வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று நடைபெற்ற வடமாகாண சபையின் அமைச்சரவையின் மோசடி தொடர்பான முக்கிய சபை அமர்வில் பங்குபற்றவில்லை என சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சபையின் 132ஆவது அமர்வு நேற்று கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபையில் இடம்பெற்றது.
சபையின் ஆரம்பத்தில் அவைத் தலைவர் அறிவிப்பின்போது வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று (நேற்று) மின்னஞ்சல் அனுப்பிருந்தார் என்றும், அதில், இன்று (நேற்று) காலை ஒரு நிகழ்வில் பங்கேற்ற பின்னர் மருத்துவமனைக்குச் செல்லவேண்டியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
முடிந்தால் மாலை அமர்வில் பங்கேற்பதாகவும் மின்னஞ்சலில் தெரிவித்துள்ளதாக அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் சபைக்கு அறிவித்தார்.
நேற்றைய சபை அமர்வில், வடக்கு அமைச்சரவை விவகாரம், பளைக் காற்றாலை விவகாரம், கூட்டுறவு அமைச்சின் கீழான மோசடி உள்ளிட்ட முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டன.
சபை அமர்வு பி.ப. 1.30 மணிக்கு நிறைவடையும் வரையில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சபைக்கு வருகைதரவில்லை.