வவுனியா – ஈரட்டைபெரியகுளம் பகுதியில் புதையல் தோண்டுவதற்குரிய பொருட்களுடன் வானில் பயணித்த மூவரை நேற்று விஷேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
இதன்போது அவர்களிடமிருந்த பொருட்களும் அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கண்டியிலிருந்து வானில் பயணித்த மூவர் நேற்றையதினம் சந்தேகத்திற்கிடமான முறையில் வவுனியா நகர் முழுவதும் பயணித்துள்ளனர்.
இதனையடுத்து மாலை ஈரட்டைபெரியகுளம் எரிபொருள் மீள்நிரப்பு நிலையத்திற்கு அருகில் குறித்த வாகனத்தினை விஷேட அதிரடிப்படையினர் திடீர் சோதனை மேற்கொண்ட சமயத்தில் வானிலிருந்து ஸ்கானர் இயந்திரத்தினை கைப்பற்றியுள்ளனர்.
அதன் பின்னர் விஷேட அதிரடிப்படையினர் கைது செய்யப்பட்ட 38, 49, 42 வயதுடைய மூவரையும், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தொலைபேசிகள், வான் என்பவற்றையும் ஈரட்டைபெரியகுளம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை ஈரட்டைபெரியகுளம் பொலிஸார் மேற்கொண்டுவருவதுடன், இன்றையதினம் சந்தேகநபர்களை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.