இந்திய – இலங்கை உடன்படிக்கை செய்யப்பட்டு 30 (27.07.2017) வருடங்கள் ஆகிவிட்டன.30 வருடங்களில் என்னவெல்லாமோ நடந்து முடிந்து விட்டன

269
இந்திய – இலங்கை உடன்படிக்கை செய்யப்பட்டு 30 (27.07.2017) வருடங்கள் ஆகிவிட்டன. தமிழ் போராளிகளை சரணாகதியாக்குவதில் ஆதிக்க அரசுகள் வெற்றிபெற்று 30 வருடங்கள் ஆகின்றன. இந்தியாவும் இலங்கையும் கூட்டுச் சேர்ந்து தமிழ் மக்களின் மீது விரும்பாததைத் திணித்து 30வருடங்கள் ஆகின்றன. இரண்டு ஆதிக்க அரசுகளும் தமிழ் மக்களை பகடைக் காய்களாக பாவித்து தமது நலன்களை அடைந்து 30 வருடங்கள் ஆகின்றன.
இந்த 30 வருடங்களில் என்னவெல்லாமோ நடந்து முடிந்து விட்டன. குறிப்பாக புலிகள் தவிர்ந்த ஏனைய இயக்கங்கள் அனைத்தும் ஆயுதங்களைக் களைந்து, சரணடைந்து ”ஜனநாயகவழி”க்கு வரவழைத்து விட்டு பின்னர் எதனையும் தராதுவிட்டது, இருந்ததையும் திருப்பி வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டமை, தமிழ், முஸ்லிம் மக்கள் வரலாறு காணாத அவலங்களை அனுபவித்து விட்டமை, இலங்கை அரசின் அட்டுழியங்களுக்கு போராளி இயக்கங்களே துணை போய்விட்டமை, சமாதானம், பேச்சுவார்த்தை, தீர்வு என்பவற்றின் பேரால் அரசின் போலியான தொடர் நடவடிக் கைகள், யுத்தம், அதை நியாயப்படுத்த புதிய புதிய கற்பிதங்கள் என்று இந்த 30 வருடகாலத்தில் நடந்து முடிந்தவற்றை சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆனால் இத்தனைக்கும் பின்புலத்தில் இந்தியாவின் பாத்திரத்தை கூர்ந்து கவனிக்க தமிழ் சக்திகள் தவறிழைத்து வந்துள்ளனர். மீண்டும் மீண்டும் இந்தியாவை நாடிநிற்பதும், இந்தியாவை நம்பியிருப்பதுவும் தொடர்ந்தும் நிகழிந்து கொண்டு தான் இருக்கின்றன.
இந்தியா யார்? அதன் குறுகிய கால நீண்ட கால நலன்கள் என்ன? அந்த நலன்களை அடைவதற்காக அது இது வரை மேற்குலக நாடுகளை கையாண்டது எப்படி? அயல்நாடுகளை நடத்தியது எப்படி? அயல்நாடுகளை தனது நலன்களுக்காக ஈடுபடுத்துவதற்காக உள் முரண்பாடுகளை அது எப்படி கையாண்டு வந்தது? அவ்வாறான தலையீடுகளின் போது எந்தத் தரப்பின் நலன் முதன்மைப்படுத்தப்பட்டது? என்பன போன்ற கேள்விகளுக்கு தமிழ் சக்திகள் விடை காண தவறிவிட்டன என்றே கூறலாம்.
இந்திய அமைதிகாக்கும் படை பற்றிய திட்டமிடல்
இந்தியா: பேட்டை ரவுடி
தென்னாசியப் பிராந்தியத்தில் சனத்தொகை, நிலப்பரப்பு, கைத்தொழில் வளர்ச்சி, இராணுவ வலிமை என்பவற்றில் இந்தியா ஒரு பெரிய நாடு. இதனால் பிராந்தியத்தில் ஆதிக்க வலிமை கொண்ட நாடாக திகழ்கிறது. இதனால் இந்தியாவின் இறுமாப்பும், திமிரும் அண்டை நாடுகளின் மத்தியில் அதனை ஒரு பேட்டை ரவுடியாக செயற்படச்செய்துள்ளது. இதன் காரணமாக சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் யுத்தம் புரியவும் நேரிட்டதுடன். சிக்கிம் என்ற நாட்டை விழுங்கி ஏப்பமும் விட்டது. நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளைத் தன்னில் தங்கியிருக்கச் செய்து அவற்றின் வெளியுறவுக் கொள்கையையும் கூட தாமே வரையறுக்கிறது. நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் நடைபெறும் உள் நாட்டு யுத்தங்களில் அரசுக்கெதிரான சக்திகளுக்கு உதவி செய்வதற்கூடாக அவ் அரசுகளுக்கு தொல்லையும் கொடுத்து வருகிறது.
பனிப்போர் காலகட்டத்தில் ரஷ்யாவுடனும் பனிப்போரின் பின்னைய (Post Cold War Period) காலகட்டத்தில் அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளையும் சார்ந்து இருக்கிறது. தனது பிராந்திய மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ளத்த யாராக இருக்கும் வரையில் அது வல்லரசுகளுக்கு பணிந்து போவதில் பிரச்சினையில்லை என்று கருதுகிறது. இன்று அமெரிக்காவுக்கும் மேற்குலகுக்கும் இந்தியா பணிந்து போவதையும் அப்படித்தான் பார்க்கலாம்.
இலங்கையின் இனப்பிரச்சினையானது இந்தியா இலங்கையைக் கையாள நல்ல வாய்ப்பாகப் போனது. இலங்கை மேற்குலக வல்லரசுகளுக்கு முண்டு கொடுக்கின்ற காலங்களில் அதனை தடுத்து நிறுத்துவதற்காக, இலங்கைக்கு நெருக்கடி கொடுப்பதும், ஏனைய காலங்களில் நெருக்கடி கொடுக்கக்கூடிய சக்திகளை பலப்படுத்துவதும் இந்தியாவின் தந்திரோபாய நடவடிக்கையாக இருந்தது. இப்படியான காலங்களில் இலங்கை அரசுக்கு வழங்கக்கூடிய ஏனைய ஆதரவுகளை வழங்கி தனது ”பெருந்தன்மை”யையும் ”நட்பை”யும் அது வெளிப்படுத்தி வந்துள்ளது.
மாத்தையா – இந்திய அதிகாரிகள் சந்திப்பு
இந்தியாவின் கூட்டாளி
உதாரணத்திற்கு, மலையக மக்களின் குடியுரிமை பிரச்சினையானது இலங்கைக்கு ஒரு நெருக்கடியா, சரி, அதில் குறிப்பிட்ட சின்ன தொகையை ஏற்கலாம் என ஒப்பந்தம் (1964 சிறிமா-சாஸ்திரி, 1974 சிறிமா-இந்திரா) செய்து கொள்ளும். இந்த இடத்தில் (இந்தியாவுக்கும் பொறுப்பு உள்ள) மலையக மக்களின் நலனில் அக்கறையிருந்தால் குடியுரிமையற்ற ஏனையோரையும் பொறுப்பேற்பது இந்தியாவுக்கு ஒன்றும் சிக்கலான காரியமே அல்ல. ஆனால் இலங்கையை கையாள கருவிகளை எஞ்ச வைப்பதும் தயார்படுத்துவதும் இந்தியாவின் நீண்டகால நோக்கிலான தந்திரோபாயமாகும். அதேபோல் 1971 ஜே.வி.பி. கிளர்ச்சியை அடக்கவும், கச்சத்தீவை விட்டுக்கொடுக்கவும் இந்தியா தயார்.
இந்த இடத்தில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். இலங்கையில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் ஆட்சியின் போதெல்லாம் இந்தியாவில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியுடன் நெருங்கிய நல்லுறவு நிலவும். அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. குறிப்பாக இரண்டும் முன்னைய ஏகாதிபத்திய விரோத மேலோட்டமான அர்த்தத்தில் சோஷலிச தன்மை சார்ந்த வெளியுறவுக் கொள்கையை பின்பற்றியவை என்பது முக்கியமானது. மாறாக காங்கிரஸ் ஆட்சிக்கும் இலங்கையில் ஐ.தே.க ஆட்சிக்கும் இடையில் நல்லுறவு இருந்தது கிடையாது. இதன் காரணமாகத்தான் இலங்கையின் 1977 ஐ.தே.க ஆட்சியமர்வும் அதனைத் தொடர்ந்து திறந்த பொருளாதாரக் கொள்கையின் அறிமுகம், மேற்குலகுடனான நல்லுறவுகள், அவற்றின் முதலீடுகள், தலையீடுகள் என்பன இந்தியா இலங்கை விடயத்தில் கூடிய அவதானம் கொள்ளச் செய்தது எனலாம்.
1977 தொடக்கம் இலங்கையின் இனப்பிரச்சினை தென்னாசியப் பிராந்தியத்துக்கு அச்சுறுத்தலென்றும், தமிழ் மக்களில் தமக்கும் அக்கறையுண்டென்றும் கூறி இலங்கை அகதிகளை ஏற்கச்செய்ததும், (சில நேரங்களில் செயற்கையாகவே அகதிகள் வருகையை தூண்டிவிட்ட சந்தர்ப்பங்களும் உண்டு) தமிழ் போராளிகளுக்கு தஞ்சமளித்ததும் அவர்களது தளங்கள் இந்தியாவில் செயற்பட அனுமதித்ததும் , ஆயுதங்களை வழங்கியதும் ஆயுதப் பயிற்சிகள் அளித்ததும் அவதானிக்கத்தக்கவை. இதன் மூலம் பல ”பிடி”களை தம்வசமாக்கியது.
இயக்கங்கள் ஆயுதங்களைக் கையளித்தல்
இந்தியாவின் பிடியில் தமிழ் இயக்கங்கள்
விடுதலை இயக்கங்களுக்கு வழங்கிய ஆயுதங்களைக் கொண்டே இந்தியாவின் எதிர்ப்பார்ப்பை கணிக்கலாம். அவ் ஆயுதங்களைக் கொண்டு ரோந்து செல்லும் படையினரையும் காவலரண்களையும் மாத்திரமே தாக்க முடியும். பெரிய படை முகாம்களை தாக்கி ஆயுதங்களைக் கைப்பற்றவோ அல்லது அரசின் பாரிய படை நகர்வை முறியடிக்கவோ அல்லது ஒரு பிரதேசத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதோ இவ்வாயுதங்களால் சாத்தியப்படாது. இந்தியாவுக்கு தேவைப்பட்டதெல்லாம். ஸ்ரீ லங்கா படையினரை ஆங்காங்கு தாக்கி தொல்லை கொடுப்பதற் கூடாக இலங்கையை வழிக்கு கொண்டு வருவதே.
ஆயுதங்கள் விடயத்தில் இந்தியாவை நம்பியிருக்காமல் சர்வதேச சந்தையில் ஆயுத கொள்வனவு செய்ய முயன்ற தமிழ் இயக்கங்களின் மீது பகைமை கொண்டது இந்தியா. சில இயக்கங்களுக்கென ஆயுதங்கள் சென்னை துறைமுகத்தை வந்தடைந்த போதே அவற்றை பறிமுதல் செய்தது.
இந்திய அரசுடன் முரண்டு பிடிக்கின்ற காலகட்டங்களிலெல்லாம் இலங்கை அரசை தண்டிக்கும் விதத்தில் பாரியளவிலான தாக்குதல்களை நடத்துமாறு ”றோ” இயக்கங்களை பணித்தது. குறிப்பாக அனுராதபுரம் பௌத்த மதத்தளங்களை தாக்கிய தும். கொழும்பில் அப்பாவி பொதுமக்களை இலக்காகக் கொண்டு பாரிய குண்டு வெடிப்புகளை நடத்துவது எல்லாம் இதன்  தூண்டுதலின் காரணமாகவே நடந்ததாக பல போராளிகள் கூறுகின்றனர்.
இலங்கை தனக்கு பணிந்து போகும் காலகட்டங்களில் பேச்சுவார்த்தைக்கு போகுமாறு இயக்கங்களை தூண்டுவதும் ஏனைய காலங்களில் இயங்கங்களை தாக்குதல் நடத்தத் தூண்டுவதும் அதற்காக தயார்படுத்துவதையும் செய்து வந்தது.
இப்படியாக இயக்கங்களை தனது பிடிக்குள் வைத்துக்கொண்டு போராட செய்வதும் பேச வைப்பதும், போராட வைப்பதும் பேசவைப்பதுமாக மாறி மாறி நகர்த்தியது.
ராஜீவ் காந்திக்கும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கும் இடையில் நிகழ்ந்த உடன்படிக்கை
இந்தோ-இலங்கை உடன்படிக்கை
இந்தியாவின் இந்த போக்கு கேள்விக் குறியாகும் நிலை 1987இல் ஏற்பட்டது. 1987 மே மாதம் இலங்கை அரசு வடமராட்சியை தனது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் நோக்குடன் ”ஒப்பரேஷன் லிபரேஷன்” (Operation liberation) இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டதுடன் பொருளாதாரத் தடையையும் விதித்தது. யாழ் நகரை கைப்பற்று மானால் இலங்கை அரசை நெருக்கி பணிய வைக்கும் பலம் குறைந்துவிடும் என்பதைக் கண்டு கொண்ட இந்திய அரசு தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்தது. சர்வதேச அளவில் இலங்கை அரசு பெற்றிருந்த அவப்பெயர், தமிழக மக்களின் உணர்வலைகள் எல்லாமே தனக்கு சாதகமாக இருந்ததைக் கண்ட இந்தியா நேரடியாகவே தலையிட முடிவு செய்தது. பாதிக்கப்படட மக்களுக்கு நிவாரணம் எனும் போரில் இலங்கை வான்பரப்பில் அத்துமீறி போர்விமானங்களுடன் வந்து உணவுப் பொட்டலங்களை போட்டதற்கூடாக ”அடுத்ததும் நடக்கும்” என்று அச்சுறுத்தியது இந்தியா.  இந்தியாவின் யோசனைக்கு இலங்கை பணிந்தது.
தனது மூலோபாய நோக்கங்களை உடனடியாக நிறைவு செய்ய இதனை ஒரு சந்தர்ப்பமாக இந்தியா பயன்படுத்தியது. தமிழ் தலைமைகளின் அபிப்பிராயங்கள் எதனையும் கேட்காமல் தமிழ் மக்களின் அபிலாஷைகளை கொண்டிராத ஒரு தீர்வை இந்தியாவும் இலங்கையும் தயாரித்தன. தயாரித்த பின்புதான் ஏனைய இயக்கங்களின் மீது அதனை திணிக்க முயன்றது. புலிகள் உட்பட ஏறக்குறைய எல்லா இயக்கங்களும் இந்த மூன்றாம் தரப்பின் நலன்களுக்கான ஒரு தீர்வுக்கு பலியானார்கள். இலங்கை இந்திய ஒப்பந்தமும் நடைபெற்றது.
ராஜீவ் காந்தி – ஜே.ஆர்.ஜெயவர்த்தன நடத்திய ஊடக மாநாடு
இந்திய-இலங்கை நலன்கள்
இந்தியாவைப் பொறுத்தளவில் இலங்கையில் இந்தியாவின் நலன்களைப் பாதிக்கக் கூடிய வகையிலான வெளிநாட்டு இராணுவ, உளவுச் சேவைகள் செயற்படுவதோ, திருகோணமலை உட்பட வேறெந்த துறைமுகமோ வேறொரு நாட்டின் பாவனைக்கு ஈடுபடுத்துவதோ, வெளிநாட்டு ஒலிபரப்பு நிறுவனங்கள் இராணுவத் தேவைக்காக பாவிக்கப்படுவதோ இல்லை என்பன போன்ற விடயங்களை ஒப்பந்தத்தில் இலங்கை அரசிடமிருந்து எழுதி வாங்கிக் கொண்டது. இந்தக் காலப்பகுதியில் அமெரிக்கா ”வொய்ஸ் ஒப் அமெரிக்கா”வை (VOA – Voice Of America) அமைக்கவும் எண்ணெய்க்குத பயன்படுத்தலுக்கும் முயற்சி செய்து வந்ததும் கவனிக்கத்தக்கது.
அதே போல் இலங்கைக்கும் பல தேவைகள் இருந்தன. குறிப்பாக தமிழ் இயக்கங்கள் அனைத்தையும் நிராயுத பாணிகளாக்குவது இந்திய ஆதிக்கத்தை (ஆபத்தை) தணிப்பது, தென்னில ங்கையில் உக்கிரம் பெற்றிருந்த ஜே.வி.பி. கிளர்ச்சியை அடக்க அவகாசம் பெறுவது, உலக அளவில் பெற்றிருந்த அவப்பெயரை நீக்கும் வகையில் ”தீர்வை” வழங்கிவிட்டதாக வெளியுலகுக்கு காட்டுவது.
இரு நாடுகளும் தமது நோக்கங்களில் வெற்றி பெற்றன. ஆனால் எதனை தீர்ப்பதாகக் கூறிக்கொண்டு இத்தனையும் நடந்ததோ அந்தப் பிரச்சினைக்கு எந்தத் தீர்வும் கிட்டவில்லை. போதுமான அதிகாரமில்லாத ஒரு மாகாணசபையை ஆயுதங்களை களைந்துவிட்டு சரணாகதியடைந்த தமிழ் இயக்கங்கள் ஏற்றுக்கொண்டன. இந்த விடயத்தில் புலிகள் இயக்கம் பலியாகவில்லை என்றே கூறலாம். ”அமைதிப்படையையும்” இந்தியா இறக்கியது. அதன் எண்ணிக்கையும், படைக்கலங்களும், இது அமைதிப்படையல்ல தேவைப்பட்டால் நசுக்கவுமே வந்துள்ளது என்பதை உணர்த்தியது.
இயக்கங்களை நிராயுதபாணிகளாக்குவதில் காட்டிய ஆர்வத்தை ஒப்பந்தத்தின் மூலம் வழங்குவதாகக் கூறிய அரைகுறை தீர்வுகளைக் கூட நடைமுறைப்படுத்த இலங்கை அரசை நிர்ப்பந்திக்கவில்லை. ஒப்பந்தத்தில் குறிப்பிட்டவற்றை நிறைவேற்றும்படி பல போராட்டங்கள் உண்ணாவிரதங்கள் நடந்தன. புலிகளின் அங்கத்தவர் திலீபனும் மட்டக்களப்பில் அன்ன பூரணி எனும் பெண்ணும் உண்ணாவிரதத்தில் உயிர் நீத்தனர்.
IPKF கைப்பற்றிய ஆயுதங்களுடன்
தட்டிக்கேட்க யாருமில்லை
ஆரம்பத்தில் உலகிலேயே நான்காவது பெரிய படையுடன் மோதி வெற்றி பெறமுடியாது என கருதியதால் பணிந்து போன புலிகள் கூட அடுத்தடுத்து நடைபெற்ற கசப்பான நிகழ்வுகளினால் இந்தியப்படையை எதிர்த்து போரிடாவிட்டாலும் தாம் அழிந்து போக நேரிடுமென்பதை உணர்ந்தனர். புலிகளுக்கும் ”அமைதிப்படை”க்கும் இடையில் போர் நடந்தது. அதற்கு முன்னர். இலங்கைப்படையினரால் தமிழருக்கு இழைக்கப்பட்ட அத்தனை கொடுமைகளையும் விட அகோரமானதாக, மூர்க்கமானதாக இந்தியப் படையினரின் நடவடிக்கைகள் இருந்தன. இலங்கை அரசு அதற்கு முன், ஓரளவு எச்சரிக்கையுனேயே இவ்வகை அட்டூழியங்களைச் செய்தது. ஏனெனில் இந்தியா அதனையே பெரும் பிரச்சாரமாக சர்வதேச அளவில் எடுத்துச் சென்றுவிட்டிருக்கும் என இலங்கை கருதியிருந்தது. ஆனால் இந்தியப் படைகளே நேரடியாக களத்தில் இருந்ததால் எதிர் விளைவுகள் பற்றிய எந்த தயக்கமும் இன்றி போர் விமானங்கள், கனரக ஆயுதங்கள் என்பனவற்றைப் பயன்படுத்தி குண்டு மழை பொழிந்து ஈவிரக்கமின்றி தமிழ் மக்களை கொன்றொழித்தது.
பல பெண்கள் பாலியல் வல்லுறவு க்கு உள்ளானார்கள். முன்னெப்போ தையும் விட அதிகளவு உயிர், உடமை, சொத்துக்களின் இழப்பு காணப்பட்டது. இதனைத்தான் அன்று கொழும்பு ஆங்கிலப் பத்திரிகையொன்று IPKF என்பதை Innocent People Killing Force என்றது. வேறும் சில பத்திரிகைகள் Indian Peace Killing Force என்றன.
இதற்கிடையில் இந்தியாவிலும் இலங்கையிலும் முறையே வி.பி.சிங்கும், பிரேமதாசவும் ஆட்சியலமர்ந்தனர். பிரேமதாசவுக்கு தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான ”இந்தியப்படையை வெளியேற்றுவது” என்பதை நிறை வேற்ற வேண்டியி ருந்தது. அதன்படி புலிகளுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்ததுடன் இந்தியப் படையை ”வெளியே  போ!” என்றார். இந்தியா மிகவும் கோபமடைந்திருந்த நிலையில் வரதராஜப்பெருமாளைக் கொண்டு தமிழீழப் பிரகடனமும் செய்யப்பண்ணி பிரச்சினையை வேறுபக்கமாக திருப்பி மேலும் சிக்கலாக்கிவிட்டு இந்தியப் படை வெளியேறியது. மாகாண சபையும் கலைக்கப்பட்டது. சரதராஜப் பெருமாளையும் கூடவே கூட்டிச்சென்று விட்டது இந்தியா.
ஜனாதிபதி பிரேமதாச பிரதமர் ராஜீவ் சந்திப்பு
இந்தியப்படையை இலங்கையிலிருந்து வெளியேற்றுவதற்காகவே உருவான பிரேமதாச-புலிகள் கூட்டு இந்தியப் படை வெளியேறியதைத் தொடர்ந்து அவசியமற்றதாகியது.
இவ்வாறு இந்திய நலனையே முதன்மையாகக் கொண்ட இவ்வுடன்படிக்கை குறித்தும் 13வது திருத்தச்சட்டம் குறித்தும் இன்றும் தமிழ் இயக்கங்கள் நம்பிக்கை வைத்திருப்பது தான் வேடிக்கை. சில இயக்கங்கள் தமது ஆயுதங்களைக்களைந்தமை குறித்து இன்றும் கவலைப்படுவதை காணமுடிகிறது.
இந்தியா குறித்து நிலவுகின்ற மாயை இரண்டு வகையானது. முதலா வது வகை, இந்தியா தமிழ் மக்களில் அக்கறையுள்ளது. தமிழக மக்களின் அக்கறைக்காக இலங்கை தமிழரிலும் அதற்கு அக்கறையுண்டு, தமிழ் மக்களின் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரானது. தேவைப்பட்டால் தலையிடும், உணவு அனுப்பும், அகதிகளை ஏற்கும், பராமரிக்கும், ஆயுதங்களை வழங்கும் பயிற்சி வழங்கும்… என இந்தியாவில் அதீத நம்பிக்கை கொண்ட மாயை.
அடுத்த மாயையானது இந்தியாவை மீறி எதனையும் செய்யமுடியாது என்பதாகும். அது உலகின் நான்காவது பெரும்படை, ஒரு வல்லரசு, பிராந்தியத்தின் ஏகபோக சண்டியன். எந்த நேரத்திலும் இந்தியா எனும் பாறை சிறு எறும்பின் மீது விழுந்து நசுக்கி விடும். ஆகவே அதை மீறி எதையும் செய்யமுடியாது அதன் ஆதரவு கட்டாயம் தேவை. அது சொல்வதைக் கேட்டு நடப்போம் என்பதே.
