வட கொரியா சர்வாதிகாரியான கிம் யோங்-அன்னை விட அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் ஆபத்தானவர் என ரஷ்யாவை சேர்ந்த அரசு ஊடகம் வெளியிட்டுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றபோது ரஷ்யா வெளிப்படையாகவே டொனால்ட் ட்ரம்பிற்கு ஆதரவை தெரிவித்தது.
ஆனால், டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அவரது அடுத்தடுத்த நடவடிக்கைகளால் ரஷ்யா அதிருப்தியை தெரிவித்தது.
குறிப்பாக, சமீபத்தில் ரஷ்யாவின் ஆதரவை பெற்ற சிரியா அரசாங்கம் மீது அமெரிக்கா கடும் தாக்குதலை தொடுத்தது. இதற்கு ரஷ்யா கடுமையான கண்டனத்தை தெரிவித்தது.
மேலும், இரு தினங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தான் நாட்டின் மீது அமெரிக்க மிக மோசமான வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது.
பின்னர், கிரிமியா பகுதியை ரஷ்யா பகிரங்கமாக அபகரித்துக்கொண்டதற்கு அமெரிக்கா பலத்த கண்டனத்தை தெரிவித்ததை தொடர்ந்து இரு நாடுகளின் உறவில் பிளவு அதிகரித்து வந்துள்ளது.
இந்நிலையில், ரஷ்யா அரசாங்க ஊடகம் ஒன்று நேற்று அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ‘வட கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய இருநாடுகளின் தலைவர்களும் ஆபத்தானவர்கள். ஆனால், இருவரை ஒப்பிடுகையில் டொனால்ட் டிரம்ப் மிகவும் ஆபத்தானவர்.
வட கொரியா அதிபர் சுமூகமான பேச்சுவார்த்தைக்கு தயாராகவே உள்ளார். ஆனால், அமெரிக்கா போல் வட கொரியா எந்த நாட்டின் மீதும் இதுவரை போர் தொடக்கவில்லை.
அமெரிக்காவின் எல்லையில் போர்க்கப்பலை நிறுத்தும் நடவடிக்கையை வட கொரியா செய்யவில்லை. ஆனால், அமெரிக்கா இவை அனைத்தையும் செய்து வருகிறது.
தற்போதுள்ள சூழலில் உலகமே அணு ஆயுத தாக்குதலின் விளிம்பில் இருந்து வருவதாக ரஷ்யா ஊடகம் கருத்து தெரிவித்துள்ளது.