கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சட்டவிரோதமாகத் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளான இளைஞன், கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்த இரண்டாவது சம்பவமும் பதிவாகியுள்ளது.
கடந்த மாத இறுதியில் சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்த அதே பாணியில் இந்த இளைஞரும் முயற்சித்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் புதன்கிழமை கோப்பாய் பொலிஸ் நிலைய தடுப்புக்காவல் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.
தனக்கு நடந்த கொடுமைகளை அந்த இளைஞர் யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் நேற்று வெளிப்படுத்தினார். அவருடன் தடுத்துவைக்கப்பட்டிருந்த இளைஞனும் பொலிஸ் நிலையத்தில் நடந்தவற்றை நீதிவான் முன்னிலையில் தெரிவித்தார்.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அண்மையில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இருவரை பொலிஸார் கடந்த திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரையும் பொலிஸார் நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் முற்படுத்தினர்.
சந்தேகநபர்களை இரண்டு நாட்ளுக்கு மேலாக பொலிஸார் தடுத்துவைத்திருந்தனர் என்று நீதிவானிடம் முறையிடப்பட்டது.
“என்னை மூன்று நாள்களாகத் தடுத்துவைத்து பொலிஸார் கடுமையான சித்திரவதைக்குட்படுத்தினர். அதன் வலி தாங்க முடியாமல் பிளேட்டால் எனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்தேன்.
பொலிஸாரின் தாக்குதலால் எனது கைகள் இரண்டும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன” என்று சந்தேகநபர் நீதிவானிடம் தெரிவித்தார்.
தற்கொலைக்கு முயற்சித்த சந்தேகநபரின் நிலமையையும் தனக்கு நடந்த சித்திரவதையையும் மற்றைய சந்தேகநபரும் நீதிவானிடம் கூறினார்.
சந்தேகநபர்கள் இருவரையும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தி பெற்றுக்கொண்ட சட்ட வைத்திய அறிக்கையும் பொலிஸார் சமர்ப்பித்தனர்.
சந்தேகநபர்கள் மீதான குற்றச்சாட்டை விசாரித்த நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், அவர்களை பிணையில் விடுக்க உத்தரவிட்டார்.