காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை

174

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில தினங்களாக நிலவி வந்த வெப்பமான காலநிலை தனிந்து மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலநிலை தொடர்பில் இன்று அதிகாலை வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும்.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்தும் நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும், இரத்தினபுரி, மொனராகலை மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் பி.ப இரண்டு மணிக்கு பின் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலையும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பொத்துவிலிலிருந்து திருகோணமலை ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றானது தென்கிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 10 – 20 கிலோமீற்றர் வரை காணப்படும்.

புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 25 – 35 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த சில நாட்களாக இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து வந்த வெப்பமான காலநிலை காரணமாக நாட்டு மக்கள் பெரும் சிரமத்திற்கு முகம்கொடுத்திருந்தனர்.

அத்துடன் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல இடங்களில் கடும் வெப்பம் காரணமாக உயிரிழப்புக்களும் ஏற்பட்டிருந்ததாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE