
இன்றைய தனிமனித உறவு நிலைகள், குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை போன்றவற்றில் ஏற்படும் பல சிக்கல்கள், வன்முறைகள், கலவரங்கள், உயிர்ப்பலிகள் போன்றவற்றிற்கான மூல காரணம் பழிவாங்கும் உணர்ச்சியாகும். தனக்கு தீமை செய்த ஒருவனை, தனக்கு அவமரியாதை ஏற்பட காரணமான ஒரு மனிதனை, பாதிக்கப்பட்டவன் எவ்வாறேனும் பழிவாங்க துடிக்கிறான். இதன் விளைவு தான் சமூகத் தீமைகள் மற்றும் வன்முறைகளின் பெருக்கம். இவற்றை தவிர்க்கவும் வாழ்வில் இன்பமும், அமைதியும் மலரவும் என்ன செய்யவேண்டும்? தவறிழைத்தவரை மன்னிக்கும் மன நிலையை ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும்; சமூக அமைதிக்கு மன்னிப்பு ஒன்று தான் மருந்து.
அமெரிக்காவில் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடத்தியதில், நரம்புக் கோளாறு, கோபம் முதலிய குறைபாடுடையவர்கள் தாம் பழிவாங்கும் பண்புடையவர்களாக இருக்கின்றனர். மன்னிக்கும் பண்புடையவர்கள் மகிழ்ச்சியும், உடல் நலமும் உடையவர்களாக வாழ்கின்றனர் என்ற முடிவு வெளிப்பட்டுள்ளது. மன்னிக்கும் மாண்புடைய மனிதர்களின் இதயம், மூளை, நரம்பு மண்டலம் முதலியன சிறந்த முறையில் இயங்குகின்றன என்ற உண்மையும் வெளிப்பட்டது.