உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து,பொலிஸ் உயர் பதவிகள் தொடர்பிலான விவாதங்கள் அதிகரித்த இலையில், பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவர் இன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்.
நேற்று வரை பொலிஸ் நிர்வாக நடவடிக்கைகளைக் கையாண்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன இன்று பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார்.
இதுவரை பொலிஸ் மா அதிபராக இருந்த பூஜித் ஜயசுந்தர, பதவி விலகாத போதும் தொடர்க் குண்டுத் தாக்குதல்கள் குறித்த விசாரணைகள் நிறைவடையும் வரை அவர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார்.
இதன் பிரகாரமே சந்தன விக்ரமரத்ன பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்க் குண்டுத் தாக்குதல்கள் குறித்த உளவுத் தகவல்களை உரிய முறையில் முகாமைத்துவம் செய்யாமை தொடர்பில் பொலிஸ் மா அதிபராக இருந்த பூஜித் ஜயசுந்தர மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இது தொடர்பில் அவரை இராஜினாமா செய்ய ஜனாதிபதியால் ஏற்கனவே கோரப்பட்ட போதும், அதனை அவர் நிராகரித்துள்ளார்.
இந்நிலையிலேயே பாதுகாப்பு அமைச்சு, பூஜித் ஜயசுந்தர்வை கட்டாய விடுமுறையில் அனுப்பியுள்ளதுடன், ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் பதில் பொலிஸ் மா அதிபராக சந்தன விக்ரமரத்னவை ஜனாதிபதி இன்று நியமித்தார்.