
சருமத்தை பாதுகாப்பதில் சருமத்தில் சுரக்கும் எண்ணெய்க்கு முக்கிய பங்கு இருக்கிறது. அது சருமம் ஈரப்பதமாக இருப்பதற்கு வழிவகை செய்யும். சருமத்திற்கும் ஆரோக்கியம் சேர்க்கும். ஆனால் சருமத்தில் பெரிய துளைகள் இருந்தால் சரும எண்ணெய்யின் செயல்பாடுகளும் பாதிப்புக்குள்ளாகும். வீட்டு உபயோகப்பொருட்கள் சிலவற்றை பயன்படுத்தி சரும நலனை பாதுகாக்கும் வழிமுறைகளை காண்போம்.
தயிர்: இது சருமத்தை ஈரப்பதமாக்கும் தன்மை கொண்டது. கொரிய நாட்டு சரும அறிவியல் ஆய்வகம் நடத்திய ஆய்வில் தயிரை கொண்டு ‘பேஸ் மாஸ்க்’ தயாரித்து முகத்தில் பூசிவருவதன் மூலம் சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ளலாம் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தயிரில் காணப்படும் லாக்டிக் அமிலம் இறந்த செல்களை அகற்ற உதவும். மேலும் சரும துளை களை இறுக்கமடைய செய்யவும் துணைபுரியும். முகப்பரு பிரச்சினையில் இருந்தும் நிவாரணம் பெற்றுத்தரும்.
தக்காளி: இது உடலில் ரத்தத்தை அதிகரிக்கச்செய்யும் தன்மை கொண்டது. தக்காளியை சாறு எடுத்து தினமும் முகத்தில் பூசுவதன் மூலம் முகப்பரு பிரச்சினையில் இருந்து விடுபட்டுவிடலாம். சருமத்தில் எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பதை கட்டுப்படுத்தவும் செய்யும். சரும துளைகளை குறைக்கவும் உதவும். தக்காளியை நன்றாக மிக்சியில் அடித்து அதன் சாறை முகத்தில் நன்றாக தேய்த்துவிட்டு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவலாம்.
ஆப்பிள் சிடேர் வினிகர்: இது முகப்பருக்களை போக்க உதவும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டது. இதில் கந்தகம் இருப்பதால் சருமத்தை இறுக்கமடைய செய்து சுருக்கங்களை குறைக்க உதவும். மேலும் சருமத்தின் பி.எச் அளவை சமநிலையில் வைத்திருக்கவும் துணைபுரியும். சருமத்தில் படிந்திருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசைத்தன்மையை சுத்தம் செய்து அடைப்பட்ட துளைகளை திறக்கவும் வைத்துவிடும். அரை கப் ஆப்பிள் சிடேர் வினிகரை நான்கு டம்ளர் நீரில் கலந்து கொள்ளவும். அதில் பஞ்சை முக்கி சருமத்தில் தடவி மசாஜ் செய்துவரவும். தினமும் இவ்வாறு செய்துவந்தால் சரும அழகு மேம்படுவதை காணலாம்.