பட்டதாரிகளாக பிள்ளைகளை அழகு பார்த்த பெற்றோர் இன்று கண்ணீருடன் வீதியில்

244

பட்டதாரிகளை வீதியில் போராடும் நிலைக்கு தள்ளுவதன் ஊடாக மாணவர்கள் மத்தியில் கல்வி மீது வெறுப்புணர்ச்சியினை ஏற்படுத்திவிடக்கூடாது. என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தெரிவித்துள்ளது.

வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் தொடர்பில் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த பல நாட்களாக பட்டதாரிகள் நகரின் மத்திய பகுதியில் சமைத்து உண்டு வீதியில் உறங்குவதுமாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக இதில் 80 வீதமான பட்டதாரிகள் பெண்களாகவும் பல பெண்கள் கைக்குழந்தைகளுடன் இவ்வாறு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது தொடர்பாக கிழக்கு மாகாணசபையும் நல்லாட்சி அரசும் தீர்க்கமான முடிவு எடுக்க முன்வர வேண்டும்.

கிழக்கு மாகாணசபை தேர்தல், நாடாளுமன்றதேர்தல், ஜனாதிபதித் தேர்தலிலும் ஆட்சி மாற்றத்திற்காக பாரிய பங்களிப்புச் செய்த இவர்களை நடுத்தெருவில் நிறுத்தி வைக்காது இப்பட்டதாரிகளின் நியாயமான கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க முன்வர வேண்டும்.

யுத்தத்தின் கொடூரத்தின் மத்தியிலும் வறுமை தலைவிரித்தாடிய காலகட்டத்திலும் தமது பிள்ளைகளை பட்டதாரிகளாக்கி அழகு பார்த்த பெற்றோர் சமூகம் இன்று கண்ணீரும் நிற்கின்றனர்.

மாணவர்களின் பல்கலைக்கழக அடைவு மட்டத்தினை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என முனைப்புடன் செயற்படும் இவ்வேளையில் பட்டதாரிகளே வேலைக்காக சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்துவது அனைவரும் சிந்திக்க வேண்டிய விடயம்.

இலங்கையிலுள்ள பட்டதாரிகள் தமது கல்வியினை தொடர்ந்த சூழல் வேறு. கிழக்கு வடக்கு மாகாணங்களின் பட்டதாரிகள் கல்வி கற்ற சூழல் வேறு. என்பதனை அரசியல் தலைமைகளும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மாறாக வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் பட்டதாரிகளின் போராட்டத்தினை கொச்சைப்படுத்த யாரும் முனையக் கூடாது.

அதிலும் அரச தொழில் பெறும் உச்ச வயதெல்லையினை அண்டியவர்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 40இற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் அடைந்துள்ள நிலையில் அவர்கள் மீதும் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.

வேலையற்ற பட்டதாரிகளின் தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தினை உதாசீனம் செய்யாது கிழக்கு மாகாணத்திலுள்ள சுமார் 5000 பட்டதாரிகள் மீதும் கரிசனை கொண்டு வேலைவாய்ப்பு வழங்குவதற்கும் மத்திய அரசும் மாகாண அரசும் முன்வர வேண்டும். என அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE