
போகிற போக்கை பார்த்தால் புதிய அரசியலமைப்பு வருவதாக தெரியவில்லை. எனவே வராத ஒன்று வரும் என்று சும்மா காத்திருந்து, மக்களுக்கு நாம் அளித்த வாக்குறுதியை நாம் மீற முடியாது. ஆகவேதான், புதிய அரசியலமைப்பு செயற்பாட்டுக்கு வெளியே 20 ஆவது திருத்தமாக இந்த யோசனையை தாம் கொண்டு வருவதாக, நண்பர் அனுர திசாநாயக்க என்னிடம் கூறினார். அவரது யோசனையை ஏற்காவிட்டலும்கூட, அரசியலமைப்பு செயற்பாட்டுக்கு வெளியே அதை கொண்டுவரும் அந்த காரணத்தை ஏற்றுக்கொள்வதாக அவரிடம் நான் கூறினேன்.
அதுபோல இன்றைய அரசியலமைப்பின் மொழி தொடர்பான அத்தியாயத்தில், “சிங்களம் இலங்கையின் ஆட்சி மொழியாகும்” என்று முதல் வரியில் கூறிவிட்டு, அடுத்த வரியில் “தமிழும் ஒரு ஆட்சிமொழி” என குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஏதோ தமிழுக்கு போனால் போகிறது என ஒரு இரண்டாம் தர அந்தஸ்த்தை தருவது போல் இருக்கிறது. இதை மாற்றி புதிய அரசியலமைப்பில், “சிங்களமும், தமிழும் இலங்கையின் இரண்டு ஆட்சி மொழிகள்” என்று ஒரே வரியில் சொல்லப்படும் யோசனையை தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பாக நான் வழிகாட்டல் குழுவில் தெரிவித்து இடைக்கால அறிக்கையில் குறிப்பிட செய்துள்ளேன்.
இப்போது புதிய அரசியலமைப்பு என்ற ஒன்று வருவதில் பாரிய தாமதமும், சந்தேகமும் ஏற்பட்டு உள்ளதால் இன்றைய அரசியலமைப்புக்கு 21ஆவது திருத்தமாக, “சிங்களமும், தமிழும் இலங்கையின் இரண்டு ஆட்சி மொழிகள்” என்று ஒரே வரி யோசனையை புதிய அரசியலமைப்பு செயற்பாட்டுக்கு வெளியே கொண்டு வர போவதாக வழிகாட்டல் குழுவுக்கு நான் அதிகாரபூர்வமாக அறிவித்தேன்.
ஜே.வி.பி யின் “நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கும்” யோசனை 20வது திருத்த யோசனையாகவும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் “ஆட்சி மொழி சமத்துவ யோசனை” 21ஆவது திருத்த யோசனையாகவும் பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு திருத்த யோசனைகளாக முன்வைக்கபடும்.