அரசினால் தரப்படும் மூலதன செலவினத்திற்கான அற்ப, சொற்ப நிதியை ஏதோ செலவழித்தோம் என்று கணக்குக் காட்டுவது அல்ல. அவ்வாறு செய்வதற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஓர் மாகாண சபை தேவையில்லை. ஆளுநரிற்குக் கீழிருந்தது போன்ற ஓர் நிர்வாகக் கட்டமைப்பு இருந்திருந்தாற் போதும் என வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையின் 99வது விசேட அமர்வு இன்று இடம்பெற்று வருகின்றது. இதன்போது வடமாகாண சபையின் மீளாய்வு தொடர்பில் கருத்துரைக்கையில் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
வட மாகாண சபையின் ஆயுட் காலத்திற்கு இன்னும் பதினைந்து மாதங்களே இருக்கின்ற நிலையில் கடந்த கடந்த மூன்று வருடம் 9 மாதத்தில் ஒட்டு மொத்த வட மாகாண சபையின் செயற்பாடுகளை மீளாய்வு செய்வதற்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றிகள்.
நான் மீளாய்வு செய்ய இருப்பது, 32,000 வட மாகாண சபை ஊழியர்கள் மூலம் மக்களிற்குச் சரியான சேவை கிடைக்கப் பெற்றுள்ளதா?
அவ்வூழியர்களில் 50 வீதத்திற்கு மேற்பட்டவர்கள் கல்வித்துறையைச் சார்ந்தவர்கள். இவர்களைத் திறன்பட செயற்பட வைத்து எமது கல்வியை மேம்படுத்தியிருக்கின்றோமா?
அரசு தருகின்ற நிதிக்கு மேலதிகமாக எமது பிரதேசத்தின், எம் மக்களின் பொருளாதார வளத்தை, வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்த ஏதாவது செய்திருக்கின்றோமா? போன்ற விடயங்களையே.
முதலில் வடமாகாண சபையின் நிறைவேற்றுத்துறை மற்றும் நிர்வாக செயற்பாடுகள், நிதி முகாமைத்துவம் என்பவை வினைத்திறனாக நடைபெற்றிருக்கின்றதா?
இரணைமடு, யாழ். நீர் வழங்கல் மற்றும் கழிவகற்றல் திட்டத்தினை நீங்கள் தடுத்தமை தொடர்பாக பேசவிருக்கின்றேன். அப்போது முதலமைச்சர் கூறியிருந்தார், நாங்கள் மாற்றுத்திட்டம் முன் வைப்போமென்று. தங்களிற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி வதிவிடப் பிரதிநிதியினால் மாற்றுத்திட்டத்தினை நிதியமைச்சினூடாக சமர்ப்பிக்கும் படி கோரப்பட்டிருந்தது.
நீங்கள் இதுவரை மாற்றுத்திட்டமேதாவது சமர்ப்பித்திருக்கின்றீர்களா? அத் திட்டத்தில் முக்கியமாக யாழ். மாநகர சபையின் கழிவு நீர் அகற்றல் தொடர்பான திட்டமும் உள்ளடங்கியிருக்கின்றதா?
இன்று யாழ். மாநகர சபை நாற்றமெடுக்கின்றது. மாற்றுத்திட்டமாக என்ன செய்திருக்கின்றீர்கள்? நடைமுறைப்படுத்தப்படவிருந்த திட்டத்தை வேண்டாமென்று தூக்கியெறிந்திருந்தீர்கள்.
எமது மாகாண சபைக்கு ஒரு வருடத்திற்குக் கிடைக்கும் மூலதன நிதி ஏறத்தாழ ரூ.4,000-4,500 மில்லியன் வரையே, இவ்வருடம் அதனை விடக் குறைவு.
இரணைமடுத் திட்டத்திற்குக் கிடைக்கவிருந்த நிதியோ ரூ. 25,000 மில்லியன். (USD 164 மில்லியன்). ஐந்து வருடத்திற்கு மாகாணசபைக்குக் கிடைக்கும் நிதியை விட அதிகம்.
அதனை வேண்டாமென்று உதறித் தள்ளினீர்கள். மாற்றுத்திட்டமாவது இது வரை கொடுத்திருக்கின்றீர்களா? இத் திட்டம் தொடர்பாகத் தங்களினால் மத்திய அமைச்சிற்கு 2014-2016ம் ஆண்டுகளிற்கிடையில் ஏதாவது கடிதம் அனுப்பப்பட்டதா என நான் அண்மையில் கேள்வி கேட்டிருந்தேன்.
அதற்குப் பதிலாக அவ்வாறு நானெந்தக் கடிதமும் அனுப்பவில்லை என முதலமைச்சர் கூறியிருந்தார். ஆனால் தங்களது பிரத்தியேக செயலாளர் கருத்து ஆவணமொன்றினை (Concept Note) 2014 நவம்பர் மாதத்தில் மத்திய அமைச்சின் செயலாளரிற்கு அனுப்பியிருக்கின்றார்.
இதுதான் தங்களுடைய கருத்து ஆவணமா, இதனைத் தாங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? அல்லது இவ்விடயம் தங்களிற்குத் தெரியாதா?
2014ம் ஆண்டு இச்சபையின் கவனத்திற்கு நான் கொண்டு வந்த முக்கிய விடயங்களில் இன்னுமொன்று பளையில் அமைக்கப்பட்ட மின் காற்றலை தொடர்பானது.