இரண்டு போக்குமே அபாயகரமானது. இந்தியாவை மையப்படுத்தி பிரச்சினையை பார்க்கும் போக்கு அபத்தமானது. ஒடுக்குமுறை, ஒடுக்கு முறை கருவிகள், என்பவற்றிலிருந்து பாதுகாப்பது, உரிமை பெறுவது எப்படி என்கின்ற மூலோபாயங்களிலிருந்து கொண்டு அவற்றை கையாள்வது தொடர்பான தந்திரோபாய நிலையை எட்டுவதே இலக்கை அடைய வழிசெய்யும். மாறாக ஒடுக்குமுறை சக்திகளைக் கண்டு அதீத பீதி கொள்வதோ அதீத நம்பிக்கை கொள்வதோ அவற்றின் தந்திரோபாயங்களுக்கு பலியாவதில் போய்தான் முடியும்.
 

யூதர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் நடந்த வரலாற்றுக் கொடுமைகளைப் பற்றி அதிகமாகப் பேசுபவர்கள், இலங்கைவாழ் இந்தியர்களுக்கு நடந்த கொடுமையை அறியாது, அறிந்தாலும் அது குறித்து பேசாது இருக்கின்றனர். 10.09.1983)

இலங்கையின் வரலாற்றில் ஈழத் தமிழர், மலையகத் தமிழர் ஆகிய இரு தரப்பினரும் ஒன்றாக இணைந்து தமிழர்களின் போது அரசியல் பிரச்சினையாகவே முன்வைத்து வந்த காலமொன்று இருந்தது. அடிப்படையில் புவியியல் ரீதியில் இருந்த இடைவெளியும், பிரச்சினைகளின் வடிவமும் வெவ்வேறாக இருந்த போதும் பொதுவாக கோரிக்கை வைத்து வந்த காலமொன்று இருந்தது. சனத்தொகையில் தமிழ் மக்கள் 30 க்கும் அதிகமாக இருந்த அந்த காலப்பகுதியில் தமிழ் மக்களின் அரசியல் பலத்தைக் குறைக்க வேண்டுமெனில் அவர்களது பிரதிநிதித்துவத்தைக் குறைக்க வேண்டும். அப்படியாயின் அதற்குரிய குறுக்கு வழியாக சிங்களத் தரப்பு கையாண்டது மலையகத் தமிழரின் அடிப்படை அரசியல் இருப்பில் கைவைப்பது தான். அது வெறும் அரசியல் இருப்பு மாத்திரமல்ல, அவர்களின் வாழ்வாதார பிரச்சினையிலும் தான் அவர்கள் கைவைத்தார்கள்.
1911, 1921, 1931, 1946, 1953, 1963 ஆகிய காலப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணிப்பீட்டில் இலங்கை தமிழ் மக்களினதும், மலையகத் தமிழர்களினதும் எண்ணிக்கை சமனாகவே இருந்தது. 1911 இல் 1931 இல் மொத்த சனத்தொகையில் 15.4 வீதமாக இருந்த மலையகத் தமிழர் எண்ணிக்கை 1981 இல் 5.5. ஆக ஆகிய அவல நிலையை புரிந்து கொள்வது அவசியம்.
எங்களுக்கு இந்த மக்கள் தேவை இல்லை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்று இலங்கையும், அவர்கள் இலங்கையர்களாக ஆகிவிட்டார்கள் எங்களுக்கும் தேவையில்லை என்று இந்தியாவும் மாறி மாறி சம்பந்தப்பட்ட மக்களின் கருத்தை அறியாமல் பந்தாடினார்கள்.

“இலங்கையில் பிறந்த இவர்களுக்கு இந்தியாவில் போக்கிடமில்லை. அரை மில்லியன் மக்கள் அரசியல் அதிகாரத்துக்கான விளையாட்டில் பகடைக்காயாக ஆக்கப்பட்டார்கள்.” என்றார் தந்தை செல்வநாயகம்.

சுதந்திரத்தின் பின்னர் டீ.எஸ்.சேனநாயக்க, டட்லி சேனநாயக்க, ஜோன் கொத்தலாவல, சிறிமா பண்டாரநாயக்க என அனைவருமே இந்திய வம்சாவளியினர் பற்றிய பிரச்சினையில் அவர்களை நாட்டிற்குள் வைத்திருக்க முடியாது என்பதில் மும்முரமாக இருந்தனர், அவர்களின் ஆட்சிக் காலத்தில் இந்தப் பிரச்சினை இலங்கை-இந்திய இராஜதந்திர உறவில் வலுவான பாத்திரமாற்றியது.
இந்தியா வம்சாவளியினரை நாடு கடத்துவதற்கான சிறந்த ஏற்பாடாகவே நேரு – கொத்தலாவல ஒப்பந்தத்தை சிங்களத் தரப்பு பார்க்கின்றது. அது மட்டும் நிகழ்ந்திருக்குமானால் அதன் பின் வந்த விளைவுகளை தவிர்த்திருக்கலாம் என்று சிங்களத் தரப்பு புலம்புவதை ஆங்காங்கு காண முடிகிறது.
நேரு உயிருடன் இருக்கும் வரை அந்த ஒப்பந்தம் உரியபடி நடைமுறைப்படுத்தாது காலம் தாழ்த்தப்பட்டது.
1963 இல் சிறிமா சீனாவுடன் செய்துகொண்ட கடற்படை ஒப்பந்தம் இந்தியாவை முகம் சுளிக்கச் செய்தது. இந்திய – சீன எல்லைச் சண்டையிலும் சீன ஆதரவு நிலைப்பாட்டை இலங்கை எடுத்திருந்தது. இந்தியாவின் எதிரியை தனது காலடியிலேயே கொண்டு வந்து சேர்த்தது போன்ற சம்பவங்களால் இலங்கையை சரிகட்டும் தேவை இந்தியாவுக்கும் இருந்தது.
