போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இத்தாலி செல்ல முயற்சித்த வடக்கு இளைஞர்கள் கைது

386
போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி இத்தாலிக்கு செல்ல முயற்சித்த வடக்கைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இளைஞர்கள் இருவரும் தலா இரண்டு கடவுச்சீட்டுக்களை வைத்திருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பஹ்ரெய்ன் ஊடாக இவர்கள் இத்தாலி செல்ல முயற்சித்துள்ளனர். நேற்றிரவு குறித்த இளைஞர்களை கட்டுநாயக்க விமான நிலைய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தின் ஊடாக மஹின் ஏயார் விமானம் ஒன்றின் ஊடாக இவர்கள் இத்தாலி செல்ல முயற்சித்திருந்தனர். ஆவணங்களை பரிசோதனை செய்த போது ஒவ்வொரு இளைஞரிடமும் இரண்டு கடவுச்சீட்டுக்கள் காணப்பட்டமை கண்டறியப்பட்டது.

பழைய கடவுச்சீட்டை காணவில்லை எனத் தெரிவித்து புதிய கடவுச்சீட்டைப் பெற்றுக்கொண்டுள்ளனர். புதிய கடவுச்சீட்டுக்கு பஹ்ரெய்ன் வீசா பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் பழைய கடவுச்சீட்டில் போலி இத்தாலி வீசா ஒட்டப்பட்டுள்ளது.

பஹ்ரெய்ன் சென்று அங்கிருந்து போலி வீசா ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பழைய கடவுச்சீட்டை பயன்படுத்தி இத்தாலி செல்ல இந்த இளைஞர்கள் திட்டமிட்டிருந்தமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. சந்தேக நபர்கள் இருவரும் நீர்கொழும்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

SHARE