வாகரைப் பிரதேச சபையின் பெண் உறுப்பினர் ஒருவரது கணவரின் சடலம் வாவியிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர். வாகரை அழகாபுரியைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான காளிக்குட்டி சுதாகரன் (வயது 38) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இவர் வாகரைப் பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பு பெண் உறுப்பினரான குமுதலெட்சுமியின் கணவரெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன் பிடித் தொழிலாளியான இவர் தட்டுமுனை ஆற்றில் இறால் பிடிப்பதற்காக வலை கட்டுவதற்கு ஞாயிற்றுக்கிழமை பகல் 10 மணியளவில் சென்றிருந்தார்.
எனினும் அவர் இரவாகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதன் காரணமாக திங்கட்கிழமை 21 இச்சம்பவம் குறித்து வாகரைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து பொலிஸாரும், மீனவர்களும், பிரதேச பொதுமக்களுமாகத் தேடியும் காணாமல் போனவரைப் பற்றிய எதுவித தடயங்களும் கிடைத்திருக்காத நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை 22. காலை தட்டுமுனை ஆற்றிலிருந்து சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இவர் வலிப்பு நோய் உள்ளவர் என்று தெரிவித்த உறவினர்கள் சேறும் சகதியுமான ஆற்றில் வலை கட்டும்போது வலிப்பு நோய் ஏற்பட்டதன் காரணமாக வாவியில் வீழ்ந்து சேற்றில் புதையுண்டிருக்கலாம் என ஊகம் தெரிவித்துள்ள நிலையில் பொலிஸார் இச்சம்பவம் பற்றிய விரிவான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
சடலம் உடற்கூறாய்வு சட்ட வைத்திய பரிசோதனைகளுக்காக வாகரை மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.