இளைஞர்களிடையே தமிழ்த் தேசிய உணர்வை விதைக்க வேண்டும் – பா.அரியநேத்திரன்

397
தமிழர்களது பாரம்பரியம், கலை, கலாச்சாரங்களை தொடர்ச்சியாக தக்கவைக்க வேண்டுமாக இருந்தால் இளைஞர்கள் மத்தியில் தமிழ்த் தேசிய உணர்வு ஊட்ட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

அதன்மூலம் தான் நாம் எமது அரசியல் பலத்தினை தக்கவைத்துக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நேற்று மட்டக்களப்பு சின்ன ஊறனி காந்தி ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் சித்திரை புத்தாண்டு விளையாட்டு நிகழ்வு அதன் தலைவர் கே.முரளி தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுபபினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், சித்திரை புத்தாண்டை முன்னிட்டு, விளையாட்டுக்கழகங்கள் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளை நடத்திவருகின்றனர். இவர்கள் ஏன் இந்த விளையாட்டு நிகழ்வுகளை நடத்துகின்றார்கள் என நாம் ஒரு நிமிடம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

நாங்கள் இந்த நாட்டிலே பாரம்பரியமான ஒரு இனம் என்பதனால் எங்களுடைய பாரம்பரியத்தை தொடர்ந்து தக்கவைக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறான விளையாட்டு நிகழ்வுகளை நடத்துகின்றார்கள்.

அதிலும் குறிப்பாக காந்தி ஸ்டார் விளையாட்டு கழகம் மாத்திரம் மாநகர எல்லைக்குள் இருந்து இந்த விளையாட்டை நடத்தி வருகின்றார்கள். இளைஞர்களிடையே வெறுமனே விளையாட்டுக்களை மாத்திரம் நடத்துவதனாலோ அல்லது கலை நிகழ்ச்சிகளை நடத்துவதனாலோ, தங்களுடைய பாராம்பரியங்களை தொடர்ந்து தக்கவைக்கமுடியாது.

மாறாக தமிழ்த் தேசிய உணர்வை அனைத்து இளைஞர்களிடத்தும் வளர்க்க வேண்டும் அப்போதுதான் எமது பாரம்பரியங்களை பேணிப்பாதுகாத்து வளர்க்க முடியும். இந்த நாட்டிலே தற்போது ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது.

ஆனால் 100 நாள் வேலைத்திட்டம் என்று ஆரம்பித்தவர்கள் இன்று 110 நாட்கள் கழிந்தும் தமிழ் மக்களுடைய மனங்களை வென்றெடுப்பதற்கான எந்த வேலைத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்தவில்லை. குறிப்பாக எமது இனத்திற்கான நிரந்தரத்தீர்வு என்ற விடயத்தில் தற்போதைய அரசும் அசமந்தப்போக்கான செயற்பாட்டையே பின்பற்றி வருகின்றது.

இந்த காலதாமதமான விடயங்களை கருத்தில் கொண்டு எதிர்வரும் தேர்தலை தமிழ்மக்கள் நலன் சார்ந்த தேர்தலாக மாற்றுவதற்கு அனைத்து இளைஞர்களும் ஒற்றுமையாக இருந்து தமிழ்த்தேசியத்தை வளர்ப்பதில் அக்கறை செலுத்தவேண்டும்.

எதிர்வரும் தேர்தல் எந்த முறையில் இடம்பெறப் போகின்றது என பல ஆய்வாளர்களும் தங்களது கருத்துக்ளை முன்வைத்திருக்கின்றார்கள். ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தினை மையப்படுத்தி பார்க்கும்போது 75 வீதமான தமிழர்கள் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இதனடிப்படையில் இந்த மாவட்டத்தில் 4 அல்லது 5 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு நாம் உழைக்க வேண்டும். வரலாறு என்ன என்பது நம் அனைவருக்கும் தெரியும் இந்த விகிதாசாரத்தினை பயன்படுத்தி எமது தமிழ்த்தேசியத்தினை சிதைப்பதற்கான வேலைப்பாடுகளில் தமிழர்கள் இல்லாத பல தமிழர்கள் மாற்றுக்கட்சிகளில் இருந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இத்தோடு இன்னும் பல பேரினவாத கட்சிகளில் உள்ள தமிழர்களும் எதிர்வரும் தேர்தலில் எமது தமிழ் மக்களிடம் வாக்குகளை கேட்டு வருவார்கள். இந்த விடயத்தில் இளைஞர்களுடைய பங்களிப்பு மிகவும் அவசியமானதொன்றாகும்.

இன்றைய இளைஞர்கள் உலக அரங்கில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து நாட்டு நடப்புக்களையும் தற்போதைய அரசியல் சூழலையும் அறிந்து செயற்படும் வல்லமை கொண்டவர்கள். ஆகவே எமது இனத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் இளைஞர்கள் ஒற்றுமையாக தமிழ்த்தேசிய உணர்வுடன் இருந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

பாரம்பரியத்தை கட்டிக்காக்க எவ்வளவு தூரம் செயற்படுகின்றோமோ அதே போன்று எதிர்வரும் தேர்தலில் தமிழ்த்தேசியத்தை நிலைநாட்டி அதனை பலப்படுத்த அனைவரும் முன்னின்று உழைக்கவேண்டும், அத்துடன் எமது இனத்தை சார்ந்த எத்தனையோ இளைஞர்கள் தமிழ் மக்களின் இன விடுதலைக்காக மாவீரர்களாகி வரலாற்று காவியம் படைத்திருக்கின்றார்கள்.

எனவே அவர்களின் தியாகத்திற்கு நாங்கள் அனைவரும் மதிப்பளித்து எங்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு பொறுப்புடன் செயற்பட்டு எமது கலை கலாச்சாரங்களை கட்டிக்காக்க வேண்டும் என தெரிவித்தார்.

SHARE