ஜேர்மனியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இளம்பெண்ணின் இனவெறிக் கவிதை

158

ஜேர்மனியில் நடைபெற்ற கவிதைப் போட்டி ஒன்றில் இனவெறியை வெளிப்படுத்தும் வகையில் ஒரு இளம்பெண் வாசித்த கவிதை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கவிதையை வாசித்த இளம்பெண், Nicole Höchst என்னும் வலதுசாரி அரசியல்வாதியின் மகளான Ida Marie Müller ஆவார்.

தென்மேற்கு ஜேர்மனியின் Speyer நகரில் நடைபெற்ற அந்த கவிதைப்போட்டியில், 100 பார்வையாளர்கள் கூடியிருந்த நிலையில் அவர்கள் முன் Ida அந்த கவிதையை வாசித்தார்.

இனவெறியைத் தூண்டும் விதத்தில் எழுதப்பட்டிருந்த அந்தக் கவிதையில், சமீபத்தில் அகதி ஒருவர் கத்திக் குத்துச் சம்பவத்தில் ஈடுபட்டிருந்த விடயமும் இடம்பெற்றிருந்தது.

பார்வையாளர்கள் அவளது கவிதைக்கு பலத்த கரகோஷம் எழுப்பினாலும், கவிதைப் போட்டியின் அமைப்பாளர்கள் Idaவை போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்தனர். Idaவின் தாயான Nicole Höchst, AfD கட்சியைச் சேர்ந்தவர்.

AfD கட்சி, புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கை கொண்ட கட்சியாகும். Speyer இளைஞர் கவுன்சிலால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த கவிதைப் போட்டி இளைஞர்களுக்கு இனவெறிக்கு எதிரான உணர்வுகளை ஏற்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இளைஞர்கள் இனவெறி குறித்த எண்ணங்கள் நீங்கி நல்லெண்ணத்துடன் வாழ வேண்டும் என ஒரு சாரார் யோசிக்க, Nicole Höchst போன்றவர்களோ பிள்ளைகள் மனதில் நஞ்சை விதைக்கிறார்கள்.

Nicole Höchst சமூக ஊடகங்களில் தனது மகளுக்கு ஆதரவாக இடுகைகள் பதிவு செய்ததோடு, தனது வீட்டின் முன்பும் அவளுக்கு ஆதரவாக படங்களை ஒட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இரண்டு அகதிகளால் ஜேர்மானியர் ஒருவர் கொல்லப்பட்டதாக வந்த செய்தியால் ஜேர்மனியே கொதித்துப்போயிருக்க, இந்த நேரத்தில் Nicole Höchstஇன் மகளுடைய கவிதையும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

SHARE