இலங்கையின் உள்விவகாரங்களில் தேவையற்ற தலையீடுகளை மேற்கொள்ள இந்தியா கதவை திறந்துள்ளதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தச் சட்டத்திற்கும் அப்பால் சென்ற அதிகார பகிர்வை வழங்குவது குறித்து இலங்கை கவனம் செலுத்த வேண்டும் எனக் நரேந்திர மோடி கூறியமை இதற்கு உதாரணமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள அதிகாரங்களுக்கு மேல் அதிகாரங்களை வழங்குமாறு கூறுவது மிகவும் கெடுதியான நிலைமையாகும்.
இதனை அரசியல் பலவந்தம் என்றே நாங்கள் கருதுகிறோம். எந்த நாட்டின் தலைவரும் வேறு நாடு ஒன்றின் நாடாளுமன்றத்தில் உரையாற்றி, அரசியல் அமைப்புச் சட்ட மாற்றுமாறோ, அதற்கும் அப்பால் செல்ல வேண்டும் என்றோ கருத்தை முன்வைக்க மாட்டார்.
எனினும் இலங்கைக்கு வந்த மோடி அப்படியான கருத்தை முன்வைத்தார். இது கெடுதியான நிலைமை, அதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவையில்லை.
இலங்கை அரசியலமைப்பு சம்பந்தமாக மட்டுமல்ல, இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பாகவும் இந்திய பிரதமர் தேவையற்ற அழுத்தங்களை கொடுத்து வருகிறார்.
பலாலி விமானப்படையின் விமான நிலையத்தை சிவில் விமான நிலையமாக மாற்ற வேண்டும் அந்த விமான நிலையத்திற்கு இந்தியாவில் இருந்து சிவில் விமானங்கள் தரையிறங்க வேண்டும் எனவும் மோடி அழுத்தம் கொடுக்கின்றார்.
இது முழுமையாக வடக்கின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும். சிவில் விமான நிலையம் இயங்கினால், அந்த இடத்தில் விமானப்படை முகாமை கொண்டிருக்க முடியாது.
இதே போன்ற நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான அழுத்தங்களை இந்தியா கொடுத்து வருகிறது எனவும் வசந்த பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.