பப்புவா நியூ கினியின் சதர்ன் ஹைலேண்ட மாகாண ஆளுநர் தேர்தல் முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. இந்த தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளரின் ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
நீதிமன்ற தீர்ப்பும் அவருக்கு எதிராக அமைந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் வெள்ளிக்கிழமை கடும் வன்முறையில் ஈடுபட்டனர்.
மாகாண தலைநகரான மென்டியில் ஒரு விமானத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்தனர். மேலும் சில கட்டடங்களையும் சேதமாக்கி தீ வைத்ததால் பதற்றம் அதிகமாகியது. நிலநடுக்க பாதிப்புக்கான நிவாரணப் பொருட்கள் வைத்திருந்த கட்டடம் கும்பல்களால் சூறையாடப்பட்டது. கலவரம் மேலும் பரவி, நிலைமை கட்டுக்கடங்காமல் போனதையடுத்து, மாகாணத்தில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
9 மாதங்களுக்கு இந்த நெருக்கடி நிலை அமுலில் இருப்பதாகவும், அதுவரை மாகாண அரசின் ஆட்சி இரத்துச் செய்யப்பட்டிருப்பதாகவும் பிரதமர் பீட்டர் ஓ-நீல் அறிவித்துள்ளார். வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.மாகாணத்தில் வன்முறையை கட்டுப்படுத்தி அமைதியை நிலைநாட்டுவதற்காக ஏராளமான படைகள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.