நேரு 27.05.1964 இறந்து போனார். அடுத்த ஐந்தே மாதத்தில் அந்த ஒப்பந்தத்துக்கு உயிர்கொடுக்க அதாவது 22.10.1964 இல் சிறிமாவும் டி.பி.இலங்கரத்ன, பீலிக்ஸ்.ஆர்.டி.பண்டாரநாயக்க, என்.கியூ.டயஸ் ஆகிய அமைச்சர்களுடன்  இந்தியாவுக்கு விரைந்தார். ஒருவார காலம் அவர்கள் தங்கியிருந்து தொடர் பேச்சுவார்த்தை நடத்தி 29.10.1964 இல் செய்துகொள்ளப்பட்டது தான் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம்.

இலங்கையில் நாடற்றவர்களான 9,75,000 பேரில் 525,000 லட்சம் பேருக்கு இந்தியாவும், 300,000 பேருக்கு இலங்கையும் குடியுரிமை வழங்குவது, மீதமுள்ள 150,000 லட்சம் பேரின் நிலையை பிற்பாடு முடிவெடுப்பது என கையெழுத்தானது. உயிரும் உணர்வும்மிக்க மனிதர்கள் வெறும் எண்களாக பங்கிடப்பட்டனர். 1967 முதல் அமலாகத் தொடங்கிய இந்த ஒப்பந்தம் அவர்களை

  1. இந்தியக் குடியுரிமை பெறுவோர்,
  2. இலங்கை குடியுரிமை பெறுவோர்,
  3. நாடற்றவர்கள்

என மூக்கூறாக பிரித்து வீசியது.

ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்ட இரண்டே மாதங்களில் அரசாங்கம் சிம்மாசனப் பிரசங்கத்தின் போது ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களின் ஆதரவுடன் தோற்கடிக்கபட்டதில் ஆட்சி கவிழ்ந்தது. வாக்களிப்பு நிகழ்வதற்கு சற்று முன்னர் வரை ஆட்சியைக் கவிழ்த்தி விட வேண்டாம் என்று கண்ணீர் மல்க பல உறுப்பினர்களை மன்றாடியவர் நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டி.வில்லியம் பெர்னாண்டோ. இப்படி செய்துவிட்டால் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாது போய் விடும் எனவே தோற்கடித்து விடாதீர்கள் என்று கெஞ்சியவர் அவர்.
வில்லியம் பெர்னாண்டோ
வில்லியம் பெர்னாண்டோ
வில்லியம் பெர்னாண்டோ மலையகத்தில் மீண்டும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களைத் தொடக்கி விரிவாக்கி மலையக வாக்குகளை பலவீனப்படுத்தும் வேலைத்திட்டத்தை 1956 இல் ஆரம்பித்தவர். அவர் பாராளுமன்றத்துக்கு தெரிவாவதற்கும் அப்படி குடிஎற்றப்பட்டவர்களின் வாக்குகள் தான் அவருக்கு கைகொடுத்தன. அவர் மலையகத்தில் தொடங்கிய முதலாவது சிங்களக் குடியேற்றம் கிகிலியாமான மலையில் உள்ள “ஷாந்திபுர” கிராமம். அடுத்ததாக “கலாபுரய” என்கிற குடியேற்றத்தை ஆரம்பித்து வைப்பதற்காக பிரதமர் சிறிமாவை அவர் வரவழைத்தார். அங்கு பேசிய சிறிமா பண்டாரநாயக்க “மலைநாட்டில் சிங்களவர்களின் எதிர்காலம் நாசமடைந்து போனதன் காரணம் அவற்றில் பெரும்பகுதி அந்நியர் கைக்கு  சென்றது தான். அந்த பயங்கரத்திலிருந்து விடுவிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் டி.வில்லியம் பெர்னாண்டோவால் உருவாக்கப்பட்டதால் இந்த விவசாய குடியேற்றத் திட்ட அன்குரார்ப்பனத்தில் கலந்துகொள்வதில் பெருமையடைகிறேன்” என்றார். வில்லியம் இந்த குடியேற்ற நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டதுடன் அந்தக் குடியேற்றங்களைச் சுற்றி சிங்கள பாடசாலைகள், பௌத்த விகாரைகள், அரச அலுவலகங்கள் என உட்கட்டமைப்பு வேலைகளை அதிகரித்ததுடன் அவற்றுக்கென மேலும் பல சிங்களவர்களை பெருக்கினார். அவர் மேற்கொண்ட குடியேற்றங்கள் பற்றிய பல விபரங்களை கடந்த ஆண்டு 29.02.2016 “திவய்ன” சிங்கள பத்திரிகையில் விரிவான கட்டுரையொன்று வெளியாகியுள்ளது.
அவர் மலையக மக்களுக்கு எதிராக எழுதிய நூல்களில் இரண்டு முக்கியமானவை
  1. “சிங்களவர்களின் நிலக்கொள்ளை” (සිංහලේ ඉඩම් කොල්ලය)
  2. “சிங்களவர்களின் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் மற்றும் மலைநாட்டுக் கனவு” (සිංහලයාගේ අතීතය වර්තමානය සහ අනාගතය සහ කඳු සීනය ) இந்த நூலின் அட்டைப்படத்தில் துட்டகைமுனு எல்லாளனை ஈட்ட்டியால் குத்திக் கொல்லும் காட்சியும், சுமங்கள தேரர் தலதா மாளிகையின் முன்னால் ஆங்கிலக் கொடியை இறக்கும் காட்சியும் ஓவியமாக தீட்டப்பட்டிருக்கும்.
 1960-1965 வரை மாத்திரம் தான் வில்லியம் நுவரெலியா பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். 1965, 1970 ஆகிய தேர்தலில் அவரால் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் 1970 உள்ளூராட்சித் தேர்தலில் நுவரெலிய மேயராக தெரிவு செய்யப்பட்டார். இந்திய வம்சாவளியினர் தோட்டங்களை கொள்வனவு செய்யுமுன் அவற்றை அரசு சுவீகரிக்க வேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கையை இப்போதே தொடக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
இன்றும் பெருந்தோட்டப் பகுதிகளில் சிங்களவர்கள் சிறுபான்மையாக வாழும் பகுதிகளில் கூட மலையக மக்கள் மீது வன்செயல்கள் அடிக்கடி தூண்டிவிடப்படுகிறது. அப்படியான சந்தர்ப்பங்களில் அரசாங்கம் அவற்றைக் கண்டுகொள்வதுமில்லை. மலையகத்தவர் பீதியுடனும் அச்சதுடனும் வாழும் பல பகுதிகளை இன்னும் பல இருக்கின்றன.
இடதுசாரிக் கட்சிகளின் பல்டி
1965 இல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஐ.தே.கவை ஆதரிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட வேளை முக்கிய இடதுசாரிக் கட்சிகளும் மலையக மக்களுக்கெதிரான இனவாத நிலைப்பாட்டை எடுத்தன. நாடு கடத்துவதை ஆதரித்தன. சிறிமா சாஸ்திரிஒப்பந்த ஏற்பாட்டின் படி தோட்டத் தொழிலாளர்கள் திரும்பிப் போதல் தடைப்பட்டிருக்கிறது என்று விசனப்பட்டு தமது பத்திரிகைகளில் எழுதினர். “மீனாட்சியை வெளியேற்றுமுன் சிறிமாவோ துரத்தப்பட்டுவிட்டார்” என்றும் “இலங்கையை வெற்றி கொண்ட சோழ அரசர்கள் திரும்பிப் போனது போல் தொண்டமானும் இந்தியாவுக்கு திரும்புகிறார்” என்றும் அதே பத்திரிகையில் எழுதின. (ல.ச.ச.க வின் “ஜனதின்” பத்திரிகை 30.03.1965). “டட்லியும்-தொண்டமானும் இரகசிய ஒப்பந்தம்”, “விரும்பியவர்கள் மட்டுமே நாடு திரும்பலாம் என்று உடன்பாடு” என்றெல்லாம் அப்பத்திரிகையில் தொடர்ந்து பிரச்சாரம் செய்தனர். மலையகத்தவர் விடயத்தில் இடதுசாரிக் கட்சிகளின் இந்த அரசியல் திருப்பம் குறித்து குமாரி ஜெயவர்த்தனாவும் தனது “இன வர்க்க முரண்பாடுகள்” நூலில் விளக்கியுள்ளார்.
மலையக மக்கள் தமது அரசியல் இருப்புக்கான வாக்கு வங்கியாக இருக்கும் வரை அவர்களுடன் இருந்த இந்த கட்சிகள் அம்மக்கள் தமது கையைவிட்டு நழுவிய வேளை அம்மக்களின் அடிப்படை இருப்புக்கே உலை வைக்க துணை போனார்கள் என்பதை வரலாறு பதிவு செய்துகொள்கிறது.
சிங்கள இனவாதமயப்படுத்தப்பட்ட மக்கள் மத்தியில் இன்னமும் மலையக மக்கள் இங்கே இருக்கிறார்கள் என்பதின் சினத்துடன் தான் இருக்கிறார்கள். மலையகத்தவர் மீதான வெறுப்புணர்வு உரிய தருணங்களில் வெளிப்பட்டும் வருகிறது. சிங்கள இனவாத சக்திகளும் அவ்வப்போது இத விவகாரத்தை தங்கள் அரசியல் லாபத்துக்காக கூர்மைப்படுத்தவும் தவறுவதில்லை. அப்போதே முழுமையாக அனுப்பியிருக்கவேண்டும் என்கிற புலம்பலை இனவாதத் தரப்புக்கு சித்தாந்தத் தலைமை கொடுத்துவரும் நளின் டீ சில்வா, ஹரிச்சந்திர விஜேதுங்க, எஸ்.எல்.குணசேகர போன்றோர் இன்றும் மேற்கொண்டபடி தான் இருக்கிறார்கள். மலையக மக்களுக்கு எதிரான நூல்கள், கட்டுரைகளும் தாராளமாக வெளிவந்தவன்னமும் தான் இருக்கின்றன.
விளைவு
ஆரம்பத்தில் தமிழகத்திலிருந்து தமிழர்களை எப்படி அழைத்துச் சென்றார்களோ, அதே போன்று சாரை சாரையாக கப்பலில் ஏற்றி தூத்துக்குடியிலும் சென்னையிலும் படகு மூலம் இராமேஸ்வரத்திலும் கைதிகள் போல் இந்திய மணலில் இறக்கி விடப்பட்டனர். அப்படி வந்து இறங்கியவர்களுக்கு இந்தியா, தொடர்பற்ற மண்ணாக தெரிந்தது. தங்களுடைய மூதாதையரின் மண்ணில் திக்கு தெரியாமல் திகைத்துத் திரிந்தனர். புதிய  சூழலில், ஜீவனத்துக்கு வழியில்லால் திண்டாடினர். மீண்டும் தேயிலைத் தோட்டத் தொழிலுக்காக கொடைக்கானல், நீலகிரி, மூணாறு, வால்பாறை, கர்நாடகத்தில் உள்ள சிக்மகளூர், கேரளா, டார்ஜிலிங் வரை பயணித்தனர். சிலர் துயரம் பொறுக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர்.
இலங்கையில் இம்மக்களை எப்படி வந்தேறி குடிகள் என்றும், ஆந்நிய இந்தியர்கள் என்றும் பார்த்தார்களோ அதுபோல தமது மூதாதையாரின் தேசத்தில் இலங்கையிலிருந்து வந்த சிலோன்கார வந்தேறிகளாக பார்க்கப்பட்டார்கள். இந்தப் பிரிவினால் பலர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு பைத்தியக்காரர்களான கதைகளும் உண்டு. இந் நிலைமை இன்னமும் தொடர்கிறது.
லட்சக்கணக்கான மக்களின் குடியுரிமை இல்லாமலாக்கிய சிறிமா நினைத்திருக்க மாட்டார் 1980 இல் தனது குடியுரிமை பறிக்கப்பட்ட வேளை அதுபோன்ற வலியை தானும் தாங்க வேண்டியிருக்கும் என்று. ஆனால் சிறிமாவுக்கு அவரைத் தாங்க மண் இருந்தது. மலையகத்தவர்களைத் தாங்க; வாழ வந்த மண்ணுமில்லை, மூத்தகுடி பந்தமுமில்லை என்றானது.
இலங்கைத் தமிழர்கள் பற்றிய விவகாரங்களைப் பொறுத்தளவில் நேரடியாக சம்பந்தப்பட்ட அம்மக்களின் தலைவர்களுடன் உடன்பாடு காண்பதும் பின்னர் மீறுவதுமாக தொடர்ந்தது. ஆனால் மலையகத் தமிழர் விடயத்தில் அம்மக்களின் தலைவர்களுடன் பேசவே தேவையில்லை என்று கருதினர் சிங்கள ஆட்சியாளர்கள். அம்மக்களுடன் கலந்தாலோசிக்காமல், அவர்கள் விருப்பு வெறுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இந்தியாவுடன் சேர்ந்து சரிகட்டுவதில் ஈடுபட்டது.
துரோகங்கள்

சிறிமா – சாஸ்திரி   ஒப்பந்தம்
இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி மக்களின் நிலைமை மற்றும் எதிர்காலம் தொடர்பான கடிதப் பரிமாற்றம்.
இந்தியப் பிரதமர் கடித  எண். 446/PMO/64

புது தில்லி
அக்டோபர் 30 1964
மேதகு பிரதமருக்கு
தங்கள் கடித எண்  CIT/ICP/62    கிடைக்கபெற்றேன் .கடந்த அக்டோபர் , 1964 ,  24 முதல்  30 வரை  தினங்களில் நமக்கிடையில் நடந்த  இந்திய வம்சாவளி மக்களின் நிலைமை மற்றும் எதிர்காலம் தொடர்பான நமது உரையாடல் சார்ந்து வந்த தங்கள் கடிதம் கண்டேன். அதன் அடிப்படையில் பின்வரும்  முக்கிய தலைப்புகளின் கீழ் இணக்கம் தெரிவிக்கிறேன்.

  1. இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் இலங்கை அல்லது இந்திய குடிமக்களாக அங்கீகாரம் பெறாத, இந்திய வம்சாவளி அனைவரும் இலங்கை அல்லது இந்திய குடிமக்களாக ஏற்றுக்கொள்ளப்படுவதாகும்.
  2. இந்த வகையில் அடங்குவரின் எண்ணிக்கை 1964 இல் 975,000 பேர். இது சட்டவிரோதமாக குடியேறிவர்களையும் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்போர்களையும் உள்ளடக்காது.
  3. இவர்கள் அனைவருக்கும் இலங்கை அல்லது இந்திய குடிமக்களாக அங்கீகாரம் வழங்கப்படும். இவர்களுள் 3 லட்சம் பேருக்கு, இயற்கையாக அதிகரிக்கும் மக்கள் தொகை சேர்த்தும், இலங்கை ஏற்றுக் கொள்ளும். இந்தியா 525,000 பேரை இயற்கையாக அதிகரிக்கும் மக்கள் தொகை சேர்த்தும் இந்தியா , இந்திய குடிமக்களாக அங்கீகாரம் வழங்கும்.
  4. எஞ்சியுள்ள 150,000 பேருக்கு, இரு தரப்பு அரசும் இணைந்து தனியாக வேறு ஒரு ஒப்பந்தத்தின் மூலம் தீர்வு வழங்கும்.
  5. இந்திய அரசு இவர்களை 15 ஆண்டு கால கட்டத்துக்குள் பல கட்ட நிலைகளில் ஏற்றுக்கொள்ளும்.
  6. மேற்படி பந்தி 3 மற்றும் 5 இன் படி இரு நாடுகளும் பரஸ்பரம் ஒரே கால அட்டவணையின் கீழ் குடியுரிமை வழங்கல் மற்றும் தாய் நாட்டுக்கு திருப்பி அனுப்பும் நபர்களின் எண்ணிக்கை சம அளவில் இருக்குமாறு இரு நாடுகளும் பார்த்துக் கொள்ளும்.
  7. இந்த வகையில் தாய் நாடு திரும்பும் மக்களின் வசதி வாய்ப்புக்களும், வேலை வாய்ப்புக்களும் மற்ற மானிலங்களை ஒத்திருக்க இலங்கை அரசு ஒத்டுழைப்பை வழங்கும். திரும்பிச் செல்லும் காலம் வரை , அவர்கள் பணி வயது எல்லை 55 ஐ எட்டும் வரை அவர்கள் வேலை நீகம் செய்யப் பட மாட்டர்கள்.
  8. இலங்கை அரசின் பண மாற்றீட்டு வரம்பிற்கு உட்பட்டு அவர்கள் இறுதியாக நாடு திரும்பும் போது அவர்களின் பணியில் கிட்டும் ஓய்வூதியம், நலன் நிதி உட்பட அனைத்து சொத்துக்களையும் இந்தியாவுக்கு கொண்டு செல்ல இலங்கை தடை விதிக்காது. இந்த தொகை ரூபா 4,000 க்கும் குறைவாக இருக்க வேண்டும் என்று இலங்கை நிர்ப்பந்திக்காது.
  9. உடனடியாக இரு பதிவேடுகள் தயாரிக்கப்பட்டு ஒன்று நாடு திரும்புவோர் பட்டியலையும், மற்றது இலங்கை குடியுரிமைப் பெறுவோரையும் உள்ளடக்கும். ஆனாலும் இதனைத்  தயாரிக்க எடுக்கும் காலம் நாடு திரும்புவோர் மற்றும் இலங்கை குடியுரிமைப் பெறும் முன்னதாகவே இருக்க வேண்டும் என்பதில்லை.
  10. இந்த ஒப்பந்தம் இந்த நாள் முதல் அமுலுக்கு வருவதுடன் இது தொடர்பாக சிறந்த செயல்பாட்டு முறைகளைக் கொண்ட அரசு இயந்திரத்தினை உருவாக்க இரு தரப்பு அரசு அதிகாரிகளும் உடனடியாக சந்தித்து பேசுவார்கள்.

மேற்கண்ட பகுதிகள் நம்மிடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தை சரியாக விளக்கியுள்ளது.

 தொடரும்…………..
SHARE