9 இந்திய மீனவர்கள் எச்சரிக்கையுடன் விடுதலை

566

யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ஒன்பது மீனவர்களுக்கும் , ஐந்தாண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டாண்டு கடூழிய சிறைத்தண்டனை விதித்து மீனவர்களை கடுமையாக எச்சரித்து ஊர்காவற்துறை நீதிமன்று விடுவித்துள்ளது.

யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒன்பது தமிழக மீனவர்களை கடற்படையினர் கடந்த 13 ஆம் திகதி அதிகாலை கைது செய்தனர்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்களை அன்றையதினம் மாலை கடற்படையினர் யாழ்.மாவட்ட நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அன்று மாலை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் அ.ஜூட்சன் முன்னிலையில்  ஆஜர்படுத்தப்பட்டனர்.

அதனை அடுத்து மீனவர்கள் ஒன்பது பேரையும் விளக்கமறியலில் தடுத்து வைக்க நீதிவான் உத்தரவிட்டார். அந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் அ. ஜூட்சன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது , ஒன்பது மீனவர்களையும் கடுமையாக எச்சரித்த நீதிவான் , ஐந்தாண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டாண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

அதேவேளை , மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகளின் உரிமையார்கள் படகுகளின் ஆவணங்களுடன் எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராக வேண்டும் என நீதிவான் உத்தரவிட்டுள்ளார். தவறும் பட்சத்தில் படகுகள் அரசுடமையாக்கப்படும் என நீதிவான் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE