட்டாவது கிழக்குக்கு வந்து விடுங்கள் என்று சொல்கிறார். நாங்கள் சொன்னோம் அது எப்படி முடியும் என்று…அதற்கு கருணா சொன்னார்..
ஒன்றும் இல்லை நீங்கள் அங்கிருந்து வந்து இலங்கை ராணுவத்திடம் வந்துவிடுங்கள் அவர்கள் உங்களை பத்திரமாக மீட்டு கப்பல் மூலமாக அழைத்து வந்து எம்மிடம் ஒப்படைத்து விடுவார்கள் என்று. எங்களுக்கு அதிர்ச்சியாகிவிட்டது…
இலங்கை ராணுவம் வழியாக வாருங்கள் என்று அவர் சொன்னதில் இருந்து கருணா இலங்கை ராணுவத்தோடு கை கோர்த்து விட்டார்..நிலைமை எல்லை மீறி போய்விட்டது என்பதை அறிந்து நடந்தவைகளை எல்லாம் , கருணா பேசியதை எல்லாம் அண்ணையிடம் காண்பித்தோம். கருணா பேசியதை நாங்கள் பதிவு செய்திருந்தோம்.
இதற்கு பிறகுதான் அண்ணை கிழக்கை மீட்டு எடுப்பதில் தீவிரம் காண்பித்தார். அப்போதும் அவர் சொன்னார்…நீங்கள் துப்பாக்கியை நீட்டுவது உங்கள் சகோதரர்களுக்கு எதிராக. முடிந்தவரை துப்பாக்கி பிரயோகம் வேண்டாம் அவர்களை அச்சுறுத்தி கைப்பற்றுங்கள் என்றார். ஆனால்.. அந்த  சண்டையில் கிழக்கு மாகாணத்தின் 23 புலிகள் இறந்து போனார்கள். அவர்களில் பொறுப்பாளர்கள் யாரும் இல்லை, அவர்கள் போராளிகள்தான் என்று உறுதியானால் அவர்களை மாவீரர்கள் பட்டியலில் சேருங்கள் என்று சொன்னார் எமது அண்ணை.
காலச்சூழல் காரணமாக கருணாவின் பிடியில் சிக்கிய அவர்கள் நமது சகோதரர்கள். எனவே அவர்களை மாவீரர்கள் பட்டியலில் சேருங்கள் என்று சொல்லி அவர்களை சேர்த்தார் எமது அண்ணை.
ஆக..கருணா பிரிந்ததன் உண்மையான பின்னணி இதுதான். இதில் சமஷ்டி கோரிக்கை எங்கே வந்தது ? கருணா பிரிவதாக அறிவித்த காலத்திற்கு ஒரு ஆண்டுக்கும் முன்னரே கருணா இலங்கை ராணுவத்தின் ஆளாக ஆகியிருந்து இருக்கிறார்.
இதுபற்றி என்னை போலவே நன்கு அறிந்த கருணாவுக்கு அடுத்த பொறுப்பில் இருந்த இன்னொரு தளபதியும் உயிரோடு இருக்கிறார். வேறு ஒரு நாட்டில் அவர் தற்போது இருக்கிறார் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் பெயரை நான் இப்போது குறிப்பிடவில்லை. அவரும் பாதுகாப்பாக அமர்ந்தபின் நாங்கள் இருவரும் கூட்டாக பேட்டி அளிப்போம்.
கேள்வி : இறுதி போரின் போது புலிகள் இயக்கம் தவறான போர் முறைகளை கையாண்டதுதான் தோல்விக்கு காரணம் என்று கருணா சொல்லி இருக்கிறாரே ?
தயா மோகன் : புலிகள் இயக்கம் பல பெரிய சமர்களை வென்ற இயக்கம். ஒட்டு மொத்த உலக நாடுகளும் எம்மீது பொறாமைப்பட்டது என்பது நீங்கள் அறியாதது அல்ல. புலிகள் இயக்கத்தை பொறுத்தவரை அதன் போர் முறை என்பது மிகவும் நுட்பமானது. ஆட்கள் குறைவு ஆனால் செயல்படும் வேகமும், முறையும் பெருத்த சேதங்களை ஏற்படுத்த கூடியது. எமது தலைவரின் உக்திகளும் போர் தந்திர முறைகளும் எவராலும் கணிக்க பட முடியாதது.
ஆனால் எம்மை காட்டி கொடுக்க தொடங்கிய பின்னர் எமக்கு அதிலும் குறிப்பாக கருணா பிரிந்து சென்றதற்கு பிறகு எமக்கு வெடி பொருட்கள் வரும் அத்தனை வழிகளும் இலங்கை ராணுவத்திற்கு தெரிந்து போனது. எங்களிடம் ஆயுதங்கள் இருந்தும் அதற்கான வெடி மருந்துகள், தோட்டாக்கள் இல்லை. அந்த வழிகளை அனைத்தும் இலங்கை ராணுவத்திற்கு காட்டி கொடுத்து அடைக்கப்பட்டன.
புலிகளின் உயர் மட்ட பொறுப்பாளர்களுக்கு மட்டும் தெரிந்த போர் முறைகள் இலங்கை ராணுவத்திற்கு தெரிய வந்து அதே முறையில் எமது போராளிகளை தாக்க தொடங்கினார்கள். அந்த முறைகள் கருணாவை  தவிர வேறு யாராலும் ராணுவத்திற்கு சொல்லி இருக்க முடியாது.  நாங்கள் ரகசியமாக வைத்து இருந்த அதனை விடயங்களும் இலங்கை ராணுவத்திற்கு தெரிந்து போனது.
இலங்கை ராணுவத்தோடு இணைந்து இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று எண்ணின. அந்த வகையில் அந்த போரில் மட்டும் நாங்கள் தோற்றுப்போனோம். ஆக…எமது தனித்துவமான போர் முறைகளை இலங்கை ராணுவத்திற்கு காட்டி கொடுத்த கருணா இப்படி சொல்வது முற்றிலும் முரணானது.
கேள்வி : புலிகள் தலைவர் பிரபாகரனின் உடலை அடையாளம் காட்டியது நான்தான் என்று சொல்லி இருக்கிறாரே கருணா ..
தயா மோகன் : ஆம்…எமது அண்ணையின் காலில் ஒரு கறுப்பு தழும்பு உள்ளதாகவும் அது தமிழ்நாட்டில் திண்டுக்கல்லில் பயிற்சி பெற்ற போது ஏற்பட்ட காயம் என்றும் கருணா ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கூறி இருந்ததை நானும் பார்த்தேன். அதை பார்த்து எனக்கு சிரிப்புதான் வந்தது. காரணம்…எமது அண்ணைக்கு இன்னொரு பெயர் உண்டு. கரிகாலன் என்று. காரணம் இலங்கையில் ஒரு போரின் போது ஏற்பட்ட காயம் அது. கருப்பாக தழும்பு இருந்ததால் அவருக்கு கரிகாலன் என்று பெயர். இது இயக்கத்தில் அனைவருக்குமே தெரிந்த ஒன்று. இதில் இருந்தே கருணா பொய் சொல்கிறார் என்பது உங்களுக்கு புரியும்.
கேள்வி : கருணா எதற்கு பொய் சொல்ல வேண்டும்..?
(குறுக்கிட்டு )
தயாமோகன் : அதை அவரிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும். நான் அரசியல் பொறுப்பாளராக இருந்தவன்தான்…ஆனால் இனி எந்த அரசியலுக்கும் நான் செல்லப்போவது இல்லை. ஆனால்..கருணா சமீப காலமாக கொடுத்து வரும் பேட்டிகளில் புலிகள் தலைவர் பற்றியும், இயக்கம் குறித்தும் தவறான தகவல்களை பரப்பி வருகிறார். அவற்றை எமது மக்கள் கேட்டு குழப்பமடைகிறார்கள். எனவே அந்த காலகட்டங்களில் உடன் நின்றவர்களில் நானும் ஒருவன் என்பதால் எமது மக்களுக்கு தெளிவு படுத்தவே நான் முன்வந்து இந்த பேட்டியை அளிக்கிறேன். கருணா அவ்வாறு சொல்லிக்கொண்டு இருப்பதற்கான காரணம் இந்த பேட்டி மக்களிடம் சென்று சேரும்போது புரியும் என்று எண்ணுகிறேன்.
கேள்வி : சரி..நானே கேட்கிறேன் பிரபாகரன் எங்கே ?
தயா மோகன் : (பலமாக சிரித்து விட்டு) அவர் எங்கே என்ன என்றெல்லாம் இப்போது சொல்ல முடியாது. ஒன்று மட்டும் நிச்சயம் எம் அண்ணை சொன்னது இதுதான் நாட்டுக்காக இறுதி வரை மக்களோடு மக்களாக நின்று போராடுவேன். வெற்றி பெற இயலவில்லை என்றால் மாவீரர்களோடு இணைந்து விடுவேன். நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
கேள்வி : மறுபடியும்  புள்ளி வைத்து பேசுகிறீர்கள். சரி உங்கள் போராட்டம் முள்ளி வாய்க்காலோடு நின்று விட்டது என்பது சரியா ?
தயா மோகன் : ஆயுத போராட்டம் மட்டுமே ஈழ தமிழர்களின் போராட்டம் என்று எண்ணுவதின் வெளிப்பாடே உங்கள் கேள்வி. அறப்போராட்டம்தான் செய்தோம். ஆயுதம் எந்த வேண்டி வந்தபோது ஆயுதம் ஏந்தினோம்.
சர்வதேச அரசியலை கண்ணுற்று பார்த்து எமது ஆயுதங்களை மௌனித்து வைத்து இருக்கிறோம் அவ்வளவே… இப்போது ராஜாங்க ரீதியான போராட்டதை நடத்தி கொண்டு இருக்கிறோம். போர்கள் ஓய்ந்து இருக்கலாம் அற வழியிலான போராட்டம் ஓயாது.
SHARE