தேசிய நிறைவேற்றுச் சபையைக் கலைக்குமாறு கோரிக்கை விடுத்த ஜே.வி.பி., பொதுத் தேர்தலையும் விரைந்து நடத்துமாறும் வலியுறுத்தியுள்ளது. ஜே.வி.பியின் செய்தியாளர் மாநாடு அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்து வெளியிட்ட அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. கூறியவை வருமாறு:- “100 வேலைத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கே கடந்த ஜனவரி 8ஆம் திகதி மக்கள்ஆணை ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுத்திரிக் கட்சியும் இணைந்து ஆட்சியமைக்க மக்கள் ஆணை வழங்கவில்லை. அத்துடன், தேசிய நிறைவேற்று சபையின் செயற்பாடுகளும் நிறைவடைந்தள்ளன. எனவே, தேசிய நிறைவேற்று சபையையும், நாடாளுமன்றத்தையும் உடனடியாகக் கலைக்க வேண்டும்.
ஜனவரி 8 ஆம் திகதி மைத்திரிபால சிறிசேனவை மக்கள் ஜனாதிபதியாக தெரிவுசெய்தது ஊழல், செய்தவர்களை தண்டிக்கவும் மீண்டும் இந்த நாட்டில் ஜனநாயகத்தை கட்டியெழுப்பவுமே தவிர ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சியமைத்துக்கொள்வதற்காகவல்ல. சர்வதிகார ஆட்சியில் இருந்து இந்த நாட்டை ஜனநாயக ரீதியாக கட்டியெழுப்ப வேண்டிய கடப்பாடு ஜனாதிபதிபதிக்குள்ளது. 2010 ஆண்டு கொள்ளை கும்பலான மஹிந்தவின் குடும்பம் மூலம் கட்டியெழுப்பிய நாடாளுமன்றத்தை வைத்துக்கொண்டு இந்த நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த முடியாது. 19 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதை தடுக்க மஹிந்தவின் கொள்ளைகார கும்பல் பெரும் சதிவேலைகளைச் செய்தது. இவர்களை வைத்துக்கொண்டு நாட்டில் எவ்வாறு நல்லாட்சியை ஏற்படுத்துவது? கட்சி விட்டு கட்சி தாவும் சட்டத்தை 19 ஆவது திருத்தத்தில் இருந்து அகற்றினார்கள். எனவே, இவர்களை வைத்துக்கொண்டு 20 ஆவது திருத்தத்தை, தகவல் அறியும் சட்டத்தையோ, தேசிய கணக்காய்வு சட்டத்தையோ நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாது. மக்கள் ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் எதிர்பார்கின்றனர். ஆகவே, தேசிய நிறைவேற்று சபையையும் , நாடாளுமன்றத்தையும் உடனடியாகக் கலைக்க வேண்டும்”