யாழ். சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கணவனுக்கு கஞ்சா எடுத்துச் சென்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மனைவி நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்கப்பட்டார்.
தனது உடமையில் கஞ்சா போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் நீண்ட காலமாக யாழ். சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை பார்வையிட அவரது மனைவி நேற்று (31) சென்றுள்ளனர்.
அதன்போது சந்தேகநபருக்கு அவரது மனைவி எடுத்துச் சென்ற வெற்றிலை சரையிலிருந்து 4 கிராம் கஞ்சாவை சிறைக்காவலர்கள் மீட்டனர்.
இதனையடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டிருந்தார். சந்தேகநபரான பெண் இன்று யாழ். நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
“கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ். சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை அவரது மனைவியான இந்தப் பெண்ணே பொலிஸாரிடம் தகவல் வழங்கிப் பிடித்துக் கொடுத்தார்.
சிறைச்சாலைக்கு கஞ்சா எடுத்துச் செல்ல அவரது கணவரின் வற்புறுத்தலே காரணம். அத்துடன், இந்தப் பெண் 2 பெண் பிள்ளைகளின் தாயார்.
இவற்றைக் கருத்திற்கொண்டு பெண்ணை பிணையில் விடுவிக்கவேண்டும்” என்று பெண் சார்பில் மன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டது.
அதனை ஆராய்ந்த யாழ். நீதிமன்ற மேலதிக நீதிவான் வி.இராமகமலன், நிகழ்வு மற்றும் குடும்ப சூழலைக் கருத்திற்கொண்டு பெண்ணை பிணையில் விடுக்க உத்தரவிட்டார்.