முக்கிய படுகொலைகள் தொடர்பில் 11 படையினர் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளவுள்ளனர்

302

கடந்த காலங்களில் இடம்பெற்ற முக்கிய படுகொலைகள் தொடர்பில் அடுத்த இரு வாரங்களில் 11 படையினர் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளவுள்ளனர் என பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

மிகவும் ஈவிரக்கமற்ற படுகொலைகளில் ஈடுபட்ட 11 படையினரிற்கு எதிராக சட்டநடவடிக்கையை எடுக்கவுள்ளோம் என பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

படையினர் இழைத்த குற்றங்கள் குறித்த தகவல்கள் ஆதாரங்கள் இருப்பின் அவற்றை சமர்ப்பிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொலைகள் இடம்பெற்றமைக்கான ஆதாரங்கள் ஏதாவதுயிருந்தால் அவற்றை சமர்ப்பிக்குமாறு புலம்பெயர் தமிழர்களை கேட்டுக்கொள்கின்றேன் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

படையினர் சட்டங்களிற்கு அப்பாற்றபட்டவர்கள் இல்லை என தெரிவித்துள்ள பாதுகாப்பு செயலாளர் படைவீரர் எவராவது குற்றமிழைத்தால் அவர் நீதிமன்றத்தின் முன்நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார்.

யுத்தவெற்றி வீரர் ஒருவர் எப்போது கொலைகளில் ஈடுபடுகின்றாரோ அதன் பின்னர் அவர் யுத்தவெற்றிவீரர் என்ற நிலையை இழந்துவிடுவார் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ  தெரிவித்துள்ளார்.

அவரை இலங்கை நீதிமன்றத்தின் முன்நிறுத்தி இலங்கை சட்டங்களின் கீழ் விசாரணை செய்யவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் வர்த்தமானி அறிவித்தல் மூலம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுபவரே யுத்தவெற்றிவீரர் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 39,000 யுத்தவெற்றிவீரர்கள் மாத்திரமே உள்ளனர் அவர்களில் 34000பேர் இராணுவத்தில் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ள ஹேமசிறி பெர்ணான்டோ  நீங்கள் யுத்தவெற்றி வீரராவதற்கு அரசாங்கத்தின் வர்த்தமானி மூலம் உங்களிற்கு பதக்கம் கிடைக்கவேண்டும்,எனவும் குறிப்பிட்டுள்ளார்

இராணுவத்தில் மூன்று மாதங்களிற்கு முன்னர் இணைந்துகொண்டவர் தன்னையும் யுத்தவெற்றி வீரரான கருதுகின்றார் எனவும்  பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்

SHARE