முன்பள்ளி அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றினை மீட்டுத்தருமாறு கோரி உண்ணாவிரதப் போராட்டம்

166

மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் சிலரினால் தமது முன்பள்ளி அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றினை மீட்டுத்தருமாறு கோரி உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகம் முன்பாக நடாத்தப்பட்டது.தமது முன்பள்ளிக்குரிய காணி, கட்டிடத்தினைப்பெற்றுக்கொள்ளும் வரையில் போராடும் வகையில் துரோகத்திற்கு எதிரான போராட்டம் என்னும் தலைப்பில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் அஸ்ஸக்றா முன்பள்ளியின் தலைவர் உட்பட நிர்வாக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

காத்தான்குடி அஸ்ஸக்றா முன்பள்ளியின் காணி,கட்டிடம் 2014 ஆம் ஆண்டு தம்மிடம் இருந்து அபகரிக்கப்பட்ட நிலையில் தாங்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் குறித்த முன்பள்ளியை வேறு இடத்தில் நடாத்திவருவதாக குறித்த முன்பள்ளியின் தலைவர் எம்.எல்.ஏ.அஸீஸ் தெரிவித்தார்.

கடந்த 19 வருடமாக குறித்த முன்பள்ளியை நடாத்திவந்த நிலையில் அமைச்சர் ஹிஸ்புல்லாவின் அடிவருடிகள், காத்தான்குடி பிரதேச செயலகத்தில் உள்ள சிலரின் உதவியுடன் குறித்த காணியையும் கட்டிடத்தினையும் அபகரித்தாகவும் அதனை மீட்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டபோதிலும் முடியாமல்போனதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

குறித்த காணியை மீட்டுத்தருமாறு தாம் காத்தான்குடி பிரதேச செயலகத்திடம் பலமுறை கோரியபோதிலும் அவர்கள் பக்கச்சார்பான முறையிலேயே செயற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது அங்குவந்த மட்டக்களப்பு மாவட்ட செயலக காணிக்கு பொறுப்பான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்சினி முகுந்தன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.

இதனடிப்படையில் எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு இடையில் குறித்த முன்பள்ளி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வினைப்பெற்றுத்தருவதாக வழங்கிய உறுதிமொழியையடுத்து உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது

SHARE