தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை

246

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை அலரி மாளிகையில் இடம்பெற்றபோது பொதுத் தேர்தல் குறித்தும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பின்போது பாராளுமன்றத் தேர்தலை அடுத்த வருடம் அதாவது 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதுடன் தற்போதைய பாராளுமன்றத்தின் ஆயுள் காலம் முடியும் வரையில் பாராளுமன்றத்தைக் கலைக்கக் கூடாது என்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இதன்போது கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர், அடுத்த வருடம் ஜூலை மாதம் பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்துவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சு நடத்தியதாகவும் சட்டரீதியான அரசு அமைந்த பின்னர், அந்த அரசின் கீழேயே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை நாங்கள், சுதந்திரக் கட்சிக்கு எடுத்துரைத்துள்ளோம். பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளும் இணங்கினால் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடத்த நாங்கள் தயார் என்பதையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சுட்டிக்காட்டியுள்ளோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புதிய அரசியலமைப்பு, காணி விவகாரம், ஐக்கய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட விடயங்களை செய்து முடிப்பதற்கு தற்போதைய பாராளுமன்றம் அதன் ஆயுள் காலம் முடியும் வரையில் கலைக்கப்படக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் த.தே. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE