சர்வதேச நாடுகள் கொடுத்த நெருக்கத்தின் விளைவாக, சுவிஸ் வரித்துறை, பிற நாடுகளுடன் தனது வங்கிக் கணக்கு விவரங்களை முதல்முறையாக பகிர்ந்து கொண்டுள்ள நிலையில், இனி சுவிஸ் வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்க முடியுமா என்னும் கேள்வி எழுந்துள்ளது.
முறைகேடாக சம்பாதித்த கருப்புப் பணத்தை பதுக்கும் ஒரு நாடாக சுவிட்சர்லாந்து பார்க்கப்பட்டு வந்த நிலையில், பல உலக நாடுகள் தங்களது நாட்டு மக்கள் சுவிட்சர்லாந்தில் வைத்திருக்கும் வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில் ஃபெடரல் வரி நிர்வாகம் (FTA) முதல்முறையாக வங்கிக் கணக்கு விவரங்களை பகிர்ந்து கொண்டுள்ளது.
Automatic Exchange of Information (AEOI) என்பது உலக நாடுகளுக்கிடையே வரி ஏய்ப்பை குறைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு ஆகும்.
இதன்படி நாடுகள் குறிப்பிட்ட தகவல்களை கோரிக்கை விடுக்காமலே தானியங்கி முறையில் பெற்றுக் கொள்ள இயலும்.
இந்த திட்டத்தின் கீழ்தான் தற்போது வங்கிக் கணக்கு விவரங்கள் பகிரப்பட்டுள்ளன.
2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் இந்த பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது.
இந்த முதல் பரிமாற்றத்தில், சுவிட்சர்லாந்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளுடனும் அவுஸ்திரேலியா, கனடா, ஐஸ்லாந்து, ஜப்பான், ஜெர்ஸி, நார்வே, தென் கொரியா, Guernsey மற்றும் Isle of Man ஆகிய நாடுகள் மற்றும் பிரதேசங்களுடனும் வங்கிக் கணக்கு விவரங்களை பகிர்ந்துகொண்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி சுமார் 7000 நிதி நிறுவனங்கள் (வங்கிகள், அறக்கட்டளைகள், காப்பீட்டு நிறுவனங்கள் முதலானவை) ஃபெடரல் வரி நிர்வாகத்தின் கீழ் பதிவு செய்துள்ளன.
இந்த நிறுவனங்கள் தாங்கள் சேகரித்த தரவுகளை (Data), ஃபெடரல் வரி நிர்வாகத்திடம் (FTA) அளிக்கின்றன.
FTA, சுமார் 2 மில்லியன் வங்கிக் கணக்குகளைக் குறித்த தகவல்களை தனது கூட்டாளி நாடுகளுக்கு அனுப்பி பதிலுக்கு பல மில்லியன் தகவல்களை பெற்றுக்கொள்கிறது.
எவ்வளவு தொகை தொடர்பான தகவல்கள் பரிமாற்றம் செய்யப்பட்டன என்பது குறித்த தகவல்களை FTAவால் வெளியிட இயலாது.
கணக்கு வைத்திருப்பவரின் பெயர், முகவரி, வாழும் நாடு, tax identification number, நிதி நிறுவனம் குறித்த தகவல்கள், கணக்கில் இருக்கும் தொகை மற்றும் வியாபாரத்தில் வந்த லாபம் ஆகிய விவரங்கள் பரிமாறப்படும்.
பரிமாற்றம் செய்யப்பட்ட இந்த விவரங்கள், வரி செலுத்துவோர், வெளிநாடுகளில் தாங்கள் வைத்திருக்கும் கணக்குகள் குறித்த சரியான விவரங்களை அளித்துள்ளார்களா என்பதை சரி பார்க்கவும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.