சென்னை அயோத்தி குப்பத்தை சேர்ந்தவர் மனோஜ்குமார் (வயது 25). வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இவர் தினமும் இரவு நேரத்தில் திருவல்லிக்கேணி பறக்கும் ரெயில் நிலையத்தில் படுத்து தூங்குவது வழக்கம்.
கடந்த 12-ந்தேதி இரவு அவர் வழக்கம் போல் ரெயில் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு நேரத்தில் அங்கு ஒரு கும்பல் வந்தது. அந்த கும்பலுக்கும் மனோஜ்குமாருக்கும் தகராறு ஏற்பட்டது.
தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த கும்பல் அவரை சரமாரியாக தாக்கியது. பின்னர் மனோஜ்குமாரின் முகத்தில் பெட்ரோல் ஊற்றி தீவைத்தது. இதனால் அவர் அலறித்துடித்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். இதையறிந்த அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது. தீக்காயம் அடைந்த மனோஜ்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.