முல்லைத்தீவில் சீரற்ற காலநிலை

517
முல்லைத்தீவில் தொடர்ச்சியாக பெய்யும் கன மழையினால் 202 குடும்பங்களை சேர்ந்த 647பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனிடம் ஆதவன் செய்தி பிரிவு தொடர்புகொண்டு வினவியது. இதன்போது அவர் தெரிவித்துள்ளதாவது,  “கடந்த மூன்று  நாட்களாக பெய்த அடை மழையினால் ஆறுகள் மற்றும் சிறிய குளங்கள் உடைப்பெடுத்திருந்தன

மேலும் இம்மழையினால் 202 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சில குடும்பங்கள் தற்காலிக இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அந்தவகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவுகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் அனர்த்தத்திலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக நடவடிக்கைகள் இலங்கை இராணுவத்தினர், விமானப்படையினர், கடற்படையினர் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டன

முல்லைத்தீவு – நித்தகைக்குளம் நேற்று முன்தினம் உடைப்பெடுத்திருந்தது.

இதன்போது  ஆறு பேர் காணமல்போயிருந்தனர். அதனைத் தொடர்ந்து அனர்த்த முகாமைத்துவக் குழுவினர், முப்படையினர், காவற்றுறையினர் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இணைந்து காணாமல் போன குடும்பத்தை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் காணாமல் போயிருந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மற்றும் ஏனைய மூன்று பேர்,நேற்று விமானப்படையினர் மற்றும் இரானுவத்தினரின் உதவியுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்” என ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

SHARE