புதிய அரசியலமைப்பிற்கான நிபுணர்கள் குழுவின் வரைபினை எம்.ஏ.சுமந்திரனும் ஜயம்பதி விக்கிரமரத்னவும் யாருக்கும் தெரிவிக்காமல் தமது நோக்கங்களை நிறை வேற்றுவதற்காக தயாரித்துள்ளனர் என்று சபையில் சுதந்திரக்கட்சியின் சுயாதீன அணியினரும் பொது எதிரணியினரும் குற்றஞ்சாட்டியதுடன், ஜனாதிபதியை பதவி நீக்கு வதற்கான ஏற்பாடுகளையும் வரைபில் இவர்கள் உள்ளடக்கியுள்ளதாகவும் விசனம் தெரிவித் தனர். வழிநடத்தல் குழுவை இவர்கள் ஏமாற்றுவதற்கு எத்தனித்துள்ளனர்.
நிபுணர் குழுவினரின் இணக்கமின்றி வெளிநாட்டில் உள்ளவர்களின் கையொப்பத்தை போலியாக இட்டு வரைபினை சமர்ப்பித்துள்ளனர். திருட்டுத்தனமாக வரைபினை தயாரித்து தமது அரசியல் நோக்கங்களை நனவாக்கி கொள்வதற்காக எம்மை ஏமாற்ற பார்க்கின்றனர் என்றும் இவர்கள் குற்றம் சுமத்தினர்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட சுயாதீன அணியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஒழுங்கு பிரச்சினையொன்றை முன்வைத்து எழுப்பிய குற்றச்சாட்டுகளை அடுத்து சர்ச்சையான நிலைமை ஏற்பட்டது.
இதன்போது தயாசிறி ஜயசேகர எம்.பி குறிப்பிடுகையில்,
அரசியலமைப்பின் வழிநடத்தல் குழு நேற்று (நேற்று முன்தினம்) கூடியது. இதன்போது நிபுணர்கள் குழுவின் வரைபு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் நிபுணர்களுக்கு மத்தியில் இணக்கம் இல்லாத தன்மை காணப்படுவதுடன் வழிநடத்தல் குழுவிலும் இணக்கப்பாடு இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
நிபுணர் குழுவில் பத்து பேர் உள்ளனர். அதில் ஆறு பேர் கைச்சாத்திட்டுள்ளனர். நான்கு பேர் கைச்சாத்திடவில்லை. இதன்படி பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், ஜயம்பதி விக்கிரமரத்ன, சுரேன் பெர்னாண்டோ ஆகியோரே இந்த வரைபை தயாரித்துள்ளனர். இந்த வரைபில் என்றுமில்லாத வகையில் ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்குவதற்கு பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் சபாநாயகர் ஆகியோருக்கு அதிகாரம் வழங்கியுள்ளனர்.
இது ஜனாதிபதியை நீக்கும் சதி திட்டமாகும். அதற்கான ஏற்பாடுகளை வரைபில் உள்ளடக்கியுள்ளனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இருவர் சேர்ந்து நாட்டின் அரசியலமைப்பினை உருவாக்க பார்க்கின்றனர். அரசியலமைப்பு பணிகள் உருவாக்க அனைத்து கட்சிகளும் இணைந்துள்ள நிலையில் மூவர் மாத்திரம் இணைந்து அரசியலமைப்பினை உருவாக்குவதாயின் ஏனைய கட்சிகளின் நிலைமை என்ன? அவ்வாறாயின் நாட்டின் நிலைமை என்ன? பெரும்பான்மையினரின் ஆதரவு இதற்கு அவசியமாகும் என்றார்.
போலியான கையொப்பம்
இதனையடுத்து எழுந்த கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே,
நிபுணர்கள் குழுவினரின் இணக்கமின்றி திருட்டுத்தனமாக ஆவணமொன்றை தயாரித்துள்ளனர். நிபுணர் குழுவின் உறுப்பினர் ஒருவர் ஆறு மாதங்களாக வெளிநாட்டில் உள்ளார். அவர் நாட்டிற்கு வரவில்லை. ஆனால் அவரின் கையொப்பம் இடப்பட்டுள்ளது. இது எப்படி நடக்கும். இது சாதாரண விடயமாக கருத முடியாது. நாட்டின் அரசியலமைப்புடன் சம்பந்தப்பட்ட விடயமாகும். போலியான கையொப்பமிட்டு புதிய அரசியலமைப்பினை அவசரமாக கொண்டு வர முனைகின்றனர். ஆகவே இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.
இதன்போது எழுந்த தினேஷ் குணவர்தன எம்.பி. கூறுகையில்,
வழிநடத்தல் குழுவில் நானும் உறுப்பினராக உள்ளேன். தயாசிறி ஜயசேகர முன்வைத்த குற்றச்சாட்டு பாரதூரமான விடயமாகும். எம்.ஏ. சுமந்திரனும் ஜயம்பதி விக்கிரமரத்னவும் இணைந்தே வரைபு அறிக்கையை தயாரித்துள்ளனர். இந்த வரைபுக்கு நிபுணர்கள் குழுவிலும் இணக்கமில்லை. இது திருட்டுத்தனமாக செய்யப்பட்ட திட்டமாகும். ஜனாதிபதியை நீக்கவும் திட்டம் தீட்டியுள்ளனர். இதனை சாதாரண பிரச்சினையாக எடுத்துக்கொள்ள முடியாது.இது தொடர்பான விசேட அவதானம் செலுத்த வேண்டும். அரசியல் யாப்பு சபையின் தலைவர் என்ற வகையில் சபாநாயகர் தலையீடு செய்ய வேண்டும். மேலும் இந்த விவகாரம் பிரதமருக்கு கூட தெரியாது என்றார்.
தெளிவுபடுத்திய அநுர எம்.பி.
இதனையடுத்து தெளிவுபடுத்திய எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான அநுர குமார திஸாநாயக்க,
அரசியலமைப்பு சபையின் தலைவராக சபாநாயகர் கரு ஜயசூரியவே உள்ளார். வழிநடத்தல் குழுவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே தலைவராவார். வழிநடத்தல் குழுவின் காரியங்களை இலகுபடுத்த நிபுணர்கள் குழுவை நியமித்தோம். இதன்படி நேற்று (நேற்று முன்தினம்) வழிநடத்தல் குழுவில் நிபுணர் குழுவின் வரைபு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அரசியலமைப்பு வரைபு அல்ல. அடுத்த கட்ட நகர்வுகளை முன்னெடுத்து செல்வதற்காக வரைபு ஒன்று முன்வைக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டதன் பிரகாரம் இந்த அறிக்கை முன்வைக்கப்பட்டதாகும். இதன்போது நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு இணக்கம் இல்லாத நிலைமை ஏற்பட்டது. ஏனெனில் நிபுணர் குழுவிலும் இணக்கம் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆகையால் அந்த வரைபை நிராகரித்து இரு வாரத்தில் பூரண வரைபு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு வழிநடத்தல் குழுவினால் கோரப்பட்டது. இது தான் நடந்த உண்மையாகும் என்றார்.
கபீர் ஹாஷிம் விளக்கம்
இதனையடுத்து நெடுஞ்சாலை மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷிம் குறிப்பிடுகையில்,
நாட்டுக்கு பாதகமான எந்தவொரு அரசியலமைப்பினையும் நாம் கொண்டு வர மாட்டோம். வழிநடத்தல் குழுவில் முன்வைக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இதனை அலட்டி கொள்ள தேவையில்லை. அரசியலமைப்பு பணிகளை மறைமுகமாக நாம் முன்னெடுக்க மாட்டோம். நியூயோர்க் டைம்ஸ் விவாதத்தை மூடி மறைப்பதற்கான முட்டாள தனமான செயற்படுகின்றனர் என்றார்.
இதன்போது தயாசிறி ஜயசேகர மீண்டும் எழுந்து குறிப்பிடுகையில்,
புதிய அரசியலமைப்பினை பலவந்தமாக தயாரிக்க முடியாது. பெரும்பான்மையினரின் ஆதரவு அவசியமாகும். இந் நிலையில் ஜனாதிபதியை பதவி நீக்குவதற்கு சபாநாயகருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது சாதாரணமான பிரச்சினையில்லை என்றார்.
சபாநாயகரின் பதில்
இதன்போது கருத்து தெரிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய நான் ஒருபோதும் ஜனாதிபதியை பதவி நீக்கும் வகையில் செயற்பட மாட்டேன். அதற்கான நோக்கம் எனக்கு இல்லை. அரசியலமைப்பு தொடர்பாக சபையின் அவதானத்திற்கு கொண்டு வந்த விவகாரம் தொடர்பில் தான் அவதானம் செலுத்துகின்றேன் என்று சுட்டிக்காட்டினார்.