இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக நாட்டில் குறிப்பாக வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் காணப்படும் மழையுடனான வானிலை நிலைமை மேலும் அதிகரிக்குமெனவும் அடுத்த சில நாட்களுக்கு தொடருமெனவும் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய, ஊவா, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100-150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
கரையோரப் பிரதேசங்களில் பல இடங்களில் காலை வேளையிலும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மாத்தறை ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் புத்தளம் தொடக்கம் நீர் கொழும்பு வரையுமான கடற் பிராந்தியங்களில் மணிக்கு 70 – 80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் அதே வேளை குறித்த கடற் பகுதிகள் கொந்தளிப்பாக அமையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.