பஞ்சாப் அணியின் இணை உரிமையாளரும் இந்தியாவின் பிரபல வர்த்தக பிரமுகருமான நெஸ்வடியா போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து பஞ்சாப் அணி இடைநிறுத்தப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
நெஸ்வடியா ஜப்பானின் கொக்கொய்டோ தீவிற்கு அருகில் 25 கிராம் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து ஜப்பானிய நீதிமன்றம் அவரிற்கு சிறைத்தண்டனை விதித்துள்ளது.
இதேவேளை இதன் காரணமாக பஞ்சாப் அணிக்கு ஆபத்து எழுந்துள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐபிஎல் தொடரில் விளையாடும் அணிக்கோ இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைக்கோ மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் விதத்தில் அணிகளின் அதிகாரிகள் செயற்பட முடியாது என இந்திய கிரிக்கெட் கட்டு;ப்பாட்டுச்சபை வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
அணியை சேர்ந்த அதிகாரியொருவர் குற்றவாளி என்பது உறுதியானால் அணியை ஐபிஎல் போட்டிகளிலிருந்து இடைநிறுத்தலாம் எனவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சென்னை அணியின் அதிகாரிகளின் நடவடிக்கைகள் காரணமாக சென்னை சுப்பர் கிங்ஸ் நெருக்கடிகளை எதிர்கொண்டு ஐபிஎல்லில் விளையாட முடியாத நிலை உருவானவதை சுட்டிக்காட்டியுள்ள பிசிசிஐ அதிகாரிகள் பஞ்சாப் அணி நெருக்கடியில் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
உரிமையாளர் போதைப்பொருள் வைத்திருந்தமை உறுதியாகியுள்ளதால் பஞ்சாப் அணி இடைநிறுத்தப்படலாம் என தெரிவித்துள்ள அதிகாரி பஞ்சாப் அணி முற்றாக தடைசெய்யப்படும் ஆபத்தும் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.