முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்சவின் தலைமையிலான நீலப்படையணி வேறு பெயரில் இயங்கவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் நீலப்படையணி என்ற இளைஞர் அமைப்பு கலைக்கப்பட்டது.
இந்த அமைப்பினை வேறும் பெயரில் மீளவும் இயங்கச் செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
அண்மையில் நாரஹன்பிட்டி அபயாரமயவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற கூட்டமொன்றில் நீலப்படையணியை மீள இயங்கச் செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
நீலப்படையணியின் தலைவர் நாமல் ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க மற்றும் படையணியின் உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
தற்போதைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணி தம்மை கண்டுகொள்வதில்லை எனவும் இதனால் தமக்கும் ஓர் இளைஞர் முன்னணி அவசியம் எனவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நீலப்படையணி வேறும் பெயரில் உருவாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த அரசாங்க காலத்தில் நீலப்படையணி மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.