அம்பாந்தோட்டையில் இருந்து கொண்டு வரப்பட்ட 5000 குடும்பங்களை ‘கலாபோகஸ்வேவ’ என்ற கொக்கச்சாங்குளத்தில் குடியேற்றியுள்ளனர். அங்கு இராணுவமும் ஓர் அரசியல்வாதியும் அரசாங்க அதிபரும் மாத்திரமே செல்ல முடியும். வேறு எவரும் செல்ல முடியாது. அங்குள்ள சிங்களவர்களை கோழிக்குஞ்சு வளர்ப்பதை போன்று வளர்க்கின்றனர்.

410

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களால் ஒரு அரசாங்க அதிபரைக் கூட மாற்ற முடியாது என்றால் எப்படி எங்களின் பிரச்சினைகளை தீர்க்கப் போகிறீர்கள்? – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினரான ஜி.ரி.லிங்கநாதன் கேள்வி எழுப்பியிருக்கிறார். வட மாகாணசபைக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட எம்.பி.நடராஜாவின் வரவேற்பு நிகழ்வு வவுனியாவில் நேற்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

linganathan 2015 05 11

தொடர்ந்து உரையாற்றிய அவர் அங்கு தெரிவித்த விடயங்கள் வருமாறு:- வட மாகாண சபை கடந்த காலங்களில் இயங்க முடியாமல் இருந்தமைக்கு காரணம் முன்னைய அரசும் ஆளுநர் உட்பட பிரதம செயளாலருமாக இருந்தனர். ஆனால் தற்போது ஆளுநர் உட்பட பிரதம செயலளாரும் மாற்றப்பட்டு விட்டனர். இதன் காரணமாக தற்போது நான் உட்பட வட மாகாணசபை உறுப்பினர்களும், அமைச்சர்களும் இனி மேடை சரியில்லை என கூற முடியாது. ஆகவே மிகுதிக் காலங்களில் நாம் முடிந்தவரை மக்களுக்கு சேவை செய்யவேண்டும். மாகாண சபை என்பது எமது இனப் பிரச்சினைக்கான ஒரேயொரு உத்தியோகபூர்வமான பதிவு.

ஆனால் அதை செய்வதற்கு மத்திய அரசு விடாவிட்டாலும் கூட மக்களின் தேவைகளை இனம் கண்டு செய்ய வேண்டிய சட்ட ரீதியான தார்ப்பரியங்கள் எங்களது மாகாண சபைக்கு எவ்வளவோ உள்ளன. அதை இல்லை என்று சொல்ல முடியாது. எதற்கு எடுத்தாலும் காரணம் காட்டி நிற்க முடியாது. இந்திய அரசால் எங்களுக்கு வழங்கப்பட்ட 50 ஆயிரம் வீடுகளில் விகிதாசாரத்தின்படி பார்த்தால் எங்களுடைய தமிழ் மக்களை விட ஏனைய இனத்தவர்களுக்கு அதிகமாகவே சென்றுள்ளது. வவுனியா தமிழ் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பழைய கற்பகபுரம், கந்தன்குளம், பொன்னாவரசன்குளம், அரசன்குளம், மருதன்குளம் போன்ற பல கிராமங்களின் மக்கள் 2009 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் வழங்கிய அதே தகரத்துடன் தற்போதும் மலசலகூடம் கூட இல்லாமல் இருக்கின்றார்கள்.

ஆகவே இந்த மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏதேனும் செய்யவேண்டும். இல்லையேல் எமக்கு வாக்களித்த மக்களிடம் நாம் திரும்பவும் போகமுடியாது என்பதே உண்மை. நல்லிணக்க அரசு நல்லதொரு மாற்றம் என்பது உண்மையாக இருக்கலாம். ஜனநாயக ரீதியாக துணிந்து நாம் கதைக்ககூடிய நிலையை இந்த அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மையாக இருந்தாலும் 19 ஆவது திருத்த சட்டத்தில் எங்களைப் பற்றி எதுவுமே சொல்லப்படவில்லை என்பது தமிழ் மக்களை பொறுத்தவரை மிகப்பெரிய கவலையாகும். எழுத்து மூலமாக இல்லாவிட்டாலும் வாய் மூலமாகவேனும் ஜனாதிபதியோ, பிரதமரோ அல்லது தற்போதுள்ள தேசிய அரசாங்கமாவது ஒரு வசனம் கூட எமக்கு திருப்திபடுத்துவதற்காக கூட சொல்லவில்லை. இந்த நிலையில் கொஞ்ச நாளைக்கு இந்த அரசை விட்டு பிடிக்கலாம் என்ற அன்புக் கட்டளைகள் அல்லது கட்டளைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகளால் எமக்கு வந்து கொண்டிருக்கின்றன. இதற்கும் அப்பால் வவுனியா அரசாங்க அதிபர் மக்கள் பிரதிநிதிகளை மதிக்காத தன்மை காணப்படுகின்றது. கற்குளம் மக்களின் ஆர்ப்பாட்டத்தின் போது வவுனியா அரசாங்க அதிபர் என்னுடன் மிகமோசமாக நடந்துகொண்டார்.

இது தொடர்பாக மூன்று நாடாளுமன்ற உறுப்பினர் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட ஒரு அமைச்சருமாக கையெழுத்து வைத்து ஜனாதிபதிக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டது. இது தவிர மாகாணசபையில் விசேட கவனயீர்ப்பு பிரேரணையை வட மாகாண சுகாதார அமைச்சரும் இவ் விடயம் தொடர்பாக கொண்டு வந்திருந்தார். இவ் விடயம் தொடர்பாக இதுவரை ஒன்றுமே நடக்கவில்லை. இங்கு கலந்து கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், இதைவிட கூட்டமைப்பு கட்சிகளின் தலைவர்களாக உள்ள மாவை சேனாதிராஜா மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கு ஒரு அரசாங்க அதிபரை மாற்ற முடியாது என்றால் எப்படி எங்களது பிரச்சினையை தீர்க்கப் போகின்றீர்கள். நீங்கள் அரசாங்கத்துடன் பேசுகிறீர்கள். தொலைபேசியில் கூட அவர்களுடன் கதைக்க முடியும். தேசிய சபையிலும் இருக்கிறீர்கள். அப்படி இருந்தும் உங்களால் தீர்க்க முடியாது என்றால் எம்மை செயற்பட விடுங்கள். அரசாங்க அதிபரை மாற்றுவது எதற்காக என்றால் 2009 ஆம் ஆண்டு இந்திய அரசால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டம் கிடைக்காமல் எமது மக்கள் தகரத்துடன் இருப்பதற்கு முக்கிய காரணம் வவுனியா அரசாங்க அதிபரே. இந்த மக்களுக்காக எந்த ஒரு வேலைத் திட்டத்தையும் அவர் செய்யவில்லை.

அண்மையில் அம்பாந்தோட்டையில் இருந்து கொண்டு வரப்பட்ட 5000 குடும்பங்களை ‘கலாபோகஸ்வேவ’ என்ற கொக்கச்சாங்குளத்தில் குடியேற்றியுள்ளனர். அங்கு இராணுவமும் ஓர் அரசியல்வாதியும் அரசாங்க அதிபரும் மாத்திரமே செல்ல முடியும். வேறு எவரும் செல்ல முடியாது. அங்குள்ள சிங்களவர்களை கோழிக்குஞ்சு வளர்ப்பதை போன்று வளர்க்கின்றனர். ஏனெனில் அடுத்த தேர்தலில் தமிழர்களின் வாக்குகளை சமப்படுத்துவதற்காக இந்த வேலைத்திட்டம் இடம்பெறுகின்றது. ஆகவே இங்கு இவ்வாறான பல விடயங்கள் இடம்பெறுகின்றது. ஆகவே பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தலைவர்கள் என்ற பதவியில் இருந்து கொண்டு செய்யுங்கள் இல்லாவிட்டால் விடுங்கள் நாங்கள் வீதியில் இறங்குகின்றோம் எனவும் தெரிவித்தார்

SHARE