அவ் ஒப்பந்தத்தில் முதலில் சபையினுடைய முன்னைய செயலாளரைக் கையொப்பமிட வைத்துள்ளீர்கள். இது எவ்வளவு பிழையான ஓர் செயற்பாடு.
சபையின் செயலாளரிற்கும், நிறைவேற்று அதிகார செயற்பாட்டிற்கும் என்ன தொடர்பு? அது மட்டுமல்ல, அக் காற்று மின்னலை அமைத்த யூல் பவர் மற்றும் பீற்றா பவர் நிறுவனங்களிடமிருந்து முதலில் பெற்ற நிதிக் கணக்குகள் மாகாண சபையின் கணக்கிற்குள் உட்படுத்தப்படவில்லை.
இது ஓர் பாரிய குற்றம். அது மட்டுமல்ல அங்கு வெளிப்படைத் தன்மை கையாளப்படவில்லை. வெளிப்படைத் தன்மை கையாளப்பட்டிருக்குமெனின் அவர்கள் தந்த பணத்தை விடக் கூடிய தொகையை இன்னொரு நிறுவனம் தர முன் வந்திருக்கலாம்.
அன்று இது தொடர்பாக நான் கேள்வியெழுப்பிய போது தங்கள் தரப்பில் கூறப்பட்ட பதில் நாங்கள் இப்படியான விடயங்களைப் பகிரங்கமாக செய்தால் அரசிற்கு அது தெரிய வந்து எமக்குத் தருக்கின்ற நிதிகளைக் குறைத்து விடுவார்கள் என்று.
இது ஓர் பொறுப்புள்ள பதிலா எனத் தங்களை வினவ விரும்புகின்றேன். விவசாய அமைச்சரிடமிருந்து கிடைக்கப்பெற்ற பதில்கள் ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தால் கணக்காய்வாளர் நாயகத்திற்கு இது தொடர்பாக நான் கடிதம் எழுதியிருந்தேன்.
இன்று முதலமைச்சரினால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவும் அந் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட நிதியின் பிரயோகம் தொடர்பான உண்மை நிலையைக் கொணர்வதற்கு ஓர் கணக்காய்வு நடைபெற வேண்டுமென முதலமைச்சர் அவர்களிற்குப் பரிந்துரை செய்திருப்பதனையும் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகின்றேன். நான் அன்று வெளிப்படைத் தன்மையைக் கோரியது நியாயமானதென விசாரணைக் குழுவின் அறிக்கை உறுதிப்படுத்துகின்றது.
அன்றைய கால கட்டத்தில் நான் எதைப் பேசினாலும் ஆளுநர் எதனையும் செய்ய விடுகிறார் இல்லை, பிரதம செயலாளர் ஆளுநருடன் சேர்ந்து தடையாக இருக்கின்றார் என்று கூறினீர்கள்.
அந்த ஆளுநர் மாற்றப்பட்டு சிறந்த நிர்வாகி ஒருவர் ஆளுநராக இருந்தார், நீங்கள் கோரியது போல் பிரதம செயலாளர் மாற்றப்பட்டார், ஆனால் நீங்கள் சாதித்தது என்ன?
ஆடத் தெரியாதவள் மேடை கோணல் என்று கூறியதைப் போல்தான் தங்கள் கூற்று அமைந்திருக்கின்றது.
முன்னைய பிரதம செயலாளரின் நடவடிக்கையைக் கட்டுப்படுத்தும் முகமாக ஓர் சுற்றறிக்கை விடுத்திருந்தீர்கள், பின் நீதிமன்றத்தின் முன் அச் சுற்றறிக்கையை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளீர்கள்.
அவ்வாறான ஓர் சுற்றறிக்கையை விடுவதற்கு முன் அது இலங்கையின் சட்ட ஏற்பாடுகளிற்கு, இலங்கையின் நிர்வாக ஏற்பாடுகளிற்கு அமைவாக உள்ளதா என்பதனை ஆராய்ந்துதான் விட்டிருக்க வேண்டும்.
இறுதியில் நீதிமன்றத்தின் முன் தங்கள் தவறினை ஏற்றுக் கொண்டுள்ளீர்கள். இது மட்டுமல்ல, சமாதானத்தைக் கட்டியெழுப்பும் நிதித் (Peace lpuilding Fund) தேவைகள் மதிப்பீடு தொடர்பாகத் தாங்கள் ஓர் ஆலோசகரைப் பெயர் குறிப்பிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதிக்கு சிபாரிசு செய்ததன் விளைவாகத் தங்களிற்கும், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளிற்குமிடையிலேற்பட்ட முரண்பாட்டின் விளைவு, எமக்குக் கிடைக்கவிருந்த சமாதானத்தைக் கட்டியெழுப்பும் நிதி அவர்களினால் வேறு வழியில் திசை திருப்பப்பட்டது.
அது மட்டுமல்ல அந்த முரண்பாடு மாகாண சபைக்கும், UNDP க்கும் இடையில் ஓர் பாரிய விரிசலை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், ஓர் தனிப்பட்ட நபரிற்காக ஓர் சர்வதேச ஸ்தாபனத்தையே பகைக்கின்ற நிலைமைக்கு எம்மை இட்டுச் சென்றுள்ளது.
எமக்குக் கிடைக்க இருந்த எத்தனையோ உதவித்திட்டங்கள் இதனால் உதறித்தள்ளி விடப்பட்டிருக்கின்றது. ஒட்டுச்சுட்டானில் இந்திய அரசின் உதவியுடன் நிறுவப்படவிருந்தவோர் தொழிற்பயிற்சி நிலையம், தங்கள் அமைச்சினதும், அதிகாரிகளினதும் அசமந்தப் போக்குக் காரணமாக இன்று கைவிடப்பட்டுள்ளது.
நான் இதைனையிட்டு சபையில் கேள்வியெழுப்பிய போது தங்களிற்கு அது தொடர்பாக எதுவும் தெரியாது எனக் கூறியிருந்தீர்கள். ஆனால் தங்கள் அதிகாரிகள்தான் சென்று காணியைக் கூடப் பார்த்திருக்கின்றார்கள். இது கூடத் தங்களிற்குத் தெரியாதா?
யாழ். மாநகர சபையில் கடந்த முதல்வர் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்பட்ட விடயங்கள் தொடர்பான விசாரணையை மேற்கொள்வதற்காக கந்தையா அரியநாயகம் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக 34வது சபை அமர்வில்(01.09.2015) உறுப்பினர் பரஞ்சோதி அவர்களின் வினாவிற்குப் பதிலளித்த போது கூறியிருக்கின்றீர்கள்.
(ஹன்சாட் பதிவு இதோ என்னிடமிருக்கின்றது.) இது தொடர்பாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அவ்வறிக்கையின் பிரதியைத் தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போது, ஓய்வு பெற்ற கந்தையா அரியநாயகம் அவர்கள் யாழ். மாநகர சபைக் கடைத் தொகுதி தொடர்பாக மட்டுமே விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளாரே அன்றி ஏனைய விடயங்கள் தொடர்பாக அவரது அறிக்கை இல்லை எனப் பதிலளிக்கப்பட்டுள்ளது.
ஏன் இவ்வாறான குழப்ப நிலையென்று எனக்கு விளங்கவில்லை. யாழ். மாநகர சபை சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்த போது அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கான கூட்டத்திற்கு முன்னைய அமைச்சர் ஐங்கரநேசன் அவர்களுடன் நானும் சென்றிருந்தேன்.
அக் கூட்டத்தில் அத் தொழிலாளர்களினால் முன்வைக்கப்பட்ட முதலாவது குற்றச்சாட்டு தங்களது பிரச்சினைகள் தொடர்பாக அவர்களின் பிரதிநிதிகள் கடந்த மூன்றாண்டு காலமாக எத்தனையோ தடவைகள் முதலமைச்சர் காரியாலயத்தில் கூட்டங்களிற்குச் சமுகமளித்திருந்ததாகவும், ஒவ்வொரு முறையும் கூட்டம் ஆரம்பிக்கும் போது ஏதோ புதிதாக விடயங்களைக் கேட்பது போல் கேட்கப்பட்டதாகும்.
அவ்வாறான அசமந்தப் போக்குடைய உங்களை நம்பி உங்களுடன் தாங்கள் பேசுவதில் என்ன பிரயோசனம் என எங்களைப் பார்த்துக் கேட்டிருந்தார்கள். இதைத்தான் நான் உங்களிடம் கேட்க விரும்புகின்றேன்.
அந்தச் சுத்திகரிப்புத் தொழிலாளர்களினாற் சுட்டிக்காட்டப்பட்ட அசமந்தப் போக்குத்தான் உங்கள் அமைச்சுகளின் செயற்பாடுகள் என்பதனைத் தாங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா?
பெரிய ஆரவாரங்களுடன் லண்டன் மாநகரிலே Kingston Upon Thames நகரத்துடன் ஏதோ பெரிய ஒப்பந்தம் செய்து விட்டீர்கள் என ஊடகங்கள் பிரசுரித்திருந்தன.
இன்று அவ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாகின்றது, எமது மாநகர சபைக்கு அதனால் இது வரை ஏதாவது பயன் கிடைத்திருக்கின்றதா?
அதே போல் கனடாவில் மார்க்கம் நகராட்சி மன்றத்துடன் முல்லைத்தீவிற்கான ஓர் நட்புறவு உடன்படிக்கை செய்யப்பட்டமை தொடர்பாக ஊடகங்களிற் பெரிதாக விளம்பரப்படுத்தப்பட்டது.
இவையெல்லாம் மக்களை ஏமாற்றுவதற்காகான செயற்பாடுகளாகவே கணிக்க வேண்டியுள்ளது. புலம் பெயர்ந்து வாழ்கின்றவர்கள் அங்கு தங்கள் அரசியல் செல்வாக்கை நிலைநாட்டுவதற்காகத் தங்களை ஓர் பகடைக் காயாகப் பாவித்திருக்கின்றார்கள் என்றே எனக்கு எண்ணத் தோன்றுகின்றது.பிறம்ப்ரன் நகராட்சித் தலைவரும் தங்களுடன் வவுனியாவிற்கான ஒப்பந்தம் செய்யவிருப்பதாகப் பிரசாரம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் தங்களைக் கண்டவுடன் அந் நகராட்சித் தலைவர் ஓடியொழித்து விட்டார்.
சுன்னாகம் நிலத்தடி நீர் தொடர்பாக பிரித்தானிய உயர்ஸ்தானிகர் 2016 யூன் மாதம் யாழ். வந்த போது, சுன்னாகம் பகுதியில் ‘கடந்த காலங்களில் நீர் மாசடைந்தமை ஓர் பிரச்சினையாக இருந்தாலும், வெளிநாடுகளில் நீர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் தற்போது ஒயிலின் அளவு அபாய நிலையிலும் குறைவாக இருக்கின்றது’ என்று கூறினீர்களா எனக் கேள்வியெழுப்பியிருந்தேன்.
அதற்கு நீங்கள் பதிலளிக்கும் போது நிபுணர் குழு அறிக்கையில் அவுஸ்திரேலியாக் குழுவொன்று வெளிநாடுகளிற்கு நீர் மாதிரிகளைக் கொண்டு சென்று பரிசோதனை செய்தததில் அவ்வாறாகக் கூறப்பட்டதைத்தான் அவர்களிற்குக் கூறியிருந்தேன் எனக் கூறியிருந்தீர்கள்.
அந்த நிபுணர் குழு அறிக்கையை வாசித்துப் பாருங்கள் அவுஸ்திரேலியக் குழுவொன்று சுண்ணாகத்தில் பன்னிரண்டு கிணறுகளிலிருந்து மாத்திரமே மாதிரிகளை எடுத்துச் சென்று வெளிநாடுகளிற் பரிசோதித்தாகவும், அந்த நீர் மாதிரிகளில் ஒயில் இல்லையெனவும் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
அத்துடன் தங்களின் இந்த முடிவுகளை சுண்ணாகம் பகுதியிலுள்ள முழு நீர்த் தேக்கத்திற்கும் பொருந்துமென்று கொள்ளமுடியாது என்றும் அவர்களே குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
அவ்வாறு அவர்களே கூறியிருக்கும் போது, ஒயில் கசிவினால் சுண்ணாகம் பகுதியில் பாதிக்கப்பட்ட கிணறுகள் ஏறத்தாழ 4,000 இருக்கும் போது, இந்த பன்னிரண்டு மாதிரிகளையும் வைத்துக்கொண்டு பிரித்தானிய உயர் ஸ்தானிகரிற்கு நீங்கள் எவ்வாறு கூறமுடியும்.
உயரதிகாரிகளைக் கூடத் தங்களால் சரியாகப் பயன்படுத்தத் தெரியவில்லை. உயர் நிலை அதிகாரிகளான மோகன்ராஜ் (4 மாதம்) வரதீஸ்வரன் (6 மாதம்), தெய்வேந்திரம் (7 மாதம்) சிவபாதசுந்தரம் (7 மாதம்) மற்றும் சாந்தசீலன் (4 மாதம்) ஆகியோரை மாதக்கணக்கில் பயன்படுத்தப்படாமல் குழாமில் வைத்திருந்தீர்கள்.
இவையெல்லாம் தங்கள் நிர்வாகத்தின் வினனைத் திறனற்ற செயற்பாடென்று கூறாமல் வேறு எவ்வாறு கூறுவது? நானிங்கு குழாம் என்று குறிப்பிடுவது அவர்களிற்கு எந்த வித பதவியும், கடமைகளும் ஒதுக்கப்படாமல் கையெழுத்திட்டு விட்டு சும்மா இருக்க விட்டமை.
மக்கள் வரிப்பணத்தில் சம்பளத்தையும், ஏனைய சலுகைகளையும் வழங்கிக் கொண்டு அதிகாரிகளை நீண்ட காலத்திற்குக் குழாமில் வைத்திருப்பதனை வினைத்திறனான செயற்பாடென்று எவ்வாறு கூறுவது?
தரங் கூடிய அதிகாரிகளைக் குழாமில் வைத்துக் கொண்டு, அவர்களை விடத் தரம் குறைந்தவர்களை செயலாளர்களாகவும், உயரதிகாரிகளாவும் நியமித்திருக்கின்றீர்கள்.
சாந்தசீலன் அஞ்சலிதேவி கூட்டுறவு ஆணையாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இரு தினங்களில் அவரது நியமனக் கடிதம் மாற்றப்பட்டு வேறொருவரிற்கு அந் நியமனம் வழங்கப்பட்டது.
அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிற்கே உரியது எனக் கூறி நீங்கள் தப்பித்துக் கொள்ளப் பார்ப்பீர்கள். ஆனால் தங்களது சிபார்சிலும், வேண்டுகோளினதும் அடிப்படையிலேயே ஆளுநர் அவ்வாறு செயற்பட்டார் என என்னால் உறுதியாகக் கூறமுடியும்.
இறுதியில் தங்கள் பந்தாடல் போன்ற சிபார்சுகளைப் பொறுக்க முடியாமல்தான் ஆளுநர் இவ்விடயத்தில் சில இறுக்கமான முடிவுகளை எடுத்தார்.
மாகாண சபையினால் வாடகைக்கு எடுக்கப்பட்ட கட்டடங்களின் வாடகைக் கொடுப்பனவு தொடர்பாக நான் முதலமைச்சர் அவர்களிடம் கேள்வி கேட்டு வாடகைப் பணங்கள் அரச மதிப்பீட்டுத் திணைக்களத்தினால் மதிப்பீடு செய்து பெறப்படவில்லை என இச் சபையில் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன்.
அப்போது முதலமைச்சர் அவர்களால் கூறப்பட்ட பதில் அது ஆளுநரின் ஒப்புதலுடன் தான் பெற்றுக் கொள்ளப்பட்டதென்று. எனது கூற்று சரியென்பதனை 2015ம் ஆண்டு கணக்காய்வு அறிக்கை உறுதி செய்கின்றது.
அத்துடன் 2015ம் ஆண்டு செயலாளர்களிற்குக் கொடுக்கப்பட்ட வீடுகள் தொடர்பான வாடகைக் கொடுப்பனவு மற்றும், மின்சாரம், நீர்ச் செலவு தொடர்பான ஏறத்தாழ ரூ.924,000 தொகையை மீளப் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கணக்காய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே மக்கள் நலன் சார் வேலைத்திட்டங்களிற்காக அரசினால் கொடுக்கப்பட்ட நிதிகள் ஆளுநர் நிதியத்திற்கு மாற்றப்பட்டு, அங்கு கிடப்பிலிருப்பதை இனங்கண்டு மாகாண சபை கடந்த வருடம் மீண்டும் அதை அமைச்சுகளிற்கும், திணைக்களங்களிற்கும் மாற்றும்படி தீர்மானமெடுத்தது.
அத் தீர்மானத்தின் அடிப்படையில் கடந்த செப்டெம்பரில் ரூ.144 மில்லியனில் குறிப்பிட்ட திணைக்களங்களிற்கும், அமைச்சுகளிற்கும் மாற்றம் செய்யப்பட்டு, கடந்த 10 மாதங்களாக இந் நிதி பிரயோகப்படுத்தப்படாது கணக்கிலிருக்கின்றது.
அதிற் பெரும்பான்மையான நிதி விவசாயம் மற்றும் கூட்டுறவு அமைச்சிற்குரியது (105 மில்லியன்). 2014ம் ஆண்டு மூலதனச் செலவீட்டிற்காக அரசினாற் தரப்பட்ட நிதியில் ரூபா 690 மில்லியன் டிசம்பர் 2014 வரை செலவழிக்கப்படாமல் வைப்புக் கணக்குகளில் இட்டுவிட்டு 2015 ஆகஸ்ட் மாதம் வரை செலவழித்தது மட்டுமல்ல 2015 ஜனவரி 20 ல் வெளிவந்த வடமாகாண சபை நிதிக்கூற்றறிக்கையில் வெறும் ரூ.16 மில்லியன் தவிர ஏனைய முழுப்பணமும் செலவழித்ததாகக் காட்டியிருந்தீர்கள்.
மருதங்கேணி கடற்றொழிலாளர் சமாசத் தலைவர் தமது கடிதத் தலைப்பைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக அவரைப் பதவி நீக்கம் செய்தது தவறு என இச் சபையில் நானும், உறுப்பினர் சுகிர்தன் விவாதித்திருந்தோம். எங்கள் இவ் விவாதம் சரியென்பதனை இவ் விசாரணைக் குழு அறிக்கை நிரூபித்துள்ளது.
இப்பதவி நீக்கம் தொடர்பாகக் கூட்டுறவு ஆணையாளரிற்கு எதிராக சமாசத் தலைவரினால் தொடரப்பட்ட வழக்கில் இக் குழுவின் அங்கத்தவரொருவர் சட்டத்தரணியாகச் செயற்பட்டுள்ளார். ஆதலினால் இங்கு அக்கறை முரண்பாடொன்றுள்ளது என சிலரால் எடுத்துக் கூறப்படுகின்றது.
முதலில் கவனிக்க வேண்டியது அவ் வழக்கு கூட்டுறவு ஆணையாளரிற்கும் பிரதேச செயலரிற்கும் எதிரானதேயன்றி அமைச்சரிற்கு எதிரானதேயன்று.
ஆதலினால் அவ் வழக்கில் ஆஜராகிய ஒருவர் இவ் விசாரணைக் குழுவில் அங்கத்தவராக இருப்பது எவ் வகையிலும் ‘அக்கறை முரண்பாடாக’ அமையாது.
மற்றையது மூன்று குழு அங்கத்தவர்களில் ஒருவர் மேல்தான் இக் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. மூவரடங்கிய அவ் விசாரணைக் குழுவில் மற்றைய இருவரும் இதே முடிவைத்தான் எடுத்துள்ளார்கள்.
முதலமைச்சரின் விதி முறைக் குறிப்பில் ஒருமித்த தீர்மானமெடுக்கப்படாதவிடத்து பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒருமைப்பாட்டுடன் நிறைவேற்றப்படும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆதலினால் அக்கறை முரண்பாடு உள்ளவர் எனக் கூறப்படும் விசாரணைக் குழு உறுப்பினரைத் தவிர்த்தாலும் ஏனைய இரு பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவும் இவ்வாறாகக் காணப்படுகின்றது.
கிளிநொச்சி பனை, தென்னை கூட்டுறவுச் சங்கத்திற் பல ஊழல்கள் தொடர்பாக கூட்டுறவுச் சட்ட விதி 46/01 இன் கீழ் விசாரணை செய்யப்பட்டுப் பல நிதி மோசடிகள் நடைபெற்றதாக கடந்த வருடம் மே மாதத்தில் அறிக்கையிடப்பட்டிருந்தும், அவ்வாறு மோசடி செய்யப்பட்ட நிதியினை மீளப் பெறுவதற்கு கூட்டுறவு ஆணையாளரிற்கு அதிகாரம் இருந்தும் இது வரை அந்த நிதியினை மீளப் பெற நடவடிக்கை எடுக்காதது ஏன். யாருடைய தலையீட்டினால் அது நிறுத்தப்பட்டுள்ளது?
சுன்னாகம் நிலத்தடி நீர் விவகாரம் தொடர்பாக முன்னைய அமைச்சரினால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவும் அவர்களுடைய அறிக்கையும் நொதேர்ண் பவர் நிறுவனத்தைக் காப்பாற்றுவதற்காக செயற்படுத்தப்பட்ட அரங்கேற்றமென்று நான் இந்த சபையினிலே விஞ்ஞான ரீதியான ஆதாரங்களுடன் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக உரையாற்றியிருந்தேன்.
அப்போது பதில் உரைத்த விவசாய அமைச்சர் இது நிபுணர்கள் குழுவைக் கேட்க வேண்டிய விடயம் கேட்டிருந்தால் நான் அவர்களுடன் இவ் விடயங்களை விவாதிப்பதற்கு ஒழுங்குபடுத்தியிருப்பேன் என்று கூறியிருந்தார்.
கணக்காய்வில் விவசாயம் மற்றும் கூட்டுறவு அமைச்சு தொடர்பாக எவ்வித குற்றச்சாட்டுகளும் தெரிவிக்கப்படவில்லை.
அவ்வாறாக அமைச்சின் கணக்காய்வறிக்கையில் எவ்வித குற்றங்களும் காணப்படாத நிலையில் விசாரணைக் குழுவின் அறிக்கையில் குற்றங்களிருப்பதாகக் கூறியிருப்பதாகப் பகிரங்கமாக முன்னாள் விவசாய அமைச்சர் கூறியதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டேன்.
முதலில் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும், கணக்கிற்கு வந்தவைகள் தான் கணக்காய்விற்குட்படுத்தப்படும். கணக்கிற்கு வராதவை கணக்காய்விற்கு உட்படுத்தப்பட மாட்டாது. இனிக் கல்வி அமைச்சின் கடந்த கால செயற்பாடுகளை சிறிது அலசிப் பார்க்க விரும்புகின்றேன்.
அமைச்சரினால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு தனது அறிக்கையில் நியமனம் , இட ஒதுக்கீடு, இடமாற்றம் போன்ற விடயங்களில் ‘தலையிடாதிருக்க வேண்டிய அமைச்சர் இவ்விடயங்களில் அமைச்சர் வாரியத்தின் முடிவெனக் கூறுவது தவறான ஓர் நிலைப்பாடாகும்.
அமைச்சின் செயலாளரிற்கு வழங்கப்பட்ட நிர்வாக ரீதியிலான கடமைகளில் அமைச்சர் வாரியம் அல்லது அமைச்சர் தலையிடுவது தவறானதாகும்.
இவ்வாறாக அதிகார துஸ்பிரயோகம் செய்தாரென்ற காரணத்தினாற்தான் குருகுலராஜா அவர்களை அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டுமெனப் பரிந்துரை செய்திருக்கின்றனர்.
புதிய கல்வி அமைச்சர் என்ன செய்திருக்கின்றாரென்றால் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு அதிபராகத் தான் குறிப்பிடுமொருவரை நியமிக்கும் படி பணிப்புரை வழங்கியிருக்கின்றார்.
யாழ். இந்து ஆரம்பப் பாடசாலையில் குறைந்த புள்ளி எடுத்த ஒருவர்தான் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். மாகாணப் பொதுச் சேவைகள் ஆணைக் குழு அது தவறு என்று கல்வி அமைச்சின் செயலாளரிற்குச் சுட்டிக்காட்டியும் அவர் எந்த வித நடவடிக்கையம் எடுக்கவில்லை.
யாழ். இந்து ஆரம்பப் பாடசாலைக்கு ஒரு நியாயம், கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு இன்னொரு நியாயம். குருகுலராஜா அவர்கள் செய்தது பிழையென்றால், சர்வேஸ்வரன் அவர்கள் செய்தது அதனை விடப் பிழையான காரியம், அவரும் உடனடியாகப் பதவி விலக வேண்டும்.
முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் போன்ற பிரதேசங்களில் ஆசிரியர் பற்றாக்குறையுள்ள போது தங்களுடைய இவ்வாறான செயற்பாடுகளை எவ்வாறு நியாயப்படுத்துவது?
தகவலறியும் சட்டத்தின் கீழ் கல்வி அமைச்சினாற் தரப்பட்ட தகவலின் அடிப்படையில் கடமை நிறைவேற்று அதிபர் என்பவர் ஒரு பாடசாலையில் அதிபரில்லாத போது அதற்காக நியமிக்கப்படுபவரே கடமை நிறைவேற்று அதிபராவார்.
தர்மபுரம் வைத்தியசாலையின் அபிவிருத்திக்கென்று பிரதேச செயலாளரினால் ஒதுக்கப்பட்டு, அக் காணியில் குடியிருந்தவர்களிற்கு அக் காணியில் உடமை கொள்வதற்கோ, இடம் கொள்வதற்கோ உரித்து இல்லை என நீமன்றத்தினால் மார்ச் 2015ல் உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலும், நீண்ட காலமாக மக்கள் அங்கு குடியிருந்ததைக் கருத்திலெடுத்து சிறு துண்டு காணியேனும் வழங்க காணிக் கோரிக்கை அறிவித்தல்களை வழங்கி உரிய ஆவணங்களை வழங்க உதவுமாறு பெப்ரவரி 2016ல் முன்னாள் கல்வி அமைச்சர் பிரதேச செயலரிற்குக் கடிதம் எழுதி இருக்கின்றார்.
காணி தொடர்பான விடயங்களை நீதிமன்றம் கையாளுகின்ற நிலையில் இது தொடர்பாக பிரதேச செயலாளரிற்கு எழுதுவதற்கு கல்வி அமைச்சரிற்கு என்ன அதிகாரம் உண்டு?
இது அதிகார துஸ்பிரயோகம் இல்லையா? சுகாதார அமைச்சரும் இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். ஏனெனில் நீங்களும் வைத்தியசாலைக்கு ஒதுக்கப்பட்ட காணியை தனியாரிற்குப் பிரித்துக் கொடுப்பதற்கு உடந்தையாக இருந்திருக்கின்றீர்கள்.
காணியற்றவர்களிற்குக் காணி கொடுப்பதற்கு நான் எதிரானவன் அல்ல. ஆனால் வைத்தியசாலைக்கு என்று ஒதுக்கப்பட்ட காணியை தனிப்பட்டவர்களிற்குக் கொடுப்பதில் சம்பந்தப்பட்டிருக்கின்றீர்கள். அதைத்தான் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
நிறைவேற்று செயற்பாட்டுக் குறைபாடுகளில் இறுதி விடயமாக விசாரணைக் குழு அறிக்கை தொடர்பாக ஓரிரு விடயங்களைக் குறிப்பிட விரும்புகின்றேன்.
விசாரணைக் குழுவின் உறுப்பினர்கள் பக்கச் சார்பானவர்கள், ஒவ்வோர் கட்சியைச் சார்ந்தவர்கள், இவ்விசாரணையை நடாத்துவதற்குத் தகுதியுடையவர்களல்லர் என்ற கருத்து சில ஊடகங்களிலும் சமூக வலைத் தளங்களிலும் வேண்டுமென்றே விசமத்தனமாகப் பிரசுரிக்கப்பட்டு வருகின்றது.
ஓர் அமைச்சரின் தூண்டுதலினாலேயே இவ்வாறான பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக எனக்கு அறியக் கிடைக்கின்றது.
விசாரணைக் குழு அங்கத்தவர்கள் இவ் விசாரணையை நடத்துவதற்குப் பொருத்தமற்றவர்கள் என்று கருதியிருந்தால் விசாரணைக் குழு உறுப்பினர்களின் பெயர்கள் சபைக்கு முதலமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட வேளையிலேயே அதற்கான தங்கள் ஆட்சேபனையைத் தெரிவித்திருக்க வேண்டும்.
அவ்விசாரணைக்குழுவை ஏற்றுக் கொண்டு, அதன் முன் ஆஜராகி விளக்கங்கள் கொடுத்து விட்டு இன்று அவ்வுறுப்பினர்கள் மீது குறை கூறுவது மிகவும் கீழ்த்தரமான ஓர் பண்பற்ற செயலென்பதனை நான் முதலில் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றேன்.
விசாரணைக் குழுவின் அறிக்கையில் அமைச்சின் செயலாளரிற்கு வழங்கப்பட்ட நிர்வாக ரீதியலான கடமைகளில் அமைச்சர் வாரியம் தலையிடுவது தவறானதாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதுடன், கொள்கை ரீதியலான முடிவுகளை எடுப்பதே அமைச்சர்களினதும், அமைச்சு வாரியத்தினதும் கடமையெனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவர்களின் இக் கருத்துடன் நான் முழுமையாக உடன்படுகின்றேன். அது மட்டுமல்ல பல இடங்களில் அமைச்சர் வாரியத்தின் அனுமதியுடன்தான் சில அதிகார துஷ்பிரயோகங்கள் நடைபெற்றுள்ளனவென்றும் அவ் அறிக்கையிலிருந்து அறியக் கூடியதாக இருக்கின்றது.
இது வரை நிறைவேற்று மற்றும் நிர்வாகச் செயற்பாட்டின் கடந்த காலக் குறைபாடுகளை எடுத்துக் கூறியிருந்தேன், இனி நான் ஆரம்பத்திற் கூறியது போன்று என்னென்ன விடயங்களைச் செய்திருக்க முடியும் என்ற விடயத்திற்கு வருகின்றேன்.
சுகாதார சேவைகள், கல்வி நியதிச்சட்டங்கள் உருவாக்கப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாகியும் இதுவரை உப விதிகளெதுவும் வர்த்தமானியில் அறிவிக்கப்படவில்லை.
மூன்று மாதங்களின் முன் ஓர் தூதரக அரசியற் பிரிவு உயர் அதிகாரி எம்மை வந்து சந்தித்திருந்தார். நாம் அவரிடம் எமது காணிப்பிரச்சினை, காணாமற்போனோர் பிரச்சினை இவ்வாறான எமது உரிமை மறுப்பு தொடர்பான பல விடயங்களை எடுத்துக் கூறியிருந்தோம்.
ஆனால் அவர் எங்களை நோக்கிக் கேட்ட கேள்வி ‘உங்களிற்கு இருக்கின்ற அதிகாரங்களை நீங்கள் சரியாக உங்கள் வசமாக்கியிருக்கின்றீர்களா? இதுவரை எத்தனை நியதிச்சட்டங்களை ஆக்கியிருக்கின்றீர்கள் என்று எம்மைப் பார்த்துக் கேட்டார்.
அது மட்டுமல்ல, எமக்கு நியதிச்சட்டங்களை உருவாக்குவதற்கு உதவி செய்வதற்காக நிபுணர்களைக் கொண்ட ஓர் நிறுவனத்திற்குத் தமது அரசு நிதியுதவி வழங்கியுள்ளதாகவும், அந் நிறுவனத்தினைப் பாவித்து நியதிச் சட்டங்களை உருவாக்குவதற்குத் தவறியுள்ளோம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
நான் 2014ம் ஆண்டு இச் சபையில் உரையாற்றும் போது கூறியிருந்தேன், என்னால் ஒரு மாதத்திற்கு 4 நியதிச் சட்டங்களை ஆக்கிக் காட்ட முடியுமென்று.
கடந்த 45 மாதங்களாக எத்தனை நியதிச்சட்டங்களை ஆக்கியிருக்கின்றீர்கள்? இது தங்கள் இயலாத்தன்மையில்லையா?
முதலமைச்சர், காணி அமைச்சர் என்ற முறையில் மயிலிட்டிக் காணிகள் அண்மையில் இராணுவத்தினரால் விடுவிக்கப் பட்ட போது தனக்கு அரச அதிபர் அறிவிக்கவில்லையென முறைப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன்.
காணி அமைச்சரென்பது அரச காணிகள் தொடர்பான பாவனை, கையளித்தல், போன்ற விடயங்களிற்கான அமைச்சரேயன்றி தனியார் காணிகளிற்கான அமைச்சர் அன்று. காணி அமைச்சர் என்ற முறையில் மயிலிட்டிக் காணியைக் கையளிப்பதற்கு உரிமை கோருவதிலும் பார்க்க அரச காணி தொடர்பான அதிகாரங்களை வலுப்படுத்துவதற்கு இது வரை ஏன் ஓர் நியதிச் சட்டத்தினை உருவாக்க முடியவில்லை?
மேல் மாகாண சபை கூட காணி தொடர்பாக ஓர் நியதிச் சட்டத்தை உருவாக்கியுள்ளது. அதே போல் வட மேல் மாகாண சபை மீன்பிடி கடலெல்லைகள் தொடர்பாக நியதிச்சட்டம் இயற்றியிருக்கின்றது.
நாங்கள் இருக்கும் அதிகாரங்களைப் பாவிக்கத் தெரியாமல் ஏதோ விடயங்களில் எமது கவனத்தைச் செலுத்திக் கொண்டு இருக்கின்றோம்.
நான் எத்தனையோ தடவை இச்சபையிற் கூறி இருக்கின்றேன். பயணிகள் மற்றும் பண்டங்களை ஏற்றிச் செல்லுதல் முழுக்க முழுக்க மாகாண சபைக்குரிய விடயம்.
அதனை ஒழுங்குபடுத்துவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் மாகாண சபைக்கு முழு அதிகாரமும் உள்ளது. இது தொடர்பாக நாம் என்ன செய்துள்ளோம்,
அமைச்சர் ஓர் வீதிப்போக்குவரத்து அதிகார சபையை நிறுவுவதற்கான நியதிச்சட்டத்தைக் கொண்டு வந்தார். இன்று அவ் அதிகார சபை கிடப்பிற் கிடக்கின்றது.
நியதிச் சட்டங்கள் மட்டுமல்ல, மாகாண சபை செய்திருக்க வேண்டிய இன்னுமோர் முக்கியமான விடயம் வட மாகாண அபிவிருத்திக்கான துறை சார் ஒன்றிணைந்த அபிவிருத்தித் திட்டங்களை வகுத்திருக்க வேண்டும்.
இணைந்த வடக்கு கிழக்கில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை 01 வருடங்கள் 04 மாதங்கள் மாத்திரந்தான் இயங்கியது. ஆனால் அக் குறுகிய காலத்திற்குள் ஒவ்வொரு துறையின் மேம்பாட்டிலும் ஓர் மாஸ்டர் பிளான் போட்டிருந்தனர்.
அவர்கள் 16 மாதத்தில் செய்து காட்டியதனை உங்களால் 45 மாதங்களாக செய்யமுடியாமலிருக்கின்றது. ஒவ்வொரு துறைக்கும் ஒரு மாஸ்டர் பிளானைச் செய்து விட்டுத்தான் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான நிதிகளை முன்னுரிமை அடிப்படையில் எவ்வாறு பெற வேண்டுமென்ற முயற்சிகளில் ஈடுபடல் வேண்டும்.
இன்று எமது பிரதேசத்தில் இளைஞர்களிற்கான வேலையில்லாப் பிரச்சினை ஒர் பாரிய பிரச்சினையாக இருக்கின்றது. நிச்சயமாக அவர்களது பிரச்சினை தீர்க்கப்பட வேண்டிய ஒன்று.
அவர்களிற்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது எமது கடமை. எமது மாகாணத்தில் முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்திப் பொருளாதார அபிவிருத்திக்கான முனைப்புகளை செய்தால் மட்டுமே இது சாத்தியம் ஆகும்.
பதவிகளைக் காப்பாற்றுவதிலும், பகிர்ந்து கொள்ளலிலுமே எமது காலத்தை வீணடிக்கின்றோமே தவிர மக்களிற்கு ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மேற்கொள்வதிலோ, இருக்கின்ற மாகாண சபையை வினைத்திறனாக செயற்படுத்த அல்ல என்பதனைக் கூறி எனது உரையை நிறைவு செய்கின்றேன் